Friday, 29 July 2016

நம்பிக்கை நட்சத்திரம் / உடையும் குமிழ்கள்

கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு. டீசர் வெளியான நாளிலிருந்தே எப்படியும் முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கணும் என்ற வெறி ஆறுமுகத்தைப் பிடித்து ஆட்டியது. கூட வேலை பார்க்கும் ஷகாபுதீனிடம் சொல்லி டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்த்திருந்தான். ஷகாபுதீன் இவன் ஊர்க்காரர்தான். சென்னைக்கு வந்து பல வருடங்கள் சர்வீஸ் போட்ட ஆள். பார்க்காத வியாபாரமில்லை. பழகாத மனுசரில்லை. படிப்பு என்னவோ பத்தாவதுதான்.
“லே, பத்தமடையிலெ கூட என்னத்தெரியாதவன் இருப்பாண்டே, ஆனா இந்த மெட்ராசில என்னெயத் தெரியாதவன் இருக்க மாட்டான்” என்பார்.
நானாவித ஆசாமிகளும் பழக்கமாதலால் ஆறுமுகத்திற்கு டிக்கெட் வாங்கித்தர வாக்குக் கொடுத்து விட்டார்.

ஷகாபுதீன் அண்ணாச்சிக்கு தி. நகரில் அந்த பெரிய ஜவுளிக்கடையில் மூன்றாவது தளத்தில் ஆயத்த ஆடைகள் பிரிவில் வேலை. வாழ்க்கையில் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக மேலே வந்தவர். பத்தாவது முடித்து , மேல் நிலை வகுப்பு படிக்க ஆசைதான். ஆனால் அவரது வறிய வீட்டுச் சூழல் அதற்கெல்லாம் இடம் தரவில்லை. நாலைந்து பழைய சட்டை வேட்டியுடன் சென்னைக்கு “வாயில் இருக்குது வழி”, என்று சொல்லி வீட்டை விட்டு புறப்பட்டவர்தான். ஆரம்பத்தில் வாசுதேவ நல்லூர் ஹக்கீம் அண்ணன் எக்மோர் ரயில் நிலையத்தில் வைத்திருந்த பெட்டிக்கடையில் தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். அப்புறம் கட்டுச் செட்டாக இருந்து காசு சேர்த்து சொந்தமாக ஒரு பிளாட்பார கடையை பாண்டி பசாரில் ஆரம்பித்தார்.

அது ஒரு போராட்டமான வாழ்க்கை. எப்போ போலீஸ் வரும் எப்போ எல்லாவற்றையும் தூக்கிட்டுப் போகும் என்பது எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். என்னதான் சூரியன் கிழக்க உதிக்க மறந்தாலும் மாமூலும், தண்டலும் கண்டிப்பாகத் தந்து விட வேண்டும். முப்பத்தைந்து வயது வரை இந்த இரண்டுங்கெட்டான் நிலையற்ற வாழ்க்கை கருதியே நிக்காஹ் கூட செய்து கொள்ளவில்லை. பின்னாளில் இந்த ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்த பின் நிலையான சம்பளம் என்றான பின்னால்தான் நிக்காஹ் செய்து கொள்ள சம்மதமளித்தார். மேரூனிஸ்ஸாவும் நல்ல பெண்தான். பட்டதாரி மாப்பிள்ளைகள் பலர் வந்த போதும் ஷகாபுதீனின் நல்ல குணத்துக்காகவே காத்திருந்து மணந்து கொண்டாள்.

குடும்பம் ஊரில்தான். மெட்ராஸ் ஊரில் பிழைக்கப் போய் சம்பாதித்து கடைசியில் பத்தமடையில் வீடு கட்டி செட்டில் ஆகவேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். மாதம் ஒரு முறை ஊருக்குப் போய் விடுவார். வெள்ளிக்கிழமை இரவு நெல்லை எக்ஸ்பிரஸில் கிளம்பி சனி,ஞாயிறு குடும்பத்துடன் கழித்து விட்டு திங்கள் மாலை மீண்டும் நெல்லை எக்ஸ்பிரஸ் பிடித்து செவ்வாய் காலை வந்து விடுவார். மற்றபடி லீவு எதுவும் எடுப்பதில்லை. அப்படி போகும் போது எப்படியும் பதினைந்தாயிரம் இல்லை இருபதாயிரம் கொடுத்துவிடுவார். ஊரில் அத்தனை விலைவாசி இல்லை. மாமியார், மாமனார் அப்புறம் மகன் ரபீக் ஆக நான்கு ஜீவன்களுக்கு அது தாராளமாகப் போதும். இதிலும் எப்படியும் சீட்டுக் கட்டி, பீடி சுற்றி, பாய் நெய்து என்று எதாவது ஒரு வகையில் எப்படியும் மாதம் மூன்றாயிரம் சேர்த்து விடும் சாமர்த்தியம் மேரூன்னிஸாவிற்கு உண்டு. சேர்மாதேவி பாண்டியன் கிராம பாங்கில் அப்படியும் இப்படியுமாக ஒரு ஐம்பதாயிரம் போட்டு வைத்திருக்கிறாள்.    

ஷகாப் பாய்க்கு கிட்டத்தட்ட மாதம் முப்பதாயிரம் வருமானம். தி. நகரில் கட்டுப்படியாத வாடகைக்குப் பதிலாக சற்று தள்ளி ஐயாயிரம் ரூபாய் வாடகைக்கு கொடுங்கையூரில் வீடு எடுத்து கடையில் வேலை செய்யும் நாலைந்து பேர் பங்கிட்டு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை. நம்ம ஆறுமுகத்தை கடையில் வேலைக்கு ஷகாபுதீன் பாய் சேர்க்கிறதுக்கு முன்னால் அவன் உஸ்மான் ரோட்டில்  கிருஷ்ணவிலாஸ் ஹோட்டலில் சப்ளையர். காலையில் 9 மணிக்குப் பின் வியாபாரம் கொஞ்சம் சுமாரக இருக்கும் . அப்போது வெளியே நடைபாதையில் முதலில் ஒரு குருட்டுப் பிச்சைக் காரர் அடுத்தது குடைக்குள் கைக்குட்டை வைத்தபடி நடமாடியபடி வியாபாரம் செய்யும் ஒரு இருபது வயது இளைஞன் அப்புறம் கழுத்தில் செவ்வக அட்டைப் பெட்டியைக் கட்டிக் கொண்டு அதில் சின்ன சின்ன பிளாஸ்டிக் குப்பிகளில் சோப்புத்தண்ணீரையும் அதில் முக்கி ஊதுவதற்கு பிளாஸ்டிக் ஊது வளையம் வைத்துக் கொண்டு, ஊதியபடி காற்றில்  வண்ண வண்ண சோப்புக் குமிழிகளை விட்டபடி வியாபாரம் செய்யும் பத்து பன்னிரண்டு வயதுச் சிறுமி. இவர்கள் தான் அவனது தினசரி காட்சியாளர்கள். அந்த சிறுமி அரக்கு நிறப் பாவாடையும் சந்தன நிறத்தில் மேல் சட்டையும் போட்டிருப்பாள். சரியாக பகலில் பதினொன்று முதல் பன்னிரண்டு மணி வரை அவளைக் காண முடியும். அதன் பின் மீண்டும் மாலை நான்கு முதல் ஒன்பது மணி வரை இருப்பாள்.

அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் கேட்கும் தொலைவில் ஆறுமுகம் இல்லை. ஆனால் அவர்களின் பேச்சு என்னவாக  இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பான். அந்த சிறுமியின் உடை அரசாங்கம் இலவசமாக வழங்கும் பள்ளிச் சீருடை என்பதும் அவள் அருகில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கிறாள் என்றும் அவனால் அனுமானிக்க முடிந்தது. கூட்டம் இல்லாத வேளைகளில் அச்சிறுமி எதிர்வாடையில் உள்ள ஆயத்த ஆடைக்கடையில் காட்சிப்பெட்டியில் உள்ள சிறுமியின் மேல் அணிவிக்கப்பட்ட ஆடையை பார்ப்பாள். அப்புறம் கர்சீப் விற்கும் அண்ணனிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பாள்.  

இதெல்லாம் பழைய சங்கதி. இப்பொது அந்த ஆயத்த ஆடைக்கடைக்கே ஆறுமுகம் வேலைக்கு வந்து சேர்ந்து ஆறு மாதமாகி விட்டது. தினமும் அந்தப் பெண் காட்சிப் பெட்டி அருகில் நிற்பதையும், சில சமயம் தனக்குள் பேசிச் சிரிப்பதையும் பார்க்கும் போது அந்தப் பெண்ணிடம் பேச வேண்டும் என்று தோன்றும். கடையில் தினமும் வேளை முடிந்து ஷகாபுதீன் பாயுடன் அறைக்குப் போய் சாப்பிட்டு தூங்குவதற்கு கிட்டத்தட்ட மணி 12 ஆகிவிடும். காலையில் ஒன்பது மணிக்கு பாயுடன் கிளம்பி கடைக்கு வந்தால் வேலை நெட்டி முறிக்கும்.   

உடைளை வாடிக்கையாளர்கள் கலைத்துப் போட்டால் மீண்டும் மடித்து அதன் இடத்தில் மாட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் எடுத்த துணிகளை வாங்கி பில் போட கௌண்டரில் கொடுக்க வேண்டும். இதற்கிடையில் சந்தடிசாக்கில் திருடவரும் ஆட்களையும் அடையாளம் கண்டு சூப்பிரவைசரை எச்சரிக்க வேண்டும். நல்லவேளையாக ஷகாப் பாய் தான் அவனது சூப்ரவைசர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து கொண்டிருக்கிறான். திருட வரும் ஆட்களை நேரடியாக பிடிக்க கூடாது. தனியாகப் பிடித்தால் அடையாளம் வைத்துக் கொண்டு எங்காவது தனியா பார்க்கும் போது பிளேடால் கிழித்து விடுவார்களாம். அதனால் போலீசுக்கு தகவல் சொல்லித்தான் பிடிக்கணுமாம். எல்லாம் பாய் சொல்லிக் கொடுத்த பால பாடம்.
நாளைக்கு படம் ரிலீஸ். ஷகாப்புதீன் பாய்யை இப்போது கேட்க முடியாது. அப்படி மீறிக் கேட்டால்,” எலே, புத்தியை வியாபாரத்தில் வை. அண்ணாச்சி நம்ம நம்பித்தான் முதல் போட்டு வியாபாரம் செய்யறார். கடைக்கு வந்துட்டா கோவில் மாதிரி. அங்கன யாவாரம் தவிர வேற சிந்தனை இருந்தா தப்புலே” என்று சொல்லிவிடுவார். இன்னிக்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு போகும் போது சொல்லி ஞாபகப்படுத்தலாம். மனதை கட்டுப்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தான்.
முதலாளி அண்ணாச்சி வழக்கமாக தினமும் ஒரு சுற்று வருவார். இன்னிக்கும் வரும் போது “என்ன பாய், மணி பன்னிரெண்டு, தொழப் போகலையா” என்றார். பாய் மீது அவருக்கு அபார நம்பிக்கை. பாய்க்கும் முதலாளி மேல் தேவ விசுவாசம். முதலாளி தன் சொந்த ஊருக்குப் போகும் போது அவருக்கு நம்பிக்கையான ஷகாப் பாய்தான் கார் ஓட்டுவார். ஊருக்குப் போன பின் பாய்க்கு ஒரு வாரம் முழு ஓய்வுதான். அங்கே உள்ளூர் டிரைவர் இருப்பார். பாயை பத்தமடை அனுப்பி விடுவார். புறப்படும் முன் நாள் போன் செய்து காயாமொழிக்கு வரச் சொல்லி விடுவார்.
“அய்யா, நீங்க வரப் பார்த்தேன். அதுதான் நின்னுட்டேன் “ என்றார்.
“சரி, நீங்க கிளம்புங்க”
“உத்தரவு”  பாய்  கிளம்பி விட்டார்.
சே, முதலாளி வந்ததில் காரியம் கெட்டுப்போச்சு. எல்லாம் விதி. மனசுக்குள் நொந்து கொண்டான் ஆறுமுகம். பத்து நாட்களாக ஊரில் நண்பர்களுக்கெல்லாம் போன் செய்து படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது பற்றி பெருமை பீற்றியாச்சு. அடுத்து அவனுங்களுக்கு கட்டம் கட்டமா கதை சொல்லி போன் பேசணும். நடக்குமோ என்னவோ தெரியலை.
தொழுகை முடிந்து பாய் கொஞ்சம் தாமதமாக வந்தார். “லே, ஆறுமுகம் கொஞ்சம் தண்ணி கொண்டாலே” என்றார்.
தண்ணியை வாங்கி ஒரு மிடறு குடித்தவர், “ஆறு, அது என்னடா டிக்கெட் அந்த வெலை விக்கி? இருநூறு ரூபாயாமலெ, நமக்கு எதுக்குடா அத்தினி செலவு? ஒரு நா நல்லா சாப்பிடலாமேடே, அதான் உன்னைய கேட்டுக்கிட்டு வாங்கலாமின்னு திரும்பி வந்திட்டேன்’  என்றார்.
“இல்லை பாய் அண்ணாச்சி, பொறந்தது முதல் இது நா தொட்டு இப்படி ஒருக்கா கூட படம் பார்த்தது இல்லை. ஏதோ உங்க தயவுல ஒரு அதிருஷ்டம் கிடச்சதாதான் நினைச்சேன், எப்படியும் பார்க்கணும் பாய்”.



“அதுக்கில்லைடா, ஏதோ பத்தம்பது ரூவாய்னா பரவாயில்லை. இருநூறு என்னதும் மலைப்பாயிருந்தது”.
“ பாய் அது அந்தக் காலம். நீங்க படமே பார்க்க மாட்டீங்க. நீங்க பார்த்த காலத்து டிக்கெட் அம்பது ரூபாய். இப்பொ குறைஞ்சது இருநூறு. விலை வாசி எல்லாம் ஏறிட்டு”. எப்படியும் வாங்கிடுங்க பாய்”.

“சரி. மேனேஜர் தெரிஞ்சவர்தான். நம்ம முதலாளிக்கு பங்காளிங்க தியேட்டர்தான். காலையில் வாங்கித் தாரேன்”. பொழுது எப்போ புலரும், ஷகாப் பாய் எப்போ எழுந்துப்பார் என்று நினைத்தே ஆறுமுகத்திற்கு தூக்கம் வரவில்லை. வழக்கம் போல பாய் எல்லா வேலையையும் முடித்துவிட்டு, தனக்கும் ஆறுமுகத்திற்கும் டிபன் கட்டிக்கொண்டு கிளம்ப மணி எட்டாயிற்று. கடை வாசலில் வராமல் பின் பக்கம் வழியா வண்டியை கடைப் பார்க்கிங்கில் விட்டவர். “நீ உள்ளே வராதே. பிளாட்பாரத்தில் நில். நான் முதலாளியிட்ட ஒரு தகவல் சொல்லிட்டு வரேன்” என்றார்.

பிளாட்பாரத்தில் கடைக்கு அருகில் நின்றவன் அப்பொதுதான் பார்த்தான் அந்த சோப்புக் குமிழி சிறுமியை. அது ஆறுமுகத்தை சட்டை பண்ணாமல் காட்சிக் கண்னாடிப் பெட்டியில் உள்ள பொம்மை அணிந்துள்ள உடையைத் தான் அணிந்து பள்ளிக்கு போய் மற்ற குழந்தைகளிடம் காட்டுவதாக கற்பனை செய்து தனக்குத்தானே பேசி சிரித்தபடி இருந்தது. காட்சி, அந்த கற்பனை உரையாடல்கள் எல்லாம் கவனத்தை ஈர்த்தது. கொஞ்ச நேரத்திற்குப் பின் கர்சீப் இளைஞனிடம், “அண்ணா என்னிக்கு அந்த முட்டாய் கலர் டிரஸ் வாங்கித் தருவாய்” என்றது. அதற்கு அவன்,
“அது ஒனக்கு நல்லாயிராது. தீபாவளி நேரத்தில் நல்ல டிரஸ் சீப்பா அண்ணன் வாங்கித்தருவேன்” என்றான்.
உடனே அது அந்த பிச்சைகார கிழவனிடம் போய் “ தாத்தா, நீ சொல்லு தாத்தா, அது எனக்கு நல்லாத்தானே இருக்கும். அண்ணன் பொய் சொல்லுது” என்று புகார் சொன்னது. “இல்லை. அது ஒனக்கு நல்லா இருக்காது. அண்ணன் சொல்லறது சரிதான்”
“போ, தாத்தா, ஒனக்கு கண்ணே தெரியாது. அப்புறம் எப்படி அந்த கலர் எனக்கு நல்லாயில்லைன்னு உனக்குத் தெரிஞ்சது” எதிர் கேள்வி போட்டது அந்தப் பெண். இதை வேடிக்கை பார்த்ததில் நேரம் போனதே தெரியவில்லை ஆறுமுகத்திற்கு.

“ வா, போகலாம்” என்று பாய் கூப்பிட்டதும் சுயநிலைக்கு வந்தான். வண்டியில் தியேட்டருக்கு வந்து பாய் நேராக மேனேஜரைப் பார்த்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தார். “லே, படம் பார்த்துவிட்டு தலை வலி என்று லீவு கேட்க கூடாது. ஆமா” என்று சொல்லி விட்டு மாலை மூன்று மணிக்குள் கடைக்கு வந்து விடும்படி கூறிவிட்டு மோட்டார் பைக்கில் சென்று விட்டார்.

ஆறுமுகத்தை அடுத்த ஒரு மணி நேரத்தில் கடையில் பார்த்த ஷகாபுதீன் பாய்க்கு ஆச்சரியம்.
“என்னடே, பிரச்சனை. படத்துக்குப் போகலையா?”
“இல்லை அண்ணாச்சி, அந்த மிட்டாய் கலர் ஃப்ராக் என்ன விலை?”
“ அது எண்ணூறு ரூபாய் டே. ஏலே, என்ன ஊருக்குப் போகப் போறியா? ஒரு வார்த்தை கூடச் சொல்லலை”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை பாய். அந்த ஃபிராக் நான் வாங்கிக்கிறேன். பில்லு போட சொல்லுங்க”
கௌண்டரில் எண்ணூறு ரூபாய் பணத்தை எண்ணி கொடுத்து விட்டு, டெலிவெரி பகுதியில் சோமுவிடம் டெலிவெரி வாங்கிக் கொண்டான். ஷகாபுதீன் பாயை, “அண்ணாசி, என்னோட கொஞ்சம் வாங்க” என்று கூப்பிட்டவன், கீழே பிளாட்பாரத்திற்கு வந்தான். இன்னமும் அந்த சிறுமி கண்ணாடி காட்சிப் பெட்டியில் உள்ள பொம்மையுடன் பேசிக் களித்துக் கொண்டிருந்தது. அதை கூப்பிட்டு அருகே வரச் சொல்லி,
“ பாய் அண்னாச்சி, பாப்பாவுக்கு அந்த ஃப்ராக்கை கொடுத்துடுங்க” என்றான்.

அந்த சிறுமி முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். கர்சீப் அண்ணன் தாங்க்ஸ் சார் என்று ஆயிரம் தடவை சொல்லியிருப்பான். ஷஹாபுதீன் பாய், ஆறுமுகம் இருவரையும் சுற்றி பெருங் கூட்டம். கூட்டத்தை விலக்கி கடைக்கு வந்தவன் பாயிடம், “ நீங்க போன பின்னாடி அங்கே வந்த ஒரு ரசிகருக்கு டிக்கெட் தேவைப்பட்டது. அவர் என்னிடம் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட்டை தர முடியுமான்னு கேட்டார். வேற சந்தர்ப்பமாக இருந்திருந்தா மாட்டேன். ஆனா காலையில் இந்த பிஞ்சின் ஆசையை கேட்டபோது பாவமாக இருந்தது. நா தர்மம் எதுவும் செய்யவில்லை. அந்த அளவுக்கு பணவசதியும் இல்லை. தலைவர் எனக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார். பண வசதி இருந்த பணக்காரன் யாரும் இந்த பிள்ளையின் ஆசையை இந்த ஜென்மத்தில் பூர்த்தி செய்யப் போவதில்லை. பணம் உள்ளவன் கையில் இருந்த அதிகப்படி பணத்தை அந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்ற ஆண்டவன் காட்டிய படி பயன்படுத்தினேன் அவ்வளவுதான் பாய். நான் செய்தது தப்பானா என்னை மன்னிச்சிருங்க பாய்” என்ற ஆறுமுகத்தை இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஷஹாபுதீனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

Monday, 25 July 2016

காலப் பெட்டகம்


“ராகவா எழுந்திருடா, மணி எட்டு அடிக்கப் போறது”, என்ற அம்மாவின் குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டு கண்ணைத்திறந்து,
”என்னம்மா, அதற்குள்ளாகவா எட்டு மணியாகி விட்டது.இன்னிக்கு லீவுதானேமா, இன்னும் ஒரு மணி நேரம் தூங்கிட்டு ஒன்பது மணிக்கு எழுந்திருக்கிறேன்” என்றேன்.

“இல்லைடா, கொல்லைப்புறத்தில் செடிக்கு எல்லாம் தண்ணீர் விடப் போயிருந்தேன். அப்போ வாய்க்காலுக்கு குளிக்க வந்த உன் ஃபிரண்ட் ரகுவின் அம்மாவைப் பார்த்தேன். அவன் உன்னைப்பத்தி விசாரித்தானாம், உன்னை பார்க்கணுமாம்.உடம்பு சரியில்லாமல்  சோமசேகரன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம். அதனால் சொன்னேன்.அப்புறம் ஏன் எங்கிட்ட சொல்லலைன்னு வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பாய்.” என்றாள்.

ரகு என்றதும் பட்டென எழுந்தேன். “அப்படியா, என்ன உடம்புக்கு? அமெரிக்காவில எங்கியோ கலிபோர்னியாவில இல்லையா இருந்தான். எப்போ இந்தியா வந்தான்?” என்றபடி முகம் கழுவி காலைக்கடன்களை முடிக்கக் கிளம்பினேன். என்னவோ தெரியவில்லை மனம் பரபரப்பாக இருந்தது.
நானும், ரகுவும் பால்ய சினேசிதர்கள். வடிவேல் சார் கூட எங்களை டபரா, டம்ளர் என்று கிண்டல் செய்வார். வருகைப் பதிவேட்டிலும் அடுத்தடுத்த பெயர்கள்.எப்பொதும் நான் அவன் வீட்டிலோ, அவன் என் வீட்டிலோ இருப்போம். பள்ளியில் படிப்பில் அவன் படு சுட்டி. நான் சராசரி. ஆனால் அதில் அவனுக்கு கர்வம் துளியும் கிடையாது. எனக்கும் அவனுடன் பழகுவதில் தாழ்வு மனப்பான்மை இல்லை.

அவன் எப்போது படிக்கிறான். எப்போது உறங்குவான் என்பது யாருக்கும் தெரியாது. இரவு திண்ணையில் படுப்பதாகச் சொல்லிவிட்டு, வீட்டுக்குத் தெரியாமல் பத்து மணிக்கு வைராவிகுளம் டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு அசந்து உறங்கினால் அதி காலை ஐந்து மணிக்கு எப்போதும் போல எழுந்து ஆற்றில் குளிக்கப்போக என்னை எழுப்பிவிடுவான். பள்ளிக்கூடத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பல ஆசிரியர்கள் திணறிப் போய்விடுவார்கள். அவன் தெருவில்உள்ள மற்ற பசங்களுக்கு புரியாத புதிர். நாங்கள் இரும்புக்கை மாயாவி, சிந்துபாத் படிக்கும் போது அவன் நூலகரிடம் ஜெயகாந்தன், புதுமைப் பித்தன்  புத்தகங்கள் பற்றி விசாரிப்பான். அவரோடு விவாதம் செய்வான். அதேசமயம் ராமு கனபாடிகளிடம் கடோபனிஷத்தில் சந்தேகம் கேட்பான். ஒரு தடவை பெருமாள் கோவில் அர்ச்சகரிடம், “நீங்க சொல்லும் மந்திரம் தப்பு இப்படி தப்புத்தப்பா மந்திரம் சொல்லி பெருமாளை ஏன் ஊரை விட்டு துரத்துற கைங்கரியத்தை உங்களை மாதிரி சிறப்பா யாரும் செய்ய முடியாது” ,என்று சொல்லிவிட்டு சரியா உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்ல அவர் பஞ்சாயத்தில் பிராது தர ஒரே அமர்க்களம்.

திடீரென்று ஒரு நாள் அவனைக் காணவில்லை. பள்ளிக்கும் வரவில்லை. அவனை பார்க்காமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. சாயங்காலம் அவன் வீட்டிற்கு போய் விசாரித்தால், அவன் அம்மாவிடம் மெட்ராஸ் போகப் போறதாதா சொல்லி ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக சொன்னாள். “ஆயிரம் ரூபாய் புரட்டிக் கொடுத்தேன் , நேற்று ராத்திரி 7.30 மணி பாபனாசம் - சென்னை பஸ்ஸில் தான் கிளம்பிப்போனான். நாளைக்கழித்து காலையில் வந்து விடுவதாகச் சொன்னான்”.
“சரி, அவன் வந்ததும் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.
வியாழக் கிழமை பள்ளிக்கு பிரேயர் முடிந்து காலதாமதமாக வந்தான். முத்துசாமி சார் வகுப்பு. வாசலில் நின்றவனை அவர் சட்டையே செய்யவில்லை. “தலைகனம் பிடிச்சி அலையறான். பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் நினைப்பு” இப்படியெல்லாம் அவனைப்பற்றிய எண்ணம் அவருக்கு உண்டு.
காரணம் ஒருநாள் அவரிடம் கருப்புப் பொருள் (Dark Matter) பற்றி கேட்க, அவர் அது பற்றி தெரியாது, நான் தகவல் திரட்டிய பின் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு எல்லா வாத்தியார்களின் பொதுப்புத்தி. மொளைச்சு மூணு எலை விடலை, இவனுக்கு அப்படி என்ன தெரியும் என்று. அவர் எதோ சம்பந்தம் இல்லாமல் விளக்கம் சொல்ல ,ரகு அது தவறு என்று சுட்டிக்காட்ட , பிரச்சனையாகி தலைமை ஆசிரியரிடம் போக,
வகுப்பில் மரியாதை இல்லாமல் ஆசிரியரை திட்டியதாக பொய்யாக புகார் தரப்பட்டது. கடுமையாகக் கண்டிக்கப் பட்டு,பத்து நாள் பள்ளியை விட்டு வெளியேற்றம். அவன் அம்மா மன்னிப்புக் கடிதமும் எழுதிக்கொடுத்து ஆயிரம் ரூபாய் வார்ட் கவுன்சிலரின் சிபாரிசுக் கடிதத்திற்கு மொய்யும் கொடுத்து பள்ளியில் மீண்டும் சேர்த்தாள்.

அதிலிருந்தே முத்துசாமி சாருக்கு அவனையும் அவன் கூட எந்தப் பையனைப் பார்த்தாலும் ஒரு வன்மத்துடனேயே கருவியபடி இருப்பார்.
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று நாலைந்து முறை கூப்பிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை. பிரிவேளை முடிந்து வெளியே வரும் போது
“தொரைக்கு, இன்னிக்கு லேட்டா வந்ததால் ஆப்சென்ட்தான். லேட்டுக்கும் இரண்டு நாள் வராமல் இருந்ததற்கும் காரணம் எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த பிரிவேளைக்கு வகுப்புக்கு போ” என்றார்.

 காரணம் எழுதிய கடிதத்தில் சென்னை சென்று பாஸ்போர்ட் எடுக்க நேர்காணல் சென்றதால் இரண்டு நாள் விடுப்பும் , சென்னையிலிருந்து வரும் பேருந்து காலதாமதமாக வந்ததால் முதல் பிரிவேளை வரத்தாமதம் என்றும் எழுதியதைப் பார்த்த முத்துசாமி வாத்தியாருக்கு மயக்கமே வந்துவிட்டது.
ஒரு அப்பா இல்லாத பையன், அதிலும் மேல்நிலை வகுப்பில் படிக்கும் பொடியன் , தனியா சென்னைக்குப் போய் பாஸ்போர்ட் எடுக்கிறதா? அது சாத்தியமா? கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.பொறியியல் பட்டதாரியான அவர் மகன் பாஸ்போர்ட் நேர்காணலுக்கு
“அப்பா, நீயும் துணக்கு வாங்கப்பா” என்று அழைத்ததும் அவனுடன் துணைக்கு சென்றதை நினைத்து வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஏலெ, பொய்சொல்லாதேலே, பாஸ்போர்ட் எடுப்பது என்ன டெண்ட் கொட்டாய் சினிமா டிக்கெட்டாலெ கவுண்டரில் காசு கொடுத்து வேங்க? 18 வயசாவத எப்படிலே பாஸ்போர்ட் எடுக்க முடியும். பின்ன நாளைக்கு பாஸ்போர்ட் கொண்டி காணிக்கனும் ஆமா சொல்லிப் போட்டேன்” என்றார்.
“சரிங்க அய்யா”  என்று சுருக்கமாக சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.
இன்னும் நான்கு மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும். பரிட்சை எழுதி ரிசல்ட் வந்து விட்டால், அப்புறம் பிரச்சனை இல்லை. அதற்கிடையில் வாத்தியாருடன் தகராறு பண்ணியதாக புகார் வந்தால் எல்லாம் பாழாயிடும் என்றவாறு ரகுவின் மனத்தில் சிந்தனை ஓடியதை நாங்கள் அறியவில்லை.

மதிய உணவு இடைவேளையில் நான், “என்னடா ரகு, இப்படி பாஸ்போர்ட் அது இதுன்னு மிரட்டுகிறாய்” என்று கேட்டதுதான் தாமதம் “ ராகவா இந்தப் படிப்பு எல்லாம் சுத்த வேஸ்ட். தலையெழுத்தென்னு இந்த சிலபஸ்லெ படிக்கிறேன்” என்றான். “பாரு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபிறகு அமெரிக்கா போய் படிக்கப் போகிறேன், அதுக்கு வேண்டி எல்லாம் செய்து விட்டேன். பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன். சென்னையில் ஒருத்தர் என்னை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைக்கும் செலவு எல்லாத்தையும் ஏற்றுக்கிறதா சொல்லியிருக்கார். அவரிடம் என் புராஜெக்ட் பத்தி எல்லாம் சொல்லியிருக்கேன். அவர் ரொம்பவும் இம்பிரஸ் ஆகிட்டார்டா” என்றான். என்னால் அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் என்னை மாதிரி ஒரு பொடிப்பய தனியா சென்னைக்கு போய் பாஸ்போர்ட் எடுத்து, புரவலரைப் பார்த்துப் பேசி , ஹும் ஆச்சரியம் தான்.

அப்புறம் நாட்கள் படு வேகமாக நகர்ந்தன. பரிட்சை எழுதியவன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தான். செய்தி வந்ததும் முத்துசாமி வாத்தியார் ஃபோட்டோக்கு வந்து விட்டார். ரகுவின் ஆற்றலை முதன் முதலில் தான் தான் கண்டுபிடிச்சதாக பேட்டி தந்தார். ரகுவும் அதை ஆமோதித்து தலையசைத்து அங்கீகரித்தான். அப்புறம் பைசா செலவில்லாமல் அந்த புரவலர் அவனை மேற்படிப்புக்கு வெளிநாடு அனுப்பியது. அவன் அம்மாவுக்கு கிராமத்தில் வசிக்க ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு அதன் வட்டியை பயன் படுத்த ஏற்பாடுகள் செய்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்து சென்னை வந்தவன் அம்மாவை சென்னைக்கு கூப்பிட அவள் கிராமத்தை விட்டு வர மறுத்து விட்டாள்.
பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருப்பதாக அவன் அம்மா சொல்லுவாள். திருமணம் செய்து கொள்ளவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வந்து புரவலரையும், கிராமத்தில் தன் தாயாரையும் பார்த்துவிட்டுச் சென்று விடுவான். இடைப்பட்ட காலத்தில் நான் தமிழ்நாடு பப்ளிக் செர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி திருநெல்வேலி கலெக்டர் ஆபீஸில் சூப்பிரண்டெண்ட் ஆக செக்குமாட்டு வாழ்க்கையில் .  என் இரண்டு பசங்களும் பக்கத்து மெட்ரிக் ஸ்கூலில் படிக்கிறதே வாழ்க்கையின் மகாசாதனை. மற்றபடி குறைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை.

அவசர அவசரமாக ஆஸ்பத்திரியை அடைந்தேன். உள்ளே நுழையும் முன்பே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழிமறித்து, “சார், நீங்கதான் ராகவனா? அவர் சயின்டிஸ்ட்  உங்க நெருங்கிய நண்பராமே. நான் அவரது பாதுகாப்பு அதிகாரி. உங்கள் இருவரும் பேசுவதை யாரும் கேட்காமல் நான் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது” என்றார். சட்டையில் மாணிக்கம் காவல் ஆய்வாளர் என்றிருந்தது. “நீங்களும் சயின்டிஸ்டா சார்?” என்றார். “இல்லை, கலெக்டர் ஆபீஸில் சூப்பிரண்டெண்ட், சர்வே டிபார்ட்மெண்ட்” என்றபோது ஏதோ தாழ்வு மனப்பான்மை மனதில் தோன்றியதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். “சரி சார், நீங்க உள்ளே போங்க” என்று சொல்லிவிட்டு விறைப்பாக சல்யூட் வைத்தார்.

அறைக்குள் கட்டிலில் படுத்திருந்தான் ரகு. “வாடா ராகவா, என்று சொல்லிவிட்டு கையில் இரண்டு கடிதங்களைத் தந்தான். இது என்னடா என்ற என்னிடம், வாயில் விரல் வைத்து எச்சரித்தான். “இதில் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய குறிப்புகள் இருக்கு. அதை என்னிடமிருந்து கவர்ந்து கொள்ள ஒரு பெரிய கூட்டமே அலைகிறது. அது அவர்கள் கையில் கிடைக்கக் கூடாது, அதனால் தான் சென்னையில் தங்காமல் இங்கே வந்து இருக்கிறேன். என்னை மோப்பம் பிடித்து இங்கு அந்தக் கூட்டம் வருவதற்குள் அதை உன்னிடம் தந்து விட்டேன். வீட்டில் ஒரு கடிதத்தை எங்காவது மறைத்து வைத்துவிடு. மற்றதை  பக்கத்தில் எதாவது பெரிய தபால் ஆபீஸில் அதில் உள்ள விலாசத்திற்கு ஏர் மெயில் அனுப்பி விடு. 

ஒரு வேளை என்னை யாராவது கொன்றுவிட்டால், சரியாக ஒரு மாதம் கழித்து இரண்டாவது கடிதத்தை பிரிக்காமல் அதிலுள்ள விலாசத்திற்கு அனுப்பிவிடு” என்றான். “இடையில் உனக்கு ஏதாவது பிரச்சனை வரமாதிரி இருந்தா அதை கேட்பவர்களிடம் கொடுத்துவிடு. எனக்காக செய்வாயா. இதை கைப்பற்ற பல பன்னாட்டுக் கம்பெனிகளும், அரசியல் தலைவர்களும் அலைகின்றனர். அவர்கள் கையில் மாட்டாமல் இதுவரை காப்பாற்றிவிட்டேன். இனி உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் இனிமேல் கவலையில்லை”.
“அப்படி என்னடா அதில் உயிர் போகிற ரகசியம்”
“டேய் , நீ இயற்பியலில் நிறை, நீளம், காலம் - அடிப்படை அளவுகள் என்ரு படித்திருப்பாய். ஒரு பொருளைஉதாரணமாக ஒரு பெட்ஷீட் இருந்தால் அதன் நீளம் ஏழு அடி என்றால், ஊருக்குப் போகும் போது அதை மடித்து இரண்டு அடி நீளமுள்ள பெட்டியில் அடைத்து வைக்கிறோம் இல்லையா? அதேபோல குறிப்பிட்ட கன அளவில் அதிக நிறையை அடைக்கிறோம். இதனால் அடர்த்தி கூடும். இது திரவத்திற்கு சாத்தியம் இல்லை. ஆனால் வெப்ப நிலையை அதிகரித்தால் ஆவியாக்கி சாத்தியப் படுத்தலாம் இல்லையா? ஒவ்வொரு பொருளையும் வெவ்வேறு சூழலில் சுருக்க முடியும். 





Time Dilation பற்றி ஈன்ஸ்டீன் சொன்னது படித்திருப்பாயே, அதிகமான வேகத்தில் காலம் நீட்டிப்புஅடைந்து விடும் இல்லையா, அதே மாதிரி காலத்தை பாய் மாதிரி சுருட்டி நம்ம கக்கத்தில் வைத்துக் கொண்டு போகிற மாதிரி ஒரு தியரி அதில் உள்ளது. இப்பொ உன்னைச் சுற்றி ஒரு காலப் பெட்டி உள்ளது. அதை விட பெரிய ஒரு காலப் பெட்டியில் நீ இருந்தால் உன் ஆயுள் முன்னை விட அதிகம். பெட்டியை திறந்தால் காலப் பெட்டகத்தை விட்டு வெளிவந்த உயிர்கள் வெளியில் (Space) கலந்து விடும். அப்புறம் அதையும் வெளியையும் பிரித்துப் பார்க்க முடியாது.  சிறிய காலப் பெட்டியில் இருப்பவன் அப்படியே பெரிய காலப்பெட்டிக்கு மாறிவிட்டால் அவனுக்கு ஆயுள் அதிகரித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு போனவனை “நிறுத்துடா, நிறுத்துடா, எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு புத்திசாலித்தனம் கிடையாது என்பது உனக்குத் தெரியாதா. சரி, நீ சொன்னபடி செய்கிறேன்”
 என்று புறப்பட்டேன்.

 “அம்மாவிடம் என் பிரச்சனை எதையும் சொல்ல வேண்டாம்” “பிழைச்சுக்கிடந்தா சாயங்காலம் பார்க்கிறேன்”  என்று கையசைத்தான்.
வெளியில் வந்தவனை, மாணிக்கம் இன்ஸ்பெக்டர் சல்யூட் வைத்தபடி சிரித்து வழியனுப்பினார். வீட்டிற்கு வராமல் நேராக பஸ் ஸ்டாண்ட் வந்து
பத்தரைமணி மணி புளியரை வண்டியைப் பிடித்து கடையம் தபால் அலுவலகம் வந்து கடிதத்தை ஏர் மெயில் அனுப்பினேன். ரசீதை கிழித்துப்போட்டேன். மத்தியானம் வீட்டிற்கு வந்து அசந்து தூங்கியவனை அம்மா எழுப்பினாள்.

“யாரோ போலீஸ்காராளாம் வந்திருக்கா உன்னை பார்க்கணுமாம். ஆபீஸீல் என்னடா தப்புத்தண்டா பண்ணிணாய்” என்றாள். வந்த ஆட்கள் யாரும் யூனிபார்மில் இல்லை. அதில் சற்று வயதானவராக இருந்தவர், “என்பெயர் மதுசூதனராவ், மத்திய புலனாய்வுத் துறையில் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்களிடமொரு வருத்தமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் நண்பர் சயன்டிஸ்ட்  டாக்டர் . ரகு உங்களை சந்தித்த பின் மாயமாகி விட்டார். அவர் இருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. 

அவர் பாதுகாப்புக்கு இருந்த இன்ஸ்பெக்டர் மாணிக்கம், கடைசியாக நீங்கள் தான் அவரைப் பார்த்ததாகக் கூறினார். அவர் அறையில் இருந்த காமிராவில் உங்கள் சந்திப்பு பதிவாகி இருந்தது. நீங்கள் புறப்பட்டு விட்டபின் அது பதிவெதுவும் செய்யவில்லை. அது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வந்துள்ளேன்” என்றார்.
அவர்களிடம், நானும் ஆதியோடந்தமாக நடந்த எல்லாவற்றையும் சொன்னதும். அந்த இரண்டாவது கவரை கொடுத்துவிடுங்கள், நாங்கள் மத்திய அரசின் சார்பில் அதை பறிமுதல் செய்ய ஆணையுடன் வந்துள்ளோம். உங்கள் வீட்டை சோதனையிடப் போகிறோம் என்றனர். கடிதம் என் மேசை மீதே கிடந்ததால் அவர்களுக்கு அதிகம் சிரமம் இல்லை. அவர்கள் கூட வந்திருந்த ஒருவர் ரகுவின் கையெழுத்தை  உறுதி செய்தார். மதுசூதனராவ் , “ நாங்கள் கூப்பிடும் போது விசாரணைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும். முதல் கவரை கடையம் போஸ்டாபிஸிலிருந்து வாங்கி விட்டோம்”. மறுநாள் செய்தித்தாளில் விஞ்ஞானி மாயம் என்ற செய்தி மட்டும் வந்திருந்தது. கடிதங்களைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அந்த மத்திய அமைச்சரின் முன்னிலையில் இரண்டு கடிதங்களும் பிரிக்கப்பட்ட போது இரண்டிலும் நான்கு A 4 சைஸ் வெற்றுத் தாள்களே இருந்தன. என்னையும் அப்புறம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

இதெல்லாம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் பாபனாசத்தில் ஆடி அமாவாசைக்கு பாணதீர்த்தத்தில் குளிக்கச் சென்ற போது அந்த இருள் பிரியாத அதிகாலைபொழுதில் காணி ஒருவருடன் பேசியபடி என்னைக் கணப் பொழுதில் கடந்து சென்ற சடாமுடி சாமியாரின் முகம் ரகு மாதிரி இருந்தது போல் மனதில் பட்டது.    
    
  

     

Monday, 11 July 2016

கூளயன்

டேய், முத்து, “இன்னிக்கி நீ கேட்டபடி கூளயனை நீ கூட்டிக்கிட்டு போ. நூத்தம்பது ரூபாய் அக்காட்ட கொடுத்திட்டு போயிடு. ராத்திரி 9 மணிக்கு கூளையனை கொண்டு விட்டுறணும். மத்ததெல்லாம் உனக்கு தெரிஞ்சதுதான்”. அண்ணாச்சியிடமிருந்து போன் வந்ததும் முத்துவிற்கு சந்தோசம். பதுவா அண்ணாச்சியோட அக்கா, கூளயனை சுப்பம்மாவுக்குத்தான் வாடகைக்கு கொடுப்பார். இன்னிக்கு என்னமோ தெரியலை கூளயனை அவன் கூட அனுப்ப அண்ணாச்சி சம்மதித்தது அவன் அதிருஷ்டம்தான். கூளயன் நல்ல உருப்படி. அவன் வாடகை, சாப்பாடு, போக்குவரத்து எல்லாம் போக கையில் முழுசா குறைந்து ஐநூறு ரூபாயாவது சம்பாதித்துத் தரக் கூடிய உருப்படி.

கூளயன் தலை மற்றும் தலைக்குக் கீழே உடம்பு என்று சொல்ல முடியாத தசைப் பிண்டம். பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் ஒரு ஊனமுற்ற பிறவி. அண்ணாச்சி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் உருப்படிகளை அவரே வைத்து தொழில் செய்து கொண்டிருந்தார். இப்போது அரசியலுக்கு வந்த பின் நேரடியாக தொழில் செய்வது கௌரவக் குறைவு என்பதால் இப்போதெல்லாம் உருப்படிகளை வாடகைக்கு விடுகிறார். தொழிலை அவரது துணைவிக்கு காதல் பரிசாக கொடுத்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எப்போதாவது பிரச்சனை இந்த போலீஸ், மனித உரிமை அப்படி ,இப்படி வந்தால் தன் அரசியல் செல்வாக்கால் துணைவியை பிரச்சனையிலிருந்து மீட்பதோடு அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு நேரமும் அவருக்கில்லை. முத்து அவரது ஆரம்ப காலங்களிலிருந்தே அவருடன் இருந்த விசுவாசி. இருந்தாலும் துணைவியாருக்கு முத்துவை பிடிக்காது. தொழில் கைமாறியதும் பழைய ஆட்களுடன் நிறைய புது ஆட்களை அக்கா வேலைக்கு எடுத்தார். புதிய ஆட்கள் வேலை கற்றுக் கொண்டது. அப்படியே பழைய ஆட்களுக்கு கல்தா கொடுத்தார். அப்படி வெட்டி விடப்பட்ட ஆட்களில் முத்துவும் ஒருத்தன்.

அண்ணாச்சியிடம் வந்து அழுது புலம்பி, அண்ணாச்சி அக்காவிடம் சிபாரிசு செய்ததில் தினம் நூறு ரூபாய் வாடகைக்கு மூன்று உருப்படிகள் தர அக்கா சம்மதித்தார். அந்த மூன்று உருப்படிகளும் சேர்ந்து தரும் ஒரு நாளைய வருமானத்தை கூளயன் ஒருத்தன் ஒரே நாளில் சம்பாதித்துத் தருவான்.
வழக்கமாக ஒரு உருப்படிக்கு நாள் வாடகை தினத்திற்கு தினம் வேறுபடும். விஷேச நாட்களில் ஒரு வாடகை. வெளியூருக்கு ஒரு வாடகை இப்படி.  இந்த குறைபாடுள்ள மனித ஜீவன்களுக்கு சோறு, தண்ணி, இருப்பிடம் எல்லாம் கிடைக்கிறது. இவர்களால் முத்து போன்ற ஆட்களுக்கு ஜீவனம் நடக்கிறது.
அண்ணாச்சியின் போன் வந்த மறு நிமிடமே முத்து அக்கா வீட்டிற்கு கிளம்பி விட்டான். முத்து தொழிலுக்காக ஒரு ஆட்டோ வைத்திருக்கிறான். தினம் காலையில் உருப்படி என்ற அந்த ஜீவன்களை விடியலுக்கு முன்பாகவே அவனுக்கு ஒதுக்கப்பட்ட ரயில்வே ஸ்டேசனில் நிறைய மக்கள் வந்து போகும்  பாதையில் கொண்டு இறக்கி விடுவான்.

அந்த ஸ்டேசன் காவலர்களை  மாதா மாதம் மாமூலாக கவனித்து விடுவான். அவர்களும் மாசத்தில் ஒரு சின்ன கேஸ் போட்டு உருப்படியை  எழும்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்துவார்கள். அங்கே அக்கா அனுப்பும் ஒரு  ஆள் அபராதத்தைக் கட்டி கூட்டிப் போய் விடுவார்கள். நீதிபதி அந்த ஜீவனை அரசாங்க காப்பகத்தில் விடச் சொன்னால் உருப்படியின் அம்மாவாக நடிக்க ஏற்பாடு செய்யப்படும் பெண், நீதிபதியிடம், “ அய்யா வயத்துக் கொடுமை அதானால செஞ்சிட்டேன். இனிமேல அப்படி பிச்சை எடுக்க விடமாட்டேன் அய்யா. என் புள்ளையை நானே வளர்க்கிறேன். காப்பகத்திற்கு அனுப்ப வேண்டாம். அங்க என் புள்ளையின் மூத்திரத்துணி கூட மாத்த அருவருப்புப் படுவாங்க அய்யா” என்று சொல்ல நீதிபதியும், மனிதாபிமான அடிப்படையில் “சரி இனி மேல் இப்படி செய்யாதே. அபராதம் கட்டிட்டு போ”. தீர்ப்பு வந்ததும் அபராதம் கட்டி மறுபடி தொழில் பழையபடி கோலாகலமாக ஆரம்பித்து விடும்.


முத்து அக்கா வீட்டிற்கு வந்த போது காலை மணி ஐந்தரை. அக்கா வழக்கமான இரண்டு ஊனமான ஜீவன்களுடன் அண்ணாச்சி சொன்ன கூளயனையும் முத்து எடுத்துப் போக தயார் நிலையில் வைத்திருந்தாள்.
“ முத்து அவுக சொல்லிட்டாவ. என்னால மீற முடியலை. இன்னும் ஒரு வாரம் கூளயனை ஒனக்கு தாரேன்.  ஏழு நாளுக்கு தினம் நூத்தம்பது வீதம் ஆயிரத்தியம்பது.  ஆயிரம் மொத்தமா கொடுத்திடு. அம்பது ரூவா தள்ளியிருக்கேன். ஆக  வழக்கமான மூன்றுக்கு முன்னூறும், கூளயனுக்கு ஆயிரம், ஆயிரத்தி முன்னூறு கொடு என்றாள். “சரிங்க அக்கா” என்றபடி அந்த பணத்தை எண்ணி அக்காவிடம் கொடுத்து விட்டு உருப்படிகளை தூக்கிக் கொண்டு போய் ஆட்டோவில்  உட்கார வைக்கும்போது தான் கவனித்தான் கூளயனுக்கு உடம்பு அனலாகக் கொதிப்பதை.
“அக்கா, கூளயனுக்கு உடம்பு சரியில்லை போலிருக்கே. நான் அதுக்கு உடம்பு சரியானதும் இரண்டு நாளு கழிச்சி எடுத்துக்கிறேன்”
“நீ எப்பம் வேணா எடுத்துணு போ. ஆனா இப்போலேர்ந்து கரிட்டா ஒரு வாரம் ஏழு நா கணக்கு. அதை குறைக்க முடியாது”.
“என்னக்கா, அதுக்கு உடம்பு சரியில்ல. அதாலதானே சொல்றேன். இப்படி சொன்னா எப்படி”
“ இதான் அண்ணாச்சி சொன்னாவளேன்னு கொடுத்தா விவகாரம் பன்ணுறெ. சரி, கூளயனை வுட்டு வழக்கமான உருப்படிகளோட  போ. நா வழக்கம் போல சுப்பம்மா கிட்ட கொடுத்துக்கிறேன். இந்த கரச்சல்  அவகிட்ட இல்லை. நீ கூளயனை வுட்டுட்டு கிளம்பு நைனா. இந்தா நீ கொடுத்த ஆயிரம்”. என்ற அக்காவிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
திரும்ப அண்ணாச்சியிடம் போனால் அவருக்கு உள்ள பிரச்சனைகளில் இது மிகச் சின்னது. “ஆ, அப்படியா. சரி பேசிப் பார்க்கிறேன்” என்று வெட்டிக் கொள்வார். என்னடா எது கைக்குக் கிடைத்தது வாய்க்கு கிடைக்காம போயிடும் போலிருக்கே. சரி போற வழியில் இந்த மாதிரி ஜீவன்களுக்கு வைத்தியம் செய்யும் அந்த  சேட்டுமார் தர்மாஸ்பத்திரியில் காட்டி மருந்து வாங்கிட்டுப் போகலாம்.அப்படி அங்கே பார்க்க முடியாவிட்டால் ஒரு குரோசின் வாங்கி கொடுத்து கொஞ்சம் காலை பத்து மணிவரை தாக்காட்டி விட்டால் அப்புறம் நான்கு மணிவரை கூட்டம் அதிகம் இருக்காது.

அந்த நேரத்தில் எதாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்டி மருந்து வாங்கிவிடலாம் என்ற தீர்மானத்தோடு கிளம்பி விட்டான். அந்த பெரிய ரயில் நிலையத்தில் ஓரமாக ஆனால் எல்லோர் பார்வையும் படும் இடத்தில் மற்ற மூன்று ஜீவன்களை கீழே துண்டு விரித்து ஒரு வசதியான கோணத்தில் உட்கார வைத்துவிட்டு, இவற்றைப் பார்த்துக் கொள்ளச்  சொல்லி சின்னப் பொண்ணுவிடம் 20 ரூபாய் கொடுத்துவிட்டு, ஆட்டோவில் தர்மாஸ்பத்திரிக்கு கூளயனை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆஸ்பத்திரி நல்ல மனமுள்ள, தர்ம சிந்தையுள்ள மனிதர்கள் மேற்பார்வையில் நடத்தப் படுகிறது. கூளயனை பார்த்துப் பரிதாபப்பட்டு முதலில் கூப்பிட்டனர். டாக்டரிடம் முத்து கூளயனை தன் மகன் என்று சொல்லி யதும் பரிதாபப் பட்ட டாக்டர் கூளயனுக்கு சத்தான உணவு, மாத்திரைகளை ஆஸ்பத்திரி செலவில் வாங்கிக் கொடுத்தனுப்பினார். கொஞ்சம் நல்ல ஆகாரமும், மருந்தும் சாப்பிட்டதில் கூளயன் காய்ச்சல் குறைந்திருந்தது.


மனசு தடுத்தாலும் முத்துவின் தொழிலில் இரக்கத்திற்கு இடம் இல்லை. பெற்றவள் என்ன காரணத்தினாலோ அவனை பிறந்த நாளிலேயே குப்பைத் தொட்டிக்குப் பரிசாக அளித்தாள். அவ்வழியாக வந்த ஒரு குப்பையிலிருந்து பிளாஸ்டிக் கழிவு பொறுக்கி விற்று வாழ்வு நடத்தும் மனிதன் ஒருவன் பச்சிளம் பிள்ளையின் அழுகுரல் கேட்டு தொட்டியைக் கிளற முத்துவைக் கண்டான். அவன் அண்ணாச்சியிடம் கொடுக்க முத்துவிற்கு அன்ணாச்சிதான் நினைவு தெரிந்த நாளிலிருந்து அப்பா, முதலாளி மற்றும் ஆசான் எல்லாம். ஆரம்பத்தில் சரோஜா அக்காவுக்கு இடுப்பில் பிள்ளையாய், அப்புறம் ராதாஅக்காளுடன் பிச்சை எடுக்கும் போது கூடப் போவது  இப்படி படிப்படியாக தொழிலில் எல்லா நிலைகளையும் பார்த்தவன். அவன் உலகத்தில் அம்மா கிடையாது. அண்ணாச்சிதான் எல்லாம். அப்போது அவனுக்கு  பதினைந்து வயது இருக்கும். ஒருநாள் நல்ல போதையில் அண்ணாச்சி அவனைக் குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த கதையை எல்லாம் சொல்ல மனித இனத்தின் மீதே ஒரு வெறுப்பு உருவானது. அப்புறம் பெண்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று தன் தாய் பற்றி நினக்கும் போது தோன்றும். ஆனால் அது தவறு எல்லாரும் அப்படியில்லை என்று மனத்தில் சரோஜா அக்காவை நினைத்துக் கொள்வான். சரோஜா அக்கா இடுப்பில் அவனை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கும் போது எது கிடைத்தாலும் முதலில் அவனுக்குத்தான் தரும். ரொம்ப நாள் வரை சரோஜா அக்காவைத்தான் தன் அம்மா என்றே நினைத்திருந்தான்.  இப்போது உலகம் புரிய ஆரம்பித்ததும் அவனுக்கு அன்பு , பாசம் இதெல்லாம் வயிற்றுடன் சம்பந்தப்பட்டது என்றானது. கூளயனை பார்த்து சிரிக்க கூளயன் புரியாத ஒலி எழுப்பினான்.

ஆட்டோவிலிருந்து அந்த பழைய பால் பேரிங்க் பொருத்திய தள்ளு வண்டியில் கூளயனை வயிற்றுப் பக்கமாக , தலை மேல் நோக்கி இருப்பது போல் படுக்க வைத்து தண்டவாளத்தை கடக்க உள்ள வழிபாதையின் ஓரமாக வழக்கம் போல் துண்டு விரித்து அலுமினிய கப்பரையை வைத்து விட்டு ரயில்வே பெஞ்சில் நான்கு உருப்படிகளும் கண்ணில் படுவது மாதிரி தோதான இடத்தில் வந்து உட்கார்ந்தான். இப்பொது மணி ஏழு. நல்ல கூட்டம் வரும் நேரம். பத்து மணிக்கு மேல்  சிறிது கூட்டம் குறைந்ததும் அந்த ஜீவன்களுக்கு எதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும். எட்டு மணிக்கெல்லாம் சரியான கூட்டம். பிளாட்பாரத்தில் நிற்க இடமில்லை. எட்டரை மணியிருக்கும்.





"அய்யோ, காப்பாத்துங்க, சத்யா ஓடி வா" என்று பலரும் ஏக காலத்தில் போட்ட சப்தத்தில் ஒரு குழந்தை மிரண்டு போய் டிராக்கில் நின்று கொண்டிருந்தது. குரல் கேட்ட நேரத்தில்  முத்து உட்கார்ந்திருந்த பிளாட்பாரத்தை அடுத்த விரைவு வண்டிகள் மற்றும் கூட்ஸ் வண்டிகள் வரும் டிராக்கில் படு வேகமாக ஒலிப்பான் ஒலித்தபடி வந்து கொண்டிருந்தது ஒரு அதி விரைவு வண்டி. டிராக் அருகில் அம்மா கையைப் பிடித்தபடி நின்றிருந்த குழந்தை ஒன்று கையை விட்டு ஓடி விபரீதம் புரியாமல்  நட்ட நடு டிராக்கில் நின்றபடி அழ ஆரம்பித்ததுதான் அந்த சப்தம் கேட்கக் காரணம். என்ன தோன்றியதோ டிராக்  அருகே இருந்த கூளையன் உடம்பை வேகமாகத் தள்ள பால் பேரிங்க் வைத்த அந்த வண்டி வேகமாக ஓடி குழந்தையை ட்ரக்கின் மறுபுறம் தள்ளி விட்டது, அது ட்ரக்கில் நின்றது, விரைவு வண்டி கூளயனின் சக்கர வண்டியைத் தூக்கி அடித்து சென்றது  எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. விஷயம் தெரிந்ததும் முத்து, அண்ணாச்சிக்குத் தகவல் தர அண்ணாச்சி, மற்ற விஷயங்களை அவர் அதிகம் பிரச்சனையில்லாது முடித்தார். காப்பாற்றப்பட்ட குழந்தையின் வீட்டில் பூசை அறையில் கூளயனின் படம் மாட்டப்பட்டு, தினம் வணங்கப்படுவதென்னவோ உண்மை. சத்யாவின் மகள் ஒரு நாள் கூளயன் படத்தைக் காட்டி “ யாருமா இது” என்ற போது “ எனக்கு மூத்த அண்ணனாம், அவர் என் உயிரை காப்பாற்றினாராம், அப்படின்னு அம்மா எனக்குச் சொல்லியிருக்காங்க” என்று  சத்யா சொன்னதும் நிஜம். 

Saturday, 9 July 2016

சென்ட்ரல் - சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி

சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில்  சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் . தினமும் இப்படி சென்னை - சூளூர் பேட்டை மார்க்கத்தில் உள்ள ஒரு சிற்றூரின் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் அவர். ஆனால் அவரது தோரணையைப் பார்த்தால் யாருக்கும் அவர் ஒரு சாதாரண ஆசிரியர் போல காணப்பட மாட்டார். அவரது உடை, கையில் உள்ள பிரீஃப் கேஸ் இதெல்லாம் அவரை பார்ப்பவர்களுக்கு எதோ பெரிய அதிகாரி என்ற எண்ணத்தை எளிதில் ஏற்படுத்திவிடும்.














இப்படி சென்னையை மையமாகக் கொண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தாலும், பணியாற்றும் இடத்தைப்பொறுத்து இவர்கள் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் தான் தினசரி பயணம் செய்வது வழக்கம். அந்த 7.40 வண்டியில் இஞ்சினுக்கு அடுத்த மூன்றாவது பெட்டியில் நம் கதாநாயகருடன் பணியாற்றும் எல்லாரும் இருப்பார்கள். கதாநாயகருக்கு என்ன பெயர் என்று நீங்கள் கேட்கும் சப்தம் காதில் எனக்கும் கேட்கிறது. கதாநாயகர்களுக்கு எதற்குப் பெயர்? கதாநாயகர் என்றே இருந்து விட்டுப் போகட்டுமே. சரி நம் கதைக்கு அவர் பெயர் கொஞ்சம் கூட அவசியம் இல்லை என்பது கதை எழுதும் என்னுடைய தீர்மானமான முடிவு. ஆகவே கதாநாயகரின் பெயர் அறியாமல் படிக்க விரும்பாதவர்களுக்கு , இதுவரை பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி. 

நமது கதாநாயகருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.  காலையில் அவர் சகுனம் பார்த்து புறப்படும் போது சகுனம் சரியில்லாவிட்டால் அடுத்த 10.30 மணி வண்டிதான். கடந்த 25 வருடங்களாக அவர் சகுனம் சரியாக இருந்து கிளம்பி பள்ளிக்குக் குறித்த நேரத்தில் சென்ற நாட்களை கணக்கிட்டால் ஒரு நூறு நூத்தம்பது நாட்கள் தேறும். தினமும் எதாவது ஒரு வேலையில்லாத காக்கை வலமிருந்து இடம் பறந்து விடும் அல்லது பூனை குறுக்கே பாய்ந்து அவரைக் கடமை ஆற்ற விடாமல் செய்து விடும். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த அந்த பூனைக்கோ அல்லது காக்கைகோ தண்டண வழங்க இடமுள்ளதா தெரியவில்லை.
அவர் அப்படி 12 மணிக்கு பள்ளிக்கு போனாலும், மாலையில் சரியாக 4 மணிக்கு ‘டாண்’ என்று வீட்டில் இருப்பார். புள்ளியிலிருந்து புறப்படும் போது சகுனம் எப்போதுமே சரியாக இருப்பது இதிலிருந்து சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது. அவர் பணியாற்றும் ஊரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் சென்ட்ரல் வந்து அப்புறம் ஒரு முக்கால் மணிநேர பேருந்துப் பயணம் செய்தால்தான்  வீட்டிற்கு வர முடியும். இதில் ரயிலுக்கும், பேருந்திற்கும் காத்திருக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை. அப்படியானால் அவர் எவ்வளவு காலம் பள்ளியில் இருந்திருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். 

இதில் ஆச்சரியம் அவர் ஒரு முறை கூட எந்த அதிகாரிகளிடம் சிக்கியதில்லை. ஆசிரியர் சங்கத்திலும் எதாவது பொறுப்பு வகிப்பார். அதை வைத்துக் கொண்டு சில மேல் மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு முடிந்தவரை பள்ளியில் வேலை செய்யாமல் இருக்க எதாவது மாற்றுப்பணி அப்படி இப்படி என்று காலத்தைக் கழித்து விடுவார். தலைமை ஆசிரியரை சமயத்தில் மிரட்டவும் சங்கப் பொறுப்புகள் உபயோகமாக இருந்தது. ஆக சுக ஜீவனம் என்பது அவரைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சரியானது. அதிகம் கிம்பளம் கிடைக்கும் வேலை கிட்டாமல் போனதில் அவருக்கு மெகா வருத்தம் உண்டு.






அன்று காலை 7 மணிக்கு கிளம்பி விட்டார். சகுனத்தடை எதுவும் இல்லை. மின்சார ரயிலில் உட்கார இடம் கிடைக்காவிட்டால், அதற்கு காரணம் அவர் வரும் வழியில், அலுவலகம்  செல்லும் மலையாளிப் பெண் கமலா தினம் தலை குளித்து வாசலில் காய வைத்து தலைவாரிக்  கொள்வது தான் என்பார். “மனிசன் வேலைக்கு போகும் போது தினம் ஒரு நாள் போல தலையை விரிச்சிக்கிட்டு ஒரு பொம்பளை வாசலில் நிப்பா? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்” என்று பொருமுவார்.  

இன்றைக்கு கமலா குடும்பத்துடன் குருவாயூர் போய் விட்டதால் அவருக்கு தலைவிரி கோல தரிசனம் இல்லாததில் படுமகிழ்ச்சி. காக்கைகளும், பூனைகளும் வந்து தொந்தரவு தரவில்லை. தினமலர் ராசி பலன், தொலைக்காட்சி ராசிபலன் எல்லாம் இந்த நாள் பொன்நாள் எடுத்ததெல்லாம் பொன்னாகும் என்று சொன்னதில் கூடுதல் குஷியுடன் பேருந்து நிறுத்தம் வந்தார். அங்கும் அதிருஷ்ட லட்சுமி காலியாக பேருந்தை அனுப்பி வைத்தாள். ஏழு ரூபாய் பயணச் சீட்டிற்கு நூறு ரூபாயை எடுத்து நீட்டிய போதும் கண்டக்டர் எரிச்சல் படாமல், எச்சில் தொட்டு எண்ணாமல் சில்லறை தந்து ஆச்சரியப் படுத்தினார்.


ஒரே ஒரு வருத்தம்தான் இன்று நேரத்தோடு பள்ளிக்கு போவதில். மற்றபடி குறை ஒன்றுமில்லை. அந்த சந்தோஷத்தை அசை  போட்டபடி வந்தவருக்கு இன்று வழக்கமான இஞ்சினிலிருந்து மூன்றாவது பெட்டியில், கடைசியாக இருக்கும் நீண்ட பெஞ்சு இருக்கையில் நடுவில் இடம் கிடைத்தது. அதைத்தான் அவரும் விரும்புவார். காரணம் சன்னல் ஓரங்களில் எச்சில் துப்பியிருக்கஅல்லது மூக்கைச் சிந்தியிருக்க வாய்ப்புள்ளதால் அதை பொதுவாக கதாநாயகர் விரும்புவதில்லை. மற்ற நண்பர்கள் வழிபாதைக்கு மறுபுறமுள்ள இருக்கைகளில் இருந்தனர்.

நம்மாள் அருகில் யாரும் இல்லை. கதாநாயகர் கொஞ்சம் கருத்துச் சொல்லிவகை. யாராவது அரசியல் பற்றி பேச ஆரம்பித்தால் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திகொள்ள முடியாது. அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த ஆட்கள், தமிழ்நாட்டு அரசியலை தினத்தந்தி பேப்பர் வழியாக அலச ஆரம்பிக்கவும் நம்ம சார்வாளுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. நைசாக முதலில் மையமாக சிரித்து அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ள தன் சம்மதத்தை வெளியிட்டார். அப்புறம் அவர்களுடன் ஜோதியில் கலந்த போது வண்டி தண்டையார் பேட்டை தாண்டியிருந்தது. 
விம்கோ நகர் வரும்போது அரசியல் தாண்டி சொந்தக் கதை பற்றி பேச்சு திரும்பியது. கத்திவாக்கம் வரும் போது அவர்கள் அரசு பொது மருத்துவமனை அதில் காணப்படும் பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்தனர். காசு இல்லாததால் அவர்கள் படும் பாட்டை சொல்லவும் அப்படியே நம்ம கதாநாயகர் அவர்களிடம் அவர்களின் பிரச்சனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
“சார் என் ஒயிஃப்க்கு உடம்பு சரியில்லாமல் இங்கே அந்த ராம்நாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தோம்”.
“இவரு என் மச்சான், அவர் என் தம்பி”
 “கையில ஒரு லட்ச ரூபாய் வரை கொண்டு வந்திருந்தோம்”.
 “ஆனால் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று எல்லாம் கரைந்து போய் விட்டது.”
“இப்போ ஹோல் பாடி ஸ்கேனாமே, அது பண்ண அப்புறம் மருந்து வாங்க என்று 20 ஆயிரம் தேவை.” ஒரு 5000 ரூபாய் இப்போதைக்கு கிடைத்தால் கூட இண்ணிக்கு அவசரத்துக்கு சமாளித்து விடுவேன். அதற்குள் தம்பி ஊருக்கு போய் பணம் புரட்டி எடுத்து வந்திடுவான்” ஆனா இந்த பட்டணத்தில் யாரிடமும்  நம்பிக்கையா நகையைக் கொடுக்க முடியலை.
“நகை என் ஒயிஃப் போட்டிருந்தது.  8 சவரன் ஆரம், கல்லு வச்சது,”
 “அதை மார்வாடி கடையில் அவசரத்துக்கு வைக்கலாமின்னா, அங்க சேட்டு ரேசன் கார்ட் கொடுத்தால்தான் அடகு பிடிப்பாராம். சந்தேகப்படறாப்படி.”
“அதால நம்ம ஊரு சுளூர் பேட்டைக்கு போய் அடகு வைக்கலாம் ன்னு ஊருக்கு போய்க்கிட்டிருக்கோம்”. “இங்க தெரிஞ்சவங்க யாராவது இருந்தாக்கூட கை மாத்து வாங்கி எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணலாம்” “மத்தியானம் ஒரு மணிக்குள்ளாற பணம் கட்டணமாம்”.


என்று பாதி கண்ணீரும், கவலையுமாக  தேம்ப ஆரம்பித்தார்.
அப்போது பக்கத்தில் இருந்த அவர் மச்சான் தன் பையிலிருந்து அந்த ஆரத்தை எடுத்தபடி, “பாருங்க சார்” என்று காட்டவும், நம்ம கதாநாயகருக்கு கையில் வாங்கிப் பார்க்க ஆசைதான். இருந்தாலும் ஒரு ஒப்புக்கு                     “ அதெல்லாம் வேண்டாம். அத்தனை பணம் எங்கிட்ட இல்லை” என்றார்.  
அப்போது பக்கத்தில் இருந்த தம்பி, “அட, இன்னா சார் சொம்மா பாரு சார். என்னா தூக்கினா ஓடப்போற” என்றதும், கதாநாயகருக்கு காலை சகுனம் நல்லாயிருந்தது, உட்கார இடம் கிடைத்தது, தொலைக்காட்சியில் சொன்ன ஆரூடம் எல்லாம் மனதில் ஓட ஆரம்பித்தது. அதை வேண்டா வெறுப்போடு வாங்கிப் பார்ப்பது போல் பாவனையில் வாங்கிப் பார்த்தார். வாத்தியார் வேலை தவிர ரியல் எஸ்டேட், வட்டிக்கு நகை வாங்கறது, அண்டிமாண்டு பத்திரத்துக்கு கடன் 2 வட்டிக்கு விடுவது எல்லாம் கரை கண்டவர்.  

மனசுக்குள் சின்ன கணக்குப் போட்டார். பொருள் தங்க நகைதான். வெயிட்டும்  குறைந்து 60 கிராமாவது இருக்கும். சவரன் 20000 போனால் கூட 5 சவரன் அப்படின்னாலும் எப்படியும் ஒரு லகரம் தேறும். கையில் இருபதாயிரம் இல்லை. அதனால் என்ன, பள்ளிக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்டேட் பாங்கில் கணக்கில் எப்படியும் ஒரு அம்பதாயிரம் இருக்கும். பார்ட்டி மடிந்தால் 25000 அல்லது 30000 பணம் பாங்கில் எடுத்துக் கொடுத்து விடலாம். அவர்கள் நகையை மீட்க வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம். 

இப்போது ஒரு பொய் விலாசம் கொடுத்து விடலாம் என்றவாறு என்ணங்கள் மனதில் ஓட,
“ கையில் அவ்வளவு பணம் இல்லையே, உங்களுக்கு உதவ ஆசைதான் ஆனா என்ன செய்ய”, என்றதும், மச்சான் நபர்
“பரவாயில்லை சார், உங்களைப் போல அடுத்தவன் கஸ்டத்த உணரவே இந்த மெட்ராசில ஆள் இல்லை. நீங்க எங்க கஸ்டத்த புரிஞ்சிக்கிட்டதுக்கு சந்தோசம் சார் என்றவாறு நகையை மீண்டும் பையில் வைத்துக் கொள்ளவும், நம்ம கதாநாயகருக்கு என்ன சொல்ல என்று புரியவில்லை.
“வேணுமின்னா என் கூட கும்மிடிப்பூண்டியில் இறங்குங்க. பக்கத்தில் பாங்கில் பணம் இருக்கான்னு பார்த்துவிட்டு இருந்தா எடுத்துத் தருகிறேன்”
“பாவம், பணம் கிடைக்க தாமதமானால் ஒரு உயிர் அனாவசியாமா போய்விடுமே என்பதுதான். மத்தபடி பணம் கிடைச்சதும் அட்ரஸ் தருகிறேன். இரண்டு நாளில் பணத்தைத் தந்துவிட்டு மறக்காம வாங்கிக்கிட்டுப் போயிடணும். எனக்கு எதுக்கு உங்க வீட்டு நகை? மனிதாபிமானம் தான் முக்கியம்” ஆமா, உங்களுக்கு  எவ்வளவு  வேண்டும்”.

“குறைஞ்சது 50000 ரூபாயாவது வேணும்”.
அத்தினி பணம் இருக்கா தெரியலை. பார்க்கலாம்”.
“ டேய், முருகா என்னடா சாரை தொந்தரவு பண்ணிக்கிட்டு” நாம கும்மிடிப்பூண்டியில் எறங்கி பாங்குக்கு போய் பணம் இல்லாட்டா டைம் வேஸ்டாயிடும்”. “பரவாயில்லை சார், எங்க கஸ்டம் எங்களோட , நன்றி சார்” என்று சட்டென பேச்சை முடிக்கவும், கதாநாயகருக்கு பார்ட்டியை விட மனசில்லை. தனக்கு உரிமையுள்ள எதையோ இழந்த மாதிரி மனசில் ஒரு சோகம்.
“ ஒரு 20000 பாங்கில் கெடக்கும், எப்படியும் நாளைக்குள் பணத்தை புரட்டி மூட்டுகிறதானால் தருகிறேன்” 
உடனே தம்பிக் காரன், “அண்ணே, சூளூர் பேட்டை போய்விட்டு பணம் புரட்டி மீண்டும் சென்னை வர மூணு மணி ஆகிடும். அண்ணி நெலமைய நினச்சுப் பாருங்க”
உடனே மச்சான்காரன், “ஆமா, மாமா. தம்பி சொல்லுறதும் சர்த்தான்”
என்று ஆமோதிக்க மனசே இல்லாமல் மாமன் காரன், சரி என்ற ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டான்.

இதற்குள் ரயில் பொன்னேரிக்கு வந்து விட்டது. இடையில் அவரவர் மனதில் பல கணக்குகள். இதோ கும்மிடிப்பூண்டியும் வந்துவிட்டது. 


இறங்கும் போது மற்ற ஆசிரியர்களும் இறங்க கதாநாயகரிடம்,
“என்னப்பா, எங்களைக் கண்டுக்கவே இல்லை, புது பிரண்ட்ஸ் கிடைச்சதும் நான்கெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லைதானே” என்றதற்கு
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, சொந்தக் காரங்க கிராமத்திலிருந்து வந்தாங்க. நீங்க போங்க, நாண் இவங்களை பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன். தலைவரிட்ட அரை மணி பெர்மிசன் சொல்லிடுங்க” என்றபடி
“ முருகா, நாம போகலாம்” என்றார்.

ஆசிரியர்களும் இவர் குணம் தெரிந்து, “சரி சார், நாங்க பர்மிசன் சொல்லிவிடுகிறோம் “ என்றவாறு விரைந்து நடையைக் கட்டினர்.
கதாநாயகர் பாங்கிற்குப் போய் பணம் 20000 ரூபாய் எடுத்து கொடுத்தார். பொருளை முருகன் எனப்பட்டவன் பையோடு கையில் கொடுத்து,
“சார் அட்ரஸ் தாங்க. முடிந்தால் சாயங்க்காலமே வந்து மீட்டுக்கிறோம்” அக்கா கண்ணு முழிச்சதும் ஆரத்தைத்தான் கேட்பாங்க” என்றான்.
“அட, நீயி சொம்மா இருக்க மாட்ட? சாருக்கு பள்ளிக்கு லேட் ஆகிடும். நாம பாங்கில் அட்ரஸ்  கேட்டுக்கலாம்”

உடனே உஷாரான கதாநாயகர்,” ஆ, அதெல்லாம் வேண்டாம். இதோ தருகிறேன்”. என்றபடி பிரீஃப் கேசில் பொருளை பத்திரப்படுத்தி விட்டு
ஒரு காகிதத்தில் அவரது 10 வருடங்களுக்கு முன்பு குடியிருந்த வீட்டின் அட்ரஸை எழுதிக் கொடுத்து விட்டு அவசர  அவசரமாக பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மனதில் அப்படி பழைய அட்ரசில் விசாரித்தாலும் யாருக்கும் சரியான விலாசம் தெரியாது. பள்ளிக்கு மோப்பம் பிடித்து வந்தாலும் ,” அடடா, எதோ ஞாபகத்தில பழைய அட்ரசை எழுதித்தந்திட்டேன்”. அப்படி எதாவது சொல்லிக்கலாம். கடவுளே, அவங்க மீட்டு எடுக்க தேடி வராம பொருள் எனக்கே சொந்தமானா உனக்கு தேங்காய் சூறை உடைகிறேன் என்று மனசுக்குள் வேண்டியபடி பின்னால் பார்க்காமல் படபடப்போடு பள்ளிக்கு வந்தவர், தலைமை ஆசிரியருக்கு ஒரு அசட்டு சிரிப்புடன் வணக்கம் வைத்துவிட்டு,


“ சார், சொந்தக்காரங்க கூட வந்தாங்க. பஸ் ஏற்றி விட்டு வந்தேன் சார்’. கையெழுத்துப் போட்டுக்கிறேன் சார்” என்று அவர் அனுமதிக்கும் முன்பே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு பிரிஃப் கேஸை திறந்து பையிலிருந்து பேப்பரில் சுற்றப்பட்டிருந்த பொருளைப் பிரித்துப் பார்த்தார். பித்தளையில் செய்யப்பட்டிருந்த நகை பல்லிளித்து சிரித்தது. கடவுள் சூறைத் தேங்காய் வேண்டுதலுக்கு செவி சாய்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டார்.