Monday, 28 November 2016

குருதட்சணை


“அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில் கிடைக்கும் முடிவுதான் என் மணவாழ்வு பற்றி முடிவெடுக்கும்” என்று மிகத் தெளிவாக ஆகாஷ் பேசியதும் அதிர்ந்து போனார் சிவசாமி.

“என்னப்பா, ஓன்றுமே புரியவில்லை. இப்ப வரன் பார்க்க ஆரம்பித்தால்தான்  நல்ல வரன் கூடி வர எப்படியும் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். அப்புறம் சத்திரம் கிடைத்து பொண்ணு வீட்டுச் சௌகரியம் எல்லாம் பார்த்து கல்யாணம் முடிய இன்னும் ஒரு ஆறு மாசம். ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஒரு வருஷத்திற்குக் குறையாமல் ஆகிவிடும். அதற்குள் நீ சொல்கிற பரிட்சை எழுதி முடிவும் தெரிஞ்சிடும் ஆகாஷ். அதால நா இந்த மாதம் நல்ல நாள் நிறைஞ்ச அமாவாசையில் பார்க்க ஆரம்பிக்கிறேனே. என்ன காமாட்சி நீ என்ன சொல்ற”, என்றார் சிவசாமி.

“மன்னிச்சிங்க அப்பா, இது நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வருடத்தில் எழுதி பாஸ் பண்ணற பரிட்சை எல்லாம் இல்லைப்பா அதை விட நிறைய காலம் பிடிக்கலாம். மேலும் நான் இன்னமும் அதற்கு தயாராகும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிங்கப்பா” என்றான் ஆகாஷ்.
“காமாட்சி, நம்ம பிள்ளை ஏதோ காதல், கத்திரிக்காய் என்கிறாங்களே, அதில எதாவது மாட்டிக்கிட்டான் போலிருக்கு. எல்லாம் இந்த டெலிவிசன் வந்தாலும் வந்தது பசங்க எல்லாம் ரொம்பவே கெட்டுப்போச்சு.”

“சரி. விட்டுச் சொல்லுடா, உனக்கு பிடிச்சிருந்தா அது யாரா இருந்தாலும் நான் வெக்கத்த விட்டு   அவங்க வீட்டுப் படியேறிப் போய் பொண்ணு கேட்கிறேன். சும்மா பரிட்சை அது, இதுன்னு சொல்லிட்டு திடீர்னு ஒருநாளைக்கி மாலையும் கழுத்துமா ஒருத்திய கூட்டிட்டு வந்து காலில் வீழ்ந்து ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி மானத்தை வாங்காதே”.

“ஏம்பா உங்க தலைமுறையில் எல்லாருக்குமே கல்யாணம் இப்ப வேண்டாம் என்றால் காதல் தான் கண்ணில வந்து நிற்குது. வேற காரணம் இருக்காதா இல்லை இருக்கக் கூடாதா? நீங்க நினைக்கிறது மாதிரி இது பேப்பரில் பேனாவால் எழுதற பரிட்சை இல்லைப்பா”
“ஓ, அப்படி என்னடா பெரிய பரிட்சை”?
“ஆங்.அதெல்லாம் உனக்கு புரியாதப்பா. நீங்க ஆன்ம தேடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிங்களாப்பா?

“கலெக்டர் ஆபீஸில் ஜூனியர் அசிஸ்டெண்ட்க்கு இருட்டு ரெக்கார்ட் ரூமில் பைலைத் தேடவே நேரம் இல்லை. இதில் ஆன்ம தேடலா? ஆமா அப்படின்னா என்னடா? கொஞ்சம் விவரமாதான் சொல்லேன்”.

“ அதுப்பா, நாம நம்மையே அறிய தேடற முயற்சிப்பா. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தோண்டிப் பார்க்கணும். ஞானம் ஊற்றெடுக்கும் வரை தோண்டணும். அப்படி ஞானம் வந்திட்டா வேற இல்லற சுகங்கள் உடம்புக்கு தேவைப்படாது. புரிஞ்சுதாப்பா?

“என்னவோபா, இதுக்கு காதல் கத்திரிக்காயே தேவலை போலிருக்கே.
சரி. நீ கடைசியா என்னதான் சொல்லப் போறே”?
“ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா. இந்த தேடலுக்கு வழிகாட்டி வேண்டும். அதாவது நல்ல குரு வேண்டும். சில வருடங்களாகத் தேடி அவரையும் கண்டு பிடித்து விட்டேன். கோவர்த்தனகிரியில் உள்ள சுவாமி ஜோதி தீட்சானந்தா ஆசிரமத்திற்கு இந்த வாரம் சனிக்கிழமை போகிறேன். அங்கே ஒரு மாதம் தங்கி பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் ஞான தீட்சை பெற்றுக் கொண்டு குரு காட்டும் வழியில் என்னை அறிய முயலப் போகிறேன். அதில் ஒருவேளை தோல்வி கண்டால் நீங்கள் சொல்லும் இல்லற வாழ்வு முறைக்கு கண்டிப்பாக வந்து விடுவேன். வேறு எதுவும் சொல்ல இப்போது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்”.

சிவசாமியின் மனதின் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய கவலையும் ஆக அடைத்துக் கொண்டது.

எங்கே தன்னோடு பணிசெய்த தசரதன் பையன் வேற்று மதப் பெண்ணை காதலித்து ரகசியமாக பதிவுத்திருமணம் செய்து கொண்டு வந்து தர்ம சங்கடத்தில் தசரதனை ஆளாக்கியது மாதிரி ஆகாஷ் தன்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும், காமாட்சி,” ஏங்க, நம்ம புள்ளை சாமியாரா காவி கட்டிட்டு போயிடுமாங்க. பயமா இருக்குங்க” என்றபோது வெளியில் “அதெல்லாம் ஒண்ணியும் ஆவாது” என்று தைரியம் சொன்னால் கூட அடிமனத்தில் அப்படி ஒரு பயம் தொற்றிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.

கலெக்டர் ஆபீஸ் கேண்டீனில் கண்ணில் பட்ட நெருக்கமான நண்பர்களிடம் எல்லாம் சுவாமி ஜோதி தீட்சானந்தா பற்றி விசாரிக்கவும், அவர்கள் இரு வேறு விதமாக கருத்துச் சொல்லவும் மனசில் குழப்பம் அதிகரித்தது. மேலும் வேறு நண்பர்களை விசாரிக்கலாம் என்றால், சர்வே டிபார்ட்மெண்ட் குப்புராஜ், “ என்னண்ணே, சுவாமி ஜோதி தீட்சானந்தா சிஷ்யரா மாற்றிட்டாப்ல என்று பேசிகிறாங்களே” என்று குறும்பாகக் கேட்கவும் அவசரமாக மறுத்து, “ அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நேத்து பொழுதுபோகாம டீவி பார்த்த போது அவரது சொற்பொழிவு கேட்டேன். நல்லா இருந்துச்சு அதான் விசாரிச்சேன்”.
“அப்படியா நம்ம கலெக்டர் ஆபீசில் பேசறவங்க, நீங்க சுவாமிஜி கூட சம்பந்தம் பண்ணப் போற லெவல்ல விசாரிச்சதா பேசிக்கிட்டாங்க” என்றவனின் நக்கல் பேச்சிற்குப் பின்னர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டார்.

ஆகாஷ் சனிக்கிழமைதானே ஆசிரமத்திற்குப் போவதாகச் சொன்னான். அவனுடன் தானும் காமாட்சியை கூட்டிக் கொண்டு செல்வது ஒரு மாதம் மூவருமாக தங்குவது என்று முடிவு செய்து விட்டார்.
சூப்பிரண்டெண்ட் ஒரு சிடு மூஞ்சி என்றால் அப்படி ஒரு சிடுமூஞ்சி. ஒரு விதமா ஆபிஸ் அசிஸ்டெண்ட் பாலையாவிடம்  நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்பி மறுநாள் முதல் மெடிக்கல் சர்டிபிக்கேட்  மஞ்சக் காமாலை என்று பொய்யாக வாங்கியாச்சு. பாலையாவுக்கு தனியாக ஒரு நூறு வெட்டியாச்சு. இல்லையென்றால் கிராதகன் ஆபிஸ் முழுதும் கலெக்டர் வரை எல்லாருக்கும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக திருட்டு மெடிக்கல் லீவு போட்டதை கரும சிரத்தையாக சொல்லி விடுவான். 

அடுத்தது சூப்பிரண்டெண்ட கவனிக்கனும். கவரிங் லெட்டரும் மெடிக்கல் லீவு விண்ணப்பம், டாக்டர் சர்டிபிக்கேட் மற்றும் முக்கியமான பேப்பர்கள் எல்லாவற்றையும் கொடுத்து பவ்யமாக நின்றார்.
“என்னது மஞ்சக் காமாலையா? காண்டீனில் முருகலா நெய் ரவா தோசை சாப்பிட்டதை பார்த்தேனே” என்றவர், முக்கியமான பேப்பரைப் பார்த்ததும் “சரி சரி. நாளைக்கு ஒரு நாள் அன் அபீஷியலா வந்து பெண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சிடுங்க. அடிக்கடி லீவு எடுக்காதீங்க. உடம்பை பார்த்துக்குங்க” என்றார். பத்து முறை தேங்கியூ சார் சொல்லி சீட்டிற்கு வந்து உட்காரும் போது மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

அடுத்தது ஆகாஷிடம் எப்படி நாங்களும் கூட வருகிறோம் என்பதை சொல்வது? கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்ள மாட்டான். எப்படியாவது ஆசிரமத்திற்குப் போய் விட்டால் சாமியாரிடம் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி பையனை மீட்டு வந்து விடலாம். சாமியாரே ஆகாஷை இல்லறத்திற்கு போகச் சொல்லி உத்தரவிடும் பட்சத்தில் அதிகம் பிரச்சனை இல்லாமல் சம்பந்தம் பண்ண துடித்துக் கொண்டிருக்கும்  தன் தங்கச்சியிடம் பேசி வர தையில் அதிக ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்து விடலாம். பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் நம்பிக்கை வேர் விட ஆரம்பித்தது.

சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்தவருக்கு காபி கொடுத்த காமாட்சி, “ என்னங்க, என்ன செய்யப்போறீங்க. என் பிள்ளையை சாமியாராக விடமாட்டேன். அதுக்கு நான் என்ன வேணாலும் செய்யறேங்க” என்றாள்.
“அம்மாடி நீ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும். நீ எதாவது செய்து என் திட்டத்தை கெடுத்திடாதே. அது போதும்” என்றார்.
ஆகாஷ் வந்ததும், ஆபீசில் சுவாமிஜி பற்றிக் கேட்டதையும் தனக்கே அவரைப் பார்த்து அருளாசி வாங்க ஆசையாக இருப்பதையும் சொன்னதும் மகிழ்ச்சியுடன், “வாங்கப்பா. பார்த்தீங்களா, ஸ்வாமிஜி இப்படித்தான் எல்லார் மனசிலும் புகுந்து குடிகொண்டு விடுவார்” என்று அரைமணி நேரம்  மூச்சு விடாமல் லெக்ச்சர் அடித்து ஓய்ந்தான்.

அப்புறம் காரியங்கள் கடகட என்று நடக்க ஆரம்பித்தது. ஆகாஷே அவருக்கு, காமாட்சிக்கு, அவனுக்கு கோவர்த்தனகிரி எக்ஸ்பிரசில் மூன்றாம் வகுப்பு  ஏர்கண்டிசன் டிக்கெட் எடுத்தான். சனிக்கிழமை ரயிலேறி ஞாயிறு காலை கோவர்த்தனகிரி வந்து சேர்ந்தாகிவிட்டது. ஆகாஷ் தியானம் பண்ண இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தனி அறையும் , சிவசாமிக்கும், காமாட்சிக்கு இரட்டைப் படுக்கை அறையும் எடுத்துக் கொண்டான். உணவு, தங்குவது மற்றும் இதர பயன்பாடுகளுக்கு மொத்தமாக முன்பணம் பத்தாயிரம் ரொக்கமாக ஆகாஷ் கட்டியதைப் பார்த்த சிவசாமிக்கு மயக்கமே வந்து விட்டது.





ஆசிரமத்தில் எல்லாம் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடோடு நடந்தது. எல்லா வேலைகளையும் தன்னார்வத்தொண்டர்கள் செய்தனர். விருந்தினர்களி மிக மரியாதையாக நடத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் எதாவது நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் சிவசாமிக்கும், அதிகம் வெளியுலகப் புழக்கம் இல்லாத காமாட்சிக்கும் நன்கு பொழுது போனது. அடிக்கடி, “நா பெத்து வளர்த்த புள்ளங்க, அவன் நல்ல வழிக்குத்தான் போவான். கெட்ட வழி அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது” என்று சிவசாமியிடம் சொல்ல, அவர் “ஆமா” என்று அழுத்திச் சொல்லி ஒற்றை வார்த்தையில் முற்றுப் புள்ளி வைத்தார்.

கோவர்த்தனகிரி வந்த பதினைந்தாம் நாள் சுவாமிஜி, சிவசாமியைப் பார்க்க அழைத்தாக சுவாமிஜியின் செயலாளர் கூட்டிச் சென்றார். சுவாமிஜி அறையில் அனுமதிக்கு முன் பல விசாரணைகள், சோதிப்புகள். இறுதியாக அறைக்குள் போன சிவசாமி தம்பதியினரிடம் ஆகாஷுக்கு தீட்சை வழங்கி, ஞானோபதேசம் செய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் சொல்லும்படி கேட்டதும், காமாட்சி தன் பிள்ளை சாமியாராகப் போவதை விரும்பவில்லை என்றாள். சிவசாமியும் அதை பிரதிபலித்து, “ நீங்க சொல்ற எந்த வகையான சேவையும் செய்ய அவனை அனுப்பி வைக்கத் தயார். ஆனால் சன்னியாசி ஆவது வேண்டாம். அவன் மனதை மாற்றுவது அவர் கையில் தான் உள்ளது என்று கண்ணீர் மல்க வேண்ட சுவாமிஜி சிரித்தார். இருபத்தோரு வயதுக்கு மேல் அவன் மேஜர். அவன் எடுக்கும் முடிவை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை என்று சட்டம் சொன்னார். கொஞ்ச நேரம் மௌனமாக யோசித்தவர்,
 “ஆகாஷ் என்ன படித்திருக்கிறான்” என்றார்.
“பல் மருத்துவம் சுவாமி, ஆனால் பெரிதாக பிராக்டீஸ் இல்லை”.
“ஓ. அப்படியா, இவன் உங்களுக்கு ஒரே மகனா”?
“ ஆமாம்”
அருகில் வாய் பொத்தி பவ்யம் காட்டிய செயலாளரை பார்த்து ஆகாஷை அழைத்து வரச் சொன்னார்.
ஆகாஷிடம், “குழந்தாய், ஞானம் என்பது வெறும் இருபது நாள் பயிற்சியில் வந்து விடுவது இல்லை. உன் மனம் இன்னும் பக்குவப்பட வேண்டும். உன் பெற்றோருடன் பேசியதில் உன்னைத்தவிர அவர்களுக்கு வேறு பிடிப்பும் இல்லை. உன் தொழிலில் உனக்கு சேவை புரியவும் புகழ் பெறவும் ஒரு வழி காட்டுகிறேன். அந்த வழியில் நடந்து உன்னை உணர்ந்து கொள். சம்மதமா”? என்றார்.
“ஆன்மீக குருவே, அப்படியே செய்கிறேன். எல்லாம் உங்கள் சித்தம்” என்றான் ஆகாஷ்.

அதன்படி ஆகாஷ் சென்னையில் உள்ள சுவாமி ஜோதி தீட்சண்யா சேவை மையத்தில் பல் மருத்துவராக சேவை புரிய இடம் தரப்படும். ஆசிரமம் சொல்லும் கட்டணத்தில் ஏழைகளுக்குப் பல் மருத்துவம் செய்யட்டும். ஆசிரமம் ஆகாஷின் சேவைக்கு மாதம் சன்மானம் தரும். ஆசிரமம் எளிய அமைப்பு என்பதால் கருவிகள் வாங்குவது, நிறுவுவது எல்லாம் ஆகாஷின் செலவு. ஒரு வருடம் கடந்தபின் ஆகாஷ் விரும்பினால் சேவையைத் தொடர்ந்து ஆசிரமத்தின் மையத்தில் தொடரலாம். விரும்பினால் தனியே சொந்தமாகத் தொழில் செய்யலாம். தனியே தொழில் தொடங்கினால் இப்போது அதிகம் பேர் வர வாய்ப்பில்லை. ஆசிரமத்தின் நிழலில் தொழில் செய்தால் பாதுகாப்பு, பெயர் மற்றும் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்த ஏற்பாடு மூவருக்கும் பிடித்திருக்கவே, சட்டப்படி ஒப்பந்தம் ஆசிரமம் தயாரித்தது. ஞான தீட்சை பெறும் நாளில் கையெழுத்தானது. அளவிலா மகிழ்ச்சியுடன் மூவரும் சென்னைக்கு வந்தனர். லீவு முடிந்து சிவச்சாமி பணியில் சேர்ந்தார். மறு நாளே பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டார். கொஞ்சம் காமாட்சியின் நகைகளை வங்கியில் விவசாயக் கடன் என்ரு சொல்லி அடகு வைத்தார். அங்கே, இங்கே என்று சிறிது கடன் வாங்கி பதினைந்து லகரங்கள் தேற்றிவிட்டார். ஆகாஷ் போய் ஆசிரம சேவை மையத்தின் கிளை மேலாளரிடம் பேசி விட்டு வந்தான். அவர்களும் அறை ஒதுக்கிக் கொடுத்தனர். கருவிகள் பன்னிரெண்டு லட்சம், இதர வேலைகளுக்கு ஒரு லட்சம் செலவு செய்தான்.  திறப்பு விழாவிற்கு சுவாமிஜியே நேரில் வந்திருந்தார்.

ஆகாஷுக்கு மனம் நிறைந்தது இருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நான்கு மாதம் கழித்து ஒருநாள் காலையில் மையத்தில் தன் அறையைத் திறக்கப் போனவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அறையில் வேறு ஒரு பல் மருத்துவர் அவன் இடத்தில் உட்கார்ந்திருந்தார். பதறிப்போய் மைய மேலாளரைத் தொடர்பு கொண்டால் அவர் ஆசிரமம் அவனுக்கு வழங்கிய பணி நீக்க ஆணையை மௌனமாகத்தந்தார்.

அதில் சரியாகப் பணிக்கு வராமல் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சரி. கருவிகளை எடுத்துக் கொள்ளப் போனால், ஒப்பந்தத்தில் கருவிகள் ஆசிரமத்தின் சொத்தாக கருதப்படும் என்ற ஷரத்து பல்லிளித்தது. ஆசிரமத்தின் சேவை மையத்தில் இவன் தகறாறு செய்யலாம் என்று  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆகாஷை சாப்பிட்டுப்போட்ட எச்சில் இலையாக தெருவில் தூக்கிப் போட்டது ஆசிரமம்.
தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை சிவசாமிக்கு போன் செய்து சொன்னதும் அதிர்ந்து போனார். கடனை நினைத்து கண்ணீர் வந்தது. அவர் சொன்ன கதையை யாருமே நம்பத் தயாராக இல்லை.


கடைசியில் நகரத்தின் பெரும் புள்ளி  ஒருவர் எல்லாவற்றையும் கேள்விப்பட்டு சிவசாமியின் கடன் அடைத்து பார்க்க படு சுமாராக இருந்ததால் சரியாக வரன் அமையாமல் இருந்த  தன் மகளை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுத்து, தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொடுத்தது தனிக்கதை. 

Saturday, 26 November 2016

கூலிக்காரன்

சிந்தாதரிப்பேட்டை புண்ணிய தலத்தில் ஓடும் கூவம் ஆற்றின் கரையில் குடியிருந்த ஏழை ஜனங்களில் பலர் போன வருட பெரு மழையில் பாதிக்கப்பட்டதும், பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டனர் இல்லையா. அப்போது துரைப்பாக்கத்திற்கு அரசாங்கத்தின் கருணை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட துரும்பில் ஒன்று நம் முருகேசன். பூர்வீகம் தஞ்சாவூர் பக்கம் . காவிரிப் பாசனம் இருந்த காலத்தில் விவசாயக் கூலியாக நாலஞ்சு தலைமுறையாக வாழ்ந்து வந்த குடும்பம். இவன் காலத்தில் தண்ணித் தகறாறு, மீத்தேன் வாயு என்ற பிரச்சனைகளில் வேலை இல்லாமல் பாதிநாள் ஒரு வேளை சோத்துக்கு வழியில்லாமல் போகவே அசட்டு தைரியத்தில் சென்னைக்கு வண்டி ஏறியவன்.

இவனது 10 வகுப்பு பாஸ் ஒன்றும் பெரிதாக வேலை கிடைக்க உதவவில்லை. முருகேசனுக்கு தலைவரிடம் அலாதி மரியாதை. யாராவது எதாவது தப்பாச் சொன்னா கோவம் வரும்.கண்மண் தெரியாமல் அடித்துக் கூட விடுவான். தலைவருக்காக உயிரையும் தரத் தயார்தான். தலைவரிடம் கட்சி ஆபீசில்  வேலை போட்டுத்தர உறுப்பினர் அட்டை காட்டி கேட்கலாம் என்றால் வாசலில் நிக்கிற வட நாட்டு காவல்காரன் ‘அரே பாய், ஜாவ், ஜாவ்” என்று துரத்துகிறான்.
ஒன்றும் புரியாத நிலையில் எதோ  லாரி கம்பெனியில் கிளீனராக சேர்ந்து டிரைவருக்கு எடுபிடி வேலை செய்தும், சேர்த்து வைத்திருந்த காசில் அவ்வப்போது குவாட்டர் குருதட்சிணையாக வாங்கிக் கொடுத்தும் டிரைவிங் கற்றுக் கொண்டான். அப்படி இப்படி கொஞ்சம் பணம் புரட்டி லைசன்ஸ் எடுத்து விட்டான். முருகேசனுக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. லாரி ஓட்டும் போது பொதுவாக ஹைவேயில் இரவு ராணிகள் கைகாட்டினால் சபலமின்றி தவிர்த்து வண்டியை வேகமாக ஓட்டி விடுவான். அனாவசிய செலவுகள் இல்லாததால் பணம் சேர்ந்தது. ஊரில் வெள்ளையும் சொள்ளையுமாகப் போய் இறங்கிய போது தாய்மாமன் கோவிந்தனின்  மகள் செல்லாயிக்கு அவனை கட்டி வைத்து விட்டனர்.

சென்னை வந்து லாரி  கிளீனர் ஆனதும் ஷெட்டில் தங்கிக் கொள்வான். டிரைவர் என்று ஆன பின்னும் அதை தொடர்ந்தான். ஆனால் இப்பொது அப்படி முடியாதே. வீடு பார்க்க வேண்டிய கட்டாயம். ஆறு மாத அட்வான்ஸ், 2500 ரூபாய் வாடகையில் ஆவடியில் அவுசிங்க் போர்டு LIG 13 அடிக்கு 36 அடி அளவில் கோமணம் மாதிரி வீடு கிடைத்தது. பூந்தமல்லியில் கம்பெனி. அதனால் ஆவடியில் இருந்தா வசதி. வீட்டு ஓனர் யாரோ பெரிய ஆபீசராம். அவருக்கு சிட்டிக்குள்ள ஏழெட்டு பங்களாங்க எல்லாம் இருக்காம். அதனால் இங்க வருவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லாம் புரோக்கர் சின்னப்பன் மூலம் தான். அவருக்கு வேற வேற பேரில் இத மாதிரி பத்திருபது வீடுங்க சிட்டி பூராம் இருக்காம். அந்த மனை குலுக்கலில் மனை கிடைத்த ஆளுங்களை சின்னப்பன் நோட்டம் விட்டு ஆளுக்கு விக்கறதுக்கு நெருக்கடி தருவான். வீடு கட்டற அளவு வசதியில்லாதவர்களிடம் மார்கெட் விலையில் பணம் தவணைப் பணம் போக மீதி பணம் கொடுத்து ஆபீஸர் பேரில்   வாங்கி விடுவான். அப்போ கையெழுத்து போட மட்டும் தான் சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு வருவாராம் அந்த பணக்கார ஏழை. அப்புறம் சின்னப்பன் அதில் வீடு கட்டி முடியும் வரையில் எல்லாவர்றையும் பார்த்துக் கொள்வானாம். இதெல்லாம் சின்னப்பன், முருகேசனிடம் வாடகைக்கும் அட்வான்சிற்கும் பேரம் பேசும் போது சொன்னது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் அய்யா சொல்றதுதான் என்று கறாராகச் சொல்லிவிட்டான். சரி இதை விடக் குறைவாக எங்கேயும் கிடைக்காது என்பதால் கடன் பதினைந்தாயிரம் ரூபாய் கூட வேலை செய்யும் ஆறுமுகம் கிட்ட இரண்டு வட்டிக்கு தண்டல் வாங்கினான். ஆறுமுகம் வட்டிப்பணம் 15 மாசத்திற்கு நாலாயிரத்தைனூறு ரூபாய் பிடித்துக் கொண்டு பத்தாயிரத்தைனூறு ரூபாய் பணம் கொடுத்து மாதம் ஆயிரம் வீதம் அசலை பதினைந்து மாதம் கொடுத்து விட ஏற்பாடாயிற்று. அது தவிர வட்டியில்லாக் கடனாக அண்டிமாண்டு பத்திரம் பதினைந்தாயிரம் பத்திரமும் எழுதி வாங்க்கிக் கொண்டான்.

குடித்தனம் போட்டாச்சு. எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டிருந்தது. செலவு முன்ன மாதிரி இல்லை. செல்லாயி உண்டாகி இருந்தாள். டாக்டர் செக்கப், மருந்து மாயம் அப்படி இப்படி என்று செலவு எகிறியதில் என்ன செய்ய என்றே புரியவில்லை. ஒரு நாள் கிளீனர் பாண்டியிடம் தன் நிலையைச் சொல்லிக் கொண்டிருந்த போது, கவலை படாதேண்ணே. நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்றபோது சரி என்று சொன்னதுதான் தப்பாயிற்று.

பாண்டி கூட்டி வந்த ஆள், ஒரு மஞ்சப்பையில் தரும் பொருளை அவன் டிரிப் போகும் ஊரில் அவர் பாண்டியிடம் அடையாளம் சொல்லி அனுப்பிய நபரிடம் கொடுத்து விட வேண்டும். அதற்கு ஆயிரம் ரூபாய் தந்து விடுவார். இதுதான் ஏற்பாடு. முதலில் பயந்தான். ஆனால் பையில் சின்னதாக நூறு கிராம் நிறையில் நாலைந்து கவர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. கிராமத்து மனிசன் முருகேசனுக்கு சந்தேகம் எதுவும் வரவில்லை. ஒரு வருடம் அதற்குள் ஓடிவிட்டது. செல்லாயிக்கு  நிறை மாசம். கர்நாடகாவில் மங்களூருக்குப் போகும் போது திடீரென மடக்கிய போலீஸ் சோதனையில் அவன் கொக்கெயின் என்ற போதைப் பொருள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டான். அப்போதுதான் மஞ்சப்பையில் இருந்த கவர்கள் பற்றித் தெரிந்தது. தலைக்கு மேல் வெள்ளம், நடப்பது நடக்கட்டும் என்ற மன நிலைக்கு வந்து விட்டான். அப்புறம் பாண்டி தனக்கு ஒன்றும் தெரியாது எல்லாம் முருகேசன் தான் என்று அப்ரூவர் ஆக சாட்சியம் சொல்லி நழுவியதில்  கர்நாடகா சிறையில் தண்டனையாக மூன்று வருடம் கழிந்தது. 

வெளியில் வந்தபோது எந்த லாரிக் கம்பெனியிலும் அவன் நுழைவதற்கு முன்னரே அவன் சரித்திரம் நுழைந்திருந்தது. எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவன் செயிலுக்குப் போன பின் செல்லாயி எப்படியோ காலத்தைத் தள்ளினாள். ஊருக்குப் போனாலும் கெட்ட பெயர்தான். போதைக் கடத்தக்காரன் பொண்டாட்டி என்று. அப்பா கோவிந்தனை வரச் சொல்லி செய்தி அனுப்பினாள். அனாதை என்று சொல்லி கோஷா ஆஸ்பத்திரியில் பிள்ளை பெற்றுக் கொண்டாள்.  கொஞ்சம் பச்சை உடம்பு சரியானதும் கட்டட வேலைக்குப் போய் வயிற்றுப் பாட்டை எதிர் கொண்டாள். ஓரளவு தைரியம் வந்ததும் அப்பனை ஊருக்குத் திரும்பி அனுப்பிவிட்டாள்.  நாலைந்து மாசத்திற்கு ஒருமுறை மங்களுர் சிறையில் முருகேசனைப் பார்த்து பிள்ளையைக் காட்டிவிட்டு வருவாள்.


முருகேசன் இல்லாத போது ஆவடி வீடு எல்லாம் அவளது தற்போதைய பொருளாதாரத்திற்கு சரிவராது என்பது தெளிவாகப் புரிந்தது. புரோக்கர் சின்னப்பன் தொந்தரவு வேற. “இங்கயே இருந்துக்க. நா அப்பப்ப வந்து போறேன்” என்றவன் முகத்தில் காறித்துப்பி விட்டு சிந்தாதரிப்பேட்டை கூவம் கரையில் தஞ்சம் அடைந்தவள்தான். திரும்பி வந்த முருகேசனுக்கு ஆறுதல் கூறி வந்தாள். அமைவதெல்லாம் சில்லறை வேலைகள் தான். அதுவும்  பல நாட்களில் கிடைக்காது. இப்போ மூணு நாளா வேலை இல்லை. இரண்டு நாள் எப்படியோ தள்ளியாச்சு. குழந்தைக்கு நாளையிலிருந்து கொடுக்க ஒண்ணுமில்லை. புரோக்கர் ரவி வந்து கூப்பிட்டார்.கட்சிக் கூட்டங்களுக்கு போஸ்டர் ஒட்டறது, தோரணம் கட்டறது, கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பது கொடிகள் நடுவது இதெல்லாம் அவர்தான் காண்டிராக்ட்.அவனுடைய தலைவருக்கு எதிரிக் கட்சிக் கூட்டமாம்.

ஊர்வலம், பொதுக்கூட்டம் இரண்டு நாள் வேலை.சாப்பாடு, போஸ்டர் ஒட்டுக் கூலி தனி.எல்லாம் சேர்ந்து இரண்டாயிரம் ரூபாய் வரும்.ஆனா மனசு கேட்கவில்லை. பிடிவாதமாக மறுத்தான். பிச்சை எடுத்தாலும் இந்த கேவலமான வேலையை செய்ய மாட்டேன் என்றவனை, நாய் வித்த காசு குறைக்கவா செய்யும். உன் தலைவன் என்னைக்கு வேலை தந்து நீ என்னை காப்பாத்த. குடும்பத்தை, புள்ளயைப் பாரு என்று செல்லாயியும், ரவியும் கரைத்தனர். சரி வேற வழியில்லாமல் சம்மதித்து அட்வான்ஸ் இருநூறு ரூபாய் வாங்கியாச்சு. ராவெல்லாம் கொசுக்கடியில் போஸ்டர் ஒட்டி முடிச்சிப்படுக்கும் போது மணி மூணு. காலையில ஆறு மணிகெல்லாம் பச்சைத்தண்னியை குடிச்சிட்டு, துரைப்பாக்கத்திலிருந்து தி. நகர் வந்து   பழைய கிருஷ்ணவேணி தியேட்டர் பக்கம் காத்திருந்தான். ஆட்டு மந்தை மாதிரி லாரியில் நூறு பேரோட ஏற்றிவிட்ட கட்சிக்காரர் ஆளுக்கு ஒரு சுலோக நோட்டீஸ் தந்து எப்படி சொல்லவேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். வழியேற வாழ்க ஒழிக கோஷம் போட்டபடி பயணம். ஆனால் தலைவர் ஒழிக மட்டும் சொல்ல மனசு இடந்தரவில்லை. யாராவது சிலரோடு பேசிப் பார்க்கலாமே என்றால் அவர்களில் யார் கட்சிக்காரர், யார் தன்னைப்போல கூலிக்கு வந்தவர்கள் என்று தெரியவில்லை.எதாவது பேசப் போய் தன்னிலை மறந்து பேசிட்டால் பிரச்சனை வருவது மட்டுமில்லாமல் அடிவேறு கிடைக்கும். அதனால் ஒண்றும் பேசவில்லை. விவரம் விசாரித்தவர்களிடம் துரைப்பாக்கம் ரவி அண்ணன் ஆள் என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

மத்தியானம் வரைக்கும் ஒண்ணுமேசாப்பிடதரவில்லை.அப்புறம் ஒரு பிரியாணி பொட்டலமும், தண்ணி பாக்கெட்டும் கிடைத்தது.மறைமலை நகர் பக்கத்தில் இறக்கிவிட்டனர்.அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் கூட்ட மேடை வரை ஊர்வலம். ஊர்வலம் தொடங்கி முக்கால் மணி நேரமாயிற்று. அரை குறைச் சாப்பாடு, முந்திய நாள் தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து கண்ணை இருட்டியது. போதாத குறைக்கு பிடிக்காத கட்சி வேறு. திடீரென முன்னால் எதோ குழப்பம். எதிர் திசையில் கூட்டம் ஓடிவர தள்ளு முள்ளு என்ன ஏதுன்னு தெரியதுக்குள்ள முருகேசனை நெடித்தள்ளியது கூட்டம்.அடித்துவந்த வெள்ளம் மாதிரி தள்ளாடியபடி ஓடத்தலைப்பட்ட முருகேசனை மிதித்தபடி முன்னேறியது கூட்டம். காலையில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் முருகேசன் மற்றும் ஐம்பது பேரின் மரணம் தலைப்புச் செய்தியானது.கூட்டம் நடக்கவில்லை என்றாலும் அந்த எதிரிக்கட்சித் தலைவர் மறு நாள் முருகேசன் வீட்டிற்கு ரவியோடு வந்து ஆறுதல் சொன்னார். இறுதிச் செலவுக்கு இரண்டாயிரம் தந்தவர், விரைவில் ஒரு லட்ச ரூபாய் கட்சி நிதியிலிருந்து தருவதாக வாக்களித்தார். கட்சி ஆபிசுக்கு ரவி அண்ணனுடன் பலமுறை அலைந்து விட்டாள். அங்கே கட்சி உறுப்பினர் அட்டை கேட்டனர். 

செல்லாயிக்கு மூன்று மாதத்திற்குப் பின் கட்சி தர இருந்த ஒரு லட்சம் ரூபாய் அவன் வேற கட்சி என்பதால் கிடைக்காமலேயே போனது.
இப்போது ரவி புரோக்கரின் நிரந்தர ஆட்கள் பட்டியலில் செல்லாயி சேர்க்கப்பட்டு முழுசாக நான்கு மாதம் முடிந்து விட்டது. மாதம் நான்காயிரம் சம்பளமாம். கூட்டத்திற்கு தலைவர்கள் பெயர் வைக்க பிள்ளையோடு வரவேண்டுமாம். இதெல்லாம் முருகேசனின்  ஊர்க்கார நண்பன் முத்துசாமி  நாலு நாள் முன்பு வீட்டில் கொத்தனார் வேலையில் வெள்ளை அடிக்க வந்த போது சொன்ன தகவல்.


*( இக்கதை sirukathaigal.com வலைத்தளத்தில் 25.11.2016 அன்று வெளியானது)

Monday, 21 November 2016

மலைப்பாம்புகள்

ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கிளியா இருக்கா.திவாகருக்கு ரொம்பவே பிடிக்கும். சாயங்காலமா குரு ஓரையில கொண்டு வரறேன்” என்றபடி எதிரே வந்தார் தரகர் அய்யாச்சாமி. “சரி. கொண்டு வாங்க” என்றபடி வீட்டை நோக்கி நடந்தார் ராகவன்.
சாயங்காலம் அய்யாச்சாமி காட்டிய அந்த வரனை, அவர் சொன்னபடியே திவாகருக்குப் பிடித்துவிட்டது.
“பொண்ணோட அப்பா ரிட்டயர்ட் டெபுடி செகரட்டரியாக்கும். பல டிபார்ட்மெண்ட்களில் பழம் தின்னு கொட்டை போட்டவர். நல்ல மனுஷாள், ஓரே பொண்ணு, நாகப்பட்டனத்தில் நூறு வேலி காடு கரை இருந்தது. இப்போ எல்லாம் எண்ணைய் எடுக்க ஓ.என்.ஜி. சி யாமே அதுக்குக் கொடுத்தாச்சு. பொண்ணு எம். ஏ. எதிராஜில படிச்சிருக்கா. ஆனா படிச்சிருக்கோம் என்ற கர்வம் துளியும் கிடையாது. இப்போல்லாம் இது மாதிரி மனுஷா சம்பந்தம் கிடைகிறது தெய்வ சங்கல்பம்” என்றவரை, “அப்ப ஜாதகம் பார்த்து சீக்கரம் சொல்லறேன்” என்றார் ராகவன்.
“பாருடா திவாகர், இந்த மனுஷனை, இந்த பூஞ்ச உடம்ப வச்சிண்டு அலையறேன், திரியறேன் எங்கறார். அண்ணனுக்கு கஷ்டம் இருக்கக் கூடாதுன்னு தானே நானே நம்ம வடக்கங்கரை ரங்கநாதனிடம் காட்டி பொருத்தம் பார்த்து கொண்டு வந்திருக்கேன். பத்துக்கு ஒம்பது பொருத்தம், பாபம் சமபலம், தசா சந்திப்பு இல்லை. எல்லாம் நம்ம திவாகருக்கு இவதான் என்கிற மாதிரி அப்படி செட்டாயிருக்கு”.என்ற அய்யாச்சாமிக்கு ஆதரவு குரல் முதலில் திவாகரிடமிருந்து தான் வந்தது.
”அப்பா, அய்யாச்சாமி மாமா என்ன பொய்யா சொல்லப் போறாரு. நீங்க பார்க்கற அந்த வடக்கங்கரை ரங்க நாத ஜோசியரிடம் தான் காட்டியிருக்காரு. அம்மா நீ என்ன சொல்லறே”. என்றதும்,
”ஆமாம் திவா சொல்லறதும் சரிதான் நீங்க நல்ல நாள் பார்த்து பொண் பார்க்க வரோமின்னு தகவல் கொடுத்து ஏற்பாட்டை செய்யுங்க”
என்றதும் ராகவனுக்கு தலையசைப்பதைத் தவிர எதுவும் பேச இருக்கவில்லை. 
“நான் சொல்லக் கூடாது. அம்மா, நீங்களும், திவாகரும் கற்பூர புத்தி, சொன்னவுடன் டக் குனு புரிஞ்சிக்கறீங்க.. அண்ணா ரிட்டயர்ட் தாலுகா ஆபிஸ் சூப்ரண்டெண்ட்தானே. என்ன இருந்தாலும் அவங்க சம்பந்தம் குபேர சம்பத்து மாதிரி. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன், அடுத்து நல்ல தகவலோடு வரேன்”, என்று கிளம்பினார்.
அடுத்த வாரமே திவாகர் பெண் பார்த்தான். சம்பந்தி ஏக தடபுடலாக வரவேற்றார். திவாகருக்கு மட்டும் தனிக் கவனிப்பு. பெண்ணை பார்த்து அங்கேயே சம்மதம் சொன்னதும் கடகட என்று கண்மூடித்திறப்பதற்குள் ஆறு மாதங்கள் ஓடி கல்யாணம் வந்து விட்டது. இரண்டு பெட்ரூம் ஃப்ளாட் காணாது என்று திவாகரிடம் மாமனார் அடிக்கடி சொல்லி மூன்று பெட்ரூம் ஃப்ளாட்டுக்கு மாறியாச்சு. பழைய ஃப்ளாட்டை விற்றது போக தேவைப்பட்ட இருபது லட்சத்தை திவாகருக்கு கொடுத்தாகி விட்டது. மாமனார் வீடு வாங்க காட்டிய ஆர்வத்தை துண்டு விழும் பணத்திற்கு அல்லாடிய போது, “ சம்பந்தி நீங்க உங்களுக்கப்பறம் யாருக்கு தரப்போறீங்க. அவங்களுக்குத்தானே. அதை இப்போ கொடுத்தால் வட்டிக்கு வாங்க வேண்டாமே”, என்று சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லியும், மருமகள் காவ்யா, “திவா அப்பா சொல்லறது சரிதானே” என்று வேப்பிலை அடித்தும், பணத்தை எடுத்துத்தருவது தவிர வேறு வழியில்லை என்ற நிலை. மனைவி யசோதாவிற்கு ஒன்றும் தெரியாது. கணவன், அடுப்படி, பிள்ளை  இப்படியே அவள் வாழ்க்கையை கிட்டத்தட்ட முக்கால் பகுதி கழித்தாயிற்று. ரிட்டயர் ஆன போது கிடைத்த கிராஜூட்டி, பிராவிடண்ட் பண்ட் எல்லாமா சேர்ந்து முப்பது லகரம் வந்தது. அதில் பத்தை அவள் பெயரிலும் மீதியை தன் பெயரிலும் வைப்பு நிதியாக வங்கியில் வத்திருந்தார். பென்ஷன் மாதம் பதினைந்தாயிரம் வருகிறது. அதனால் அதிகம் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தார். புது வீட்டில் சின்னஞ்சிறிசுகள் ஒரு படுக்கை அறையிலும், மற்றது இவர்களுக்குமாக ஆனது.  ஆரம்பத்தில் வாரம் வெள்ளிக் கிழமை மதியம் சம்பந்தி ராஜசேகர் தம்பதி சமேதராக பெண்ணைப் பார்க்க வருவர். இரவு சாப்பிட்ட ஹோட்டலுக்கு மாப்பிள்ளையையும், பெண்ணையும் கூட்டிக்கொண்டு போய்விட்டு திரும்புவர். ராகவனையோ, யசோதாவைவோ யாரும் கூப்பிடுவது இல்லை. அவர்களும் இது பற்றி பெருசாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த இரு நாட்களும் அவர்கள் அந்த மூன்றாவது படுக்கை அறையை தங்கள் அறையாக மாற்றிக் கொண்டு தங்கி விடுவது வாடிக்கை ஆயிற்று.           
ஒரு நாள் திவாகரிடம் ஜாடையாக கேட்டபோது
“ அவங்களுக்கும் யார் அப்பா இருக்காங்க? அதுவும் என் கடமைதானே” என்ற பின் ராகவன் அந்த தலைப்பைத் தொடுவதே இல்லை. மருமகள் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். திவாவுக்கு ஏழு மணிக்கு கிளம்ப அலுவலக கார் வந்திருக்கும். அதற்குள் அவனுக்கு டிபன் செய்து, மதியம் சாப்பிட சமைத்து அனுப்புவது எப்போதும் போல யசோதா அம்மாவின் வேலை ஆயிற்று. ராகவன் அவளிடம் கேட்டால், “பாவம் சின்னஞ்சிறிசுங்க, நாளைக்கு அவதானே பார்த்துக்கப் போறா, நா இருக்கற வரைக்கும் நான் செய்யறேன்”. என்பதே பதிலாக வரும்.
அன்று திவாகர் சீக்கிரமே அலுவலகம் வந்துவிட்டான். எச்.ஆர் ரில் கூப்பிடுவதாக தகவல் வந்தது. கதவை தட்டி உள்ளே நுழைந்தவனை “கங்கிராட்ஸ் திவா. நீங்க பலநாளா ஆசையோடு எதிர்பார்த்த அமெரிக்கா செல்லும் வாய்ப்பு நம்ம சி.எம்.டி உங்களுக்கு அளித்திருக்கிறார். மொத்தம் மூன்று வருடம் காண்டிராக்ட். அப்புறம் நீங்க விரும்பினால் மேலும் ஐந்து வருடம் அல்லது அதற்கு மேலோ இருக்கலாம். நான் இன்னும் இரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் இப்ப பாக்கி இருக்கிற வேலை எல்லாம் செட்டில் பண்ணிட்டால் போதும். பை தி பை நீங்க குடும்பத்துடன் போகலாம், ஆனா உங்களுக்கும் உங்க மனைவிக்கும் மட்டும் கம்பெனி விமான கட்டணம் தரும். மற்ற எல்லாருக்கும் நீங்க தான் டிக்கெட் எடுக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா இதெல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். நீங்க அழைச்சுக்கிட்டுப் போறவங்க விவரம், அவங்களுக்கான டிக்கெட் பணம் மூன்று லட்சம் இதை இன்னும் இருபது நாளில் கொடுத்துவிடுங்க. மற்றத நாங்க பார்த்துக்கிறோம். ஆல் தி பெஸ்ட்” என்றார் எச்.ஆர் மேலாளர்.         
திவாகருக்கு ஒரே சந்தோஷம். உடனே காவ்யாவிற்கு  செய்தியை சொன்னான். அவள் உடனே ‘எங்க அப்பாகிட்ட சொல்லுங்க’ என்றாள்.
‘சரி. நீ, எங்க அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடு’ என்றதற்கு “சரிங்க’ என்று போனை வைத்தாள்.
மாலையில் வீட்டிற்கு வந்த போது அப்பா இல்லை. அம்மா சமையல் அறையில் இருந்தாள். தன் அறைக்கு வந்து காவ்யாவை பார்த்தவனுக்கு அதிர்ச்சி. படுக்கையில் படுத்திருந்தவளை என்னாச்சு காவ்யா என்றான். தெரியலீங்க. காலையிலிருந்தே ஒரே தலை சுற்றல் வாந்தி என்றாள். உடனே அம்மாவிடம் காவ்யாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கால் டாக்ஸியில் டாக்டர் கிளினிக் போனான். டாக்டர் அவளைப் பரிசோதித்துவிட்டு, அவள் தாய்மை அடைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். திவாவுக்கு இரட்டை சந்தோஷம். வீட்டிற்கு வந்ததும் அப்பா,அம்மாவிடம் சொன்னதும் அவர்கள் இருவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். அப்படியே அமெரிக்க காண்டிராக்ட் பற்றி சொல்ல ஆனந்தம் பொங்கியது.
விமான கட்டணம் பற்றி பேச்சு வந்ததும் அம்மா உடனே என் பேருல அப்பா போட்ட பணத்தில தரச் சொல்லிடறேன் என்றதும் அவனுக்கு அப்பவே அமெரிக்கா போன மாதிரி இருந்தது. மகள் கருவுற்ற செய்தி கேட்டு சம்பந்தியும், சம்பந்தியம்மாவும் வந்தனர். அம்மா தன்னுடன் இருந்து கவனிக்க காவ்யா விரும்பியதால் அமெரிக்கா கிளம்பும் வரை சம்பந்தி தம்பதி அங்கேயே தங்க முடிவாயிற்று.
சம்பந்தி சுறுசுறுப்பாக முக்கியமான எல்லா பொருட்களையும் மறுநாளே லாரியில் கொண்டு வந்து விட்டார். அவரும் ராகவனும் வாக்கிங் போனாலும் தனித்தனியாகத்தான் போவார்கள். சம்பந்தி ராஜ சேகர் வந்த பின் வரவேற்பறையிலிருந்து தொலைக்காட்சி அவர்கள் அறைக்கு குடிபெயர்ந்தது.
யசோதா அம்மா தான் எல்லாருக்கும் சேர்த்து சமையல். சாப்பாடு, காபி, டிபன் என்று எல்லாம் சம்பந்தி குடும்பத்திற்கும் சேர்த்தே செய்வது எழுதப்படாத சட்டம் என்றானது. அம்மா பாவம் தனியா சமையல் வீட்டு வேலை செய்து கஷ்டப்படுவது திவாகருக்கோ, காவ்யாவிற்கோ, சம்பந்தி அம்மாவுக்கோ கவனத்தில் வராமலே இருந்தது ஆச்சரியம்தான்.
அப்படியும், இப்படியுமாக ஒரு வாரம் ஓடிவிட்டது.
காலையில் நடைபயிற்சி முடித்து வந்தவர் யசோதா எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்றார். அருகில் உள்ள பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தாயிற்று.
வெளியே அம்மா கண்ணைமூடி பிளாஸ்டிக் சேரில் கவலையாக இருந்தாள். திவாகரை, “மாப்பிள்ளை இப்படி சித்த வாங்கோ” என்று கூப்பிட்ட ராஜ சேகர் “இத பாருங்கோ மாப்பிள்ளை, அப்பாவுக்கு வயசாயாச்சு, தீ ன்னு சொன்னா நாக்கு வெந்திடாது. எதுவும் ஆகலாம் அதனால அப்பாவை பார்த்துக்கணும் அப்படின்னு அமெரிக்க காண்டிராக்ட வேண்டாம் என்று சொல்லிடாதீங்கோ. எங்க ஸ்டேட்ட்ஸுக்கு உங்க குடும்பம் சமதை இல்லனாலும் ஒங்களுக்கு காவ்யாவை கட்டித்தந்ததே உங்க கெரியர் பார்த்துத்தான். முதலில் அவர் எதாவது சேர்த்து வச்சிருக்காரா? அப்படி ஒன்னும் இருக்கற மாதிரி தெரியல. உங்களுக்கு இப்போ ஆயிரம் செலவிருக்கு. கொஞ்சம் தேவலை ஆனதும் வீட்டிற்கு கொண்டு போயிடலாம். இவங்க பணம் பிடுங்குவார்கள். அப்பாவை அமெரிக்கா கூட்டிண்டு போகறதுல தப்பொன்னும் இல்லதான், ஆனா அங்க வைத்தியச் செலவுகள் தாக்குபிடிக்க முடியாது. இங்க நல்ல முதியோர் இல்லம் பார்த்து சேர்த்திடலாம். அவரோட பென்ஷன் தொகைய அங்க கட்டினாலே போதும். கூட ஐந்து, பத்து ஆனாக்கூட நாம கட்டிடலாம். இப்ப காவ்யாவையும் அப்புறம் குழந்தையையும் பார்த்துக்க மாமியும் நானும் உங்களோட வந்திருக்கோம். இங்க எல்லா மனுஷாளையும் விட்டு அமெரிக்கா வர பிடிக்கலைதான், ஆனா உங்களுக்காக அதெல்லாம் விட்டுக் கொடுக்கறோம். என்ன காவ்யா நாஞ்சொல்லறது”, என்றவரிடம் ‘ஆமாங்க, நல்லா யோசித்து பாருங்க. அப்பா சொல்லறதுதான் சரிங்க” என்றாள் காவ்யா. “சரி, இப்ப போய் இதுவரை ஆன தொகை மத்த விவரங்களை தெரிஞ்சிக்கிட்டு வாங்க” என்றவரிடம் பேசவே பிடிக்கவில்லை திவாகருக்கு. ஆனாலும் தன் அமெரிக்க வாழ்வு போய்விடுமோ என்ற பயமும் இருந்தது.


எதுவானாலும் சரி. அப்பா,அம்மாவை கூட்டிப்போக முடியாது. முதலில் அவரது உடல் நிலை விமானத்தில் முப்பத்தாறு மணி நேர  பயணத்தை தாங்க முடியுமா என்பது சந்தேகமே, நல்ல முதியோர் இல்லத்தில் செர்த்து விடலாம். மாமா சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. இங்க வைத்து பராமரிக்க செலவாகும். பார்க்கலாம் என்ற நினைப்பில் நடந்தவனை டாக்டர் கூப்பிட்டு, “ நாங்க அதிகம் முயற்சி செய்தோம் ஆனாலும் உங்க அப்பாவை கடவுள் அழைத்துக்கொண்டு விட்டார். ஐ யம் சாரி,” என்றதும் அழுகை பீறிட்டது. அம்மாவிடம் எப்படி சொல்வது என்று அருகில் சென்று, “அம்மா” என்று லேசாக உலுக்கினான். வழக்கம் போல் மகனுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க விரும்பாத அம்மா  அவன் மடியில் தன் உயிரற்ற உடலை விட்டு விட்டு சிரித்தபடி கணவருடன் கை கோர்த்து பறந்து வானில் மறைந்தாள்.