Thursday, 23 March 2017

மகளிர் தினம்

“டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும்  . நான் அதனாலஇன்னோவாவை எடுத்துக்கிறேன்.   நீ நல்லிக்கு போக நம்ம மாருதி ஆல்டோ வை எடுத்துக்க பிளீஸ்” என்று மனைவியிடம் கெஞ்சினார் சங்கரன். நான் மட்டும் என்னங்க லேடிஸ் கிளப் மெம்பர்கள் ஆறு பேர் போறோம். எப்படிங்க ஆல்டோவில போக முடியும். இதுல நம்ம கௌரவமும் இருக்கு புரிஞ்சிக்குங்க என்றாள்.

சங்கரன் ஒரு கணம் யோசித்தார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் தன்னால்  இப்போது முரண்படுதல் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க  முடியாது. வெளியில் சிரித்தபடி “ஓகே டார்லிங், நான் ஃபாஸ்ட் டிராக் புக் பண்ணிக்கிறேன். யூ கேரி ஆன்” என்று சொல்லியபடி கழுத்துப்பட்டியின் இறுக்கத்தை தளர்த்தியபடி கிளம்பினார்.

போன வாரம் அதிகம் விற்பனை இல்லாத தாய்மையின் குரல்  பத்திரிக்கையின் ஆசிரியர் இந்திர சாமியை ரவுண்டு கட்டிய உரிமையாளர் எப்படியும் இந்த மாதம் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் காட்டாவிட்டால் பத்திரிக்கையை ஊத்தி மூட வேண்டியதுதான் என்று அபாய அறிவிப்பு செய்திருந்தார். இந்திர சாமிக்கு வாய்த்த துணை ஆசிரியர்களில் அதிகம் துடிப்பான ஆள் பால்துரை.  சும்மா அட்டகாசமான திறமைகள் கொண்ட ஆள். அவன்தான் அவருக்கு தேறுதல் சொல்லி “எல்லாம் பண்ணிடலாம் சார். கவலைபடாதீங்க. உங்க பத்திரிக்கை தர்மம் அது இது  எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க. நான் இரண்டு மாசத்தில் நம்ம பத்திரிக்கையை மார்க்கெட்டில் கும்முன்னு தூக்கிடறேன்” என்றான்.
“யப்பா, எல்லாம் செரிதான். நான் இருபது வருஷமா பத்திரிக்கை நடத்தியிருக்கேன். என் பேர் ரிப்பேர் ஆகாம பார்த்துக்க” என்றார் இந்திரசாமி.
“சரிங்க அய்யா” என்றவன் “ஒரு வாரத்தில் நல்ல செய்தியுடன் வருகிறேன் என்னைத் தேட வேண்டாம்” என்று காதலனுடன் ஓடிப்போக இருக்கும் காதலிகள் எழுதிவைக்கும் கடித வரிகளைச்  சொல்லிப் பறந்தான்.
போன வாரம் கன்னிமாரா நூலகத்தில் எதையோ தேட வந்த பால்துரைக்கு  “தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் மனைவியர் பங்கு” என்ற கட்டுரை கண்ணில் பட்டது. அதில் அதிகம் பிரபலமாகாத பத்து பெயர்களை முதலில் எடுத்துக் கொண்டு வரிசையாக தொலபேசியில் அழைத்தான். முதலில் மாட்டியது நம் மங்களம் சங்கரன் அவர்கள்தான்.  மங்களம் சங்கரன் பெரும் பணக்காரத் தந்தைக்கு ஒரே மகளாக பூமியில் ஜனித்ததுதான் அவரது சாதனை. மற்றபடி பணக்கார வீட்டுப் பெண்களுக்கே உரிய அலட்டல்கள் வெட்டி அரட்டைகள், ஸ்டேட்டஸை காட்ட என்று உள்ள கடைகளில் தினமும் போய் ஷாப்பிங் செய்தல் , வாட்ஸப், ஃபேஸ்புக் , ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்துகள், பணக்கார கிளப்புகள் போன்ற இத்தியாதி நித்திய கர்மானுஷ்டானங்கள் அவளுக்கும் உண்டு. வழக்கம் போல  ஒன்றும் ஐவேஜி இல்லாத நல்ல பழக்க வழக்கம் கொண்ட புத்திசாலியான கட்டின பசுவான அப்பா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை  கல்யாணம் பண்ணிக்கொண்டது . தந்தை கம்பெனியில் சேர்மன், மகள் வைஸ் சேர்மன், மாப்பிள்ளை நிர்வாக இயக்குனர். இப்போ சொல்லுங்கள் சங்கரன் அலுவலகத்திற்கு செல்ல ஃபாஸ்ட் டிராக் ஏற்பாடு செய்து கொண்டது சரியா இல்லையா என்று.
போனில் அம்மணியிடம் பேசிய பால்துரை முதலில் கட்டுரையைப் படித்து வியந்ததாக சொல்லி நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான். சந்திப்பின் போது, நிறையவே முகஸ்துதி செய்தவன் “அம்மா, உங்க சாதனைகள் இப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்கக் கூடாது. உலக அளவில் பரிணமிக்க வேண்டும். நீங்க மட்டும் கொஞ்சம் ஒரு இரண்டு மூணு லட்சம்செலவு பண்ணினால் போதும். அந்தப் பணமெல்லாம் உங்களைப் போன்ற மகாலட்சுமிக்கு சில்லரைக் காசு.அது நீங்க வாங்கும் ஒரு சாதாரண சேலை விலைதான்.  உங்க திறமைகளை உலகறியச் செய்து விடலாம் என்று ஆசை காட்டினான்.



“அப்படியா ஆனால் நான் ஒன்றும் பெரிசா சேவை எதுவும் செய்யவில்லையே” என்றுஅப்புராணியாகக் கேட்ட மங்களத்தை
“அம்மா, அநுமனுக்கு அவன் பலம் தெரியாதாம். அத மாதிரி உங்க உயரம் உங்களுக்கு தெரியவில்லை. அதை தெரியவைப்பது என் கடமை” என்று சொல்லி இருபதாயிரம் தனது சேவைக் கட்டணமாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான்.
ஒரு வாரம் கழித்து வண்ண வழு வழு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வந்தவன் மங்களம் கையில் கொடுத்தான். பிரித்துப் பார்த்த மங்களத்திற்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தங்க நிற எழுத்துக்களில் வரும் மகளிர் தினத்தன்று எழுச்சியுடன் சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட திருமதி. மங்களம் சங்கரன் அவர்களை ‘பணிபுரியும் பாவையர் பேரவை’ என்ற உழைக்கும் மகளிர் அமைப்பு தாய்மையின் குரல் பத்திரிக்கையுடன் இணைந்து “ஒப்பிலா அன்னை” விருது வழங்கிக் கௌரவிக்கிறது. அன்னாரின் சேவைகளைப் பாராட்டி நகரின் நான்கு முக்கிய பிரமுகர்கள் பேசுவார்கள் என்றும் விழாவின் ஒரு அங்கமாக  பணிபுரியும் பாவையருக்கான நலத்திட்ட உதவிகளை செய்யவிருக்கிறார் என்று விளம்பியது. அழைப்பிதழைக் கண்டு மிரண்டு போன மங்களத்தை மேலும் மிரட்ட பத்துக்கு எட்டு வண்ணச் சுவரொட்டி, சிறு துண்டு பிரசுரங்கள் என்று கலங்கடித்தான். மொத்தமே அவன் அடித்தது எல்லாவற்றிலும் 100 தான். பத்திரிக்கை சாதாரண ஆட்களுக்கெல்லாம் வேண்டாம் . உங்க நட்பில் உள்ள பெரிய ஆட்களை மட்டும் அழையுங்கள், நிறைய கும்பல் இருந்தால் விழா கட்டுப்பாடாக இராது என்று அறிவுறுத்தினான். இப்போது செலவுக்கு மேலும் எண்பதாயிரம் வாங்கிக் கொண்டான்.
அடுத்தது காஜா மொகிதீனைப் பார்த்து நல உதவி வாங்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். காஜா பிகு பண்ணிக் கொண்டான்.
“அப்பா பால்துரை, லேடிஸ் எல்லாம் கூட்டி வரது மகா தொந்திரவு. பத்திரமா கூட்டிப் போய் கொண்டு விடணும். பிரச்சினை வரக் கூடாது.”
“ என்னடா, உன்னய நம்பி கமிட்டாயிட்டேன். பார்த்து சொல்லுடா” என்றவனிடம்,
“ சரி. காலை எட்டுமணியிலிருந்து எட்டு மணி நேரம்தான் அதாவது மாலை நான்கு மணி வரை. இருட்டுக்கு முன்ன அவங்களை வூட்டில் விட்டிறணும் . இருபது பேரை கூட்டிப் போக திரும்ப கொண்டுவர டெப்போ டிராவலர் இரண்டு ஏற்பாடு பன்ணிடறேன். கூலி தனியா ஆளுக்கு ஐநூறு தரணும். அது தவிர இரண்டு வேளை டிபன், காபி ஒரு வேளை சாப்பாடு. எல்லாம் சேர்த்து மொத்தமா ஒரு ஐம்பதாயிரம் ஆகும் பரவாயில்லையா” என்றான். பால் துரை , மங்களத்திடம் விவரம் சொல்லி கூடுதாலாக ஒரு ஐம்பதாயிரம் கறந்தான்.
ஒரு நாள் கூலி இருநூறு ரூபாய் போயிடும், என்றவர்களைக் காஜா மொகிதீன்  போக வர ஏ.ஸி வேன் ,  மாலை ஐந்து மணிக்கெல்லாம் திரும்பிடலாம். காலை எட்டு மணிக்கு வீட்டில் வந்து ஏற்றிக் கொள்கிறேன் என்று உறுதி கொடுத்தும் சரிகைக் கரை போட்ட புடவை, நானூறு ரூபாய் பணம், டிபன், சாப்பாடு அப்படி, இப்படி ஒரு வாரமா  சொல்லிச் சொல்லி  வேப்பிலை அடித்து பரமு,முத்து, ரோசம்மா, மரியா, சக்தி என்று அப்படியும் இப்படியுமா இருபது பேரை தேத்திவிட்டான். ஊருக்கு வெளியே பெரிய கல்யான மண்டபத்தில் விழா. 

விழாவை ஒரு நாப்கின் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பால்துரை  விளம்பரம் செய்து கொள்ள, போஸ்டர், அழைப்பிதழ், சிறு பிரசுரங்கள் செலவை அவர்களிடம் விட்டு விட்டான். விழாவில் வாழ்த்துரை வழங்கும் பெரிய மனிதர்கள் நால்வரும் அதிகாரமிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்று தற்சமயம்  வீட்டில் அதிகம் பேச வாய்ப்பில்லாத,  பேச மைக் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரிட்டயர்ட் ஆசாமிகள். அவர்களைக் கிட்டத்தட்ட இலவசமாகவே பிடித்து விட்டான். 


அவர்களின் உரையை வீடியோ கவரேஜ் செய்து , பத்திரிக்கையில் எழுத ஏற்பாடு செய்தாகி விட்டது.  ஆசிரியரிடம் நூறு பிரதிகளிக்கான ஒராண்டுச் சந்தாவுக்கான தொகை ரூ. ஒரு லட்சம் மங்களத்தால் செலுத்தப்படும். எல்லாச் செலவும் போக அவனுக்கு எப்படியும் ஒரு இருபத்தையாயிரம் நிற்கும்.  மங்களத்திற்குப் புகழ், விருது, பெருமை, நாப்கின் கம்பெனிக்கு விளம்பரம், முதிய அறிஞர்களுக்கு மேடை, பத்திரிக்கைக்கு அனாமத்தாக  நூறு ஓராண்டுச் சந்தா, ஏழைகளுக்கு உதவி என்று பல் நோக்காக இப்படி கவனமாகத் திட்டமிட்டு அருமையாக வலை பால்துரை பின்னியிருந்தான்.


இன்னிக்கு மகளிர் தினம் கொண்டாட காரப் பாக்கத்தில் ஒரு கல்யாண சத்திரத்தில் விழாவை அந்த பன்னாட்டு நாப்கின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு  ஏ. சி .வேனில்  விழாவுக்கு போனதுமே டிபன் பொங்கல், இட்லியுடன் வடை மற்றும் காபி எல்லாம் காஜா மொகித்தீன் ஏற்பாடு செய்திருந்தான். இருபது பேருக்கும் 200 ரூபாயில் நைலக்ஸ் புடவை, ஒரு நாப்கின் பாக்கெட்,  வாசனை சோப்பு முதலான பொருட்கள், நானூறு ரூபாய் பணம் என்று எல்லாம் ஐம்பதாயிரம் ரூபாயில் அவன் ஏற்பாடு. அடுத்தது எல்லாரையும் படம் எடுத்தாங்க. ஒரே சந்தோசம்தான். மேடையில் மட்டும் இல்லாம கண்ணில் படும் எல்லா இடத்திலும் நிறைய நாப்கின் விளம்பர பேனர்கள். மேடையில் எண்ணி ஏழு நாற்காலிகள். நடு நாயகமாக மங்களத்திற்கு சிவப்பு வெல்வெட் சிம்மாசனம்.
காலை பது மணிக்கு விழாஆரம்பித்தது. சாரி சாரியாக கார்களில் விதவிதமான நறுமண வாசனையுடன் நூற்றுக்கணக்கில் மேல்தட்டு வர்க்க பெண்மணிகள் வந்திறங்கினர். யார் யாரோ பேசினார்கள். கை தட்டினார்கள். இவங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா மகளிர் விடுதலை எனற வார்த்தை வந்தா கைதட்ட சொல்லிட்டதாலே பிரச்சனை இல்லை.


முக்கிய பிரமுகரான மங்களம் பட்டுப்புடவையில், வைர அட்டிகையுடன் மேடைக்கு வந்தாங்க. அவங்களைப் பார்த்த ரோசம்மாவுக்கு மயக்கம் வராத குறை.  சக்தியிடம் வா, போயிடலாம் என்றாள்.மற்றவர்கள் புடவை வாங்கிட்டுப் போகலாம் என்று அவளைஅடக்கி விட்டனர்.


மங்களம் பெண் விடுதலை பற்றி ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாங்க.
ஏகப்பட்ட பாராட்டு. வந்திருந்த நான்கு ரிட்டயர்ட் முன்னாள் அதிகாரிகளும் தங்கள் பதவிக்கால பிரதாபங்களை அள்ளி விட்டு அரை மணி நேரம் பேசிய பின்னர் மங்களத்தையும் தர்மதேவதை, கருணையின் பிறப்பிடம், தமிழ் நாட்டின் அன்னை தெரசா என்றெல்லாம் முன்பின் தெரியாத மங்களத்தை கூச்சநாச்சமின்றி என்று புகழ்ந்து தள்ளினர்.  ரோசம்மாவுக்கு மட்டும் தான் தெரியும் மேடையில் பேசும் தன் எசமானியம்மா புடவையில் லேசா துருக்கறை பட்டதுக்கு எகத்துக்குத் திட்டியதுமில்லாமல் நாலு நாள் சம்பளத்தை வேறு பிடிச்சது. இன்னிக்கு புடவை வாங்க விடுப்பு எடுத்தது தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடி, இந்த மாத சம்பளத்தை முழுசா பிடிச்சிடும்.


மங்களத்திற்கு ஆளுயர மாலை போட்டு பாராட்டுப்பத்திரம் பால் துரை யால் உருவாக்கப்பட்ட லெட்டர்பேட் அமைப்பான 'பணிபுரியும் பாவையர் பேரவை'த் தலைவி என்ற வேடத்தில் வந்த ரோசம்மா வீட்டின் அருகில் வசிக்கும் துணை நடிகையைக் கொண்டு தரச் செய்த போது கூட்டத்தின் கவனம் தன் மீது இல்லாததை கவனித்தாள் ரோசம்மா. நைசாக பாத்ரூம் போவது போல் மெல்ல நகர்ந்து பாத்ரூமில் ஒளிந்து கொண்டாள். 

புடவை மற்றும் நாப்கின் வாங்கிக்க ரோசம்மா பேரை மைக்கில் கூப்பிட்ட போது, ரோசம்மா தப்பித்து விட்ட மகிழ்ச்சியுடன் பாத் ரூமுக்குள் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

Tuesday, 21 March 2017

வாய்மையே வெல்லும்

                                   அலுவலகம் பரபரப்பாக இருந்தது. டெஸ்பாட்ச் ரங்கசாமி சாரை இன்னும் காணோம். தினத்தந்தியை விடவும் செய்திகளை முந்தித்தருவதற்கு அவரால்தான் முடியும். அழகு நெல்லைத்தமிழில் அவர் சொல்லும் செய்திகளைக்  கேட்கவே ஒரு ரசிகர் பட்டாளம் அலுவலகத்தில் உண்டு.   “ வேய் அக்கோண்ட்ஸ் அண்ணாச்சி,  இன்னும் இரண்டே மாசந்தான் பாத்துக்கிடுங்க. அப்புறம் நம்மாள கையில புடிக்க முடியாது. புள்ளிக்காரன் கெங்ககொண்டான் பக்கத்தில நூத்தம்பது ஏக்கர் வளைச்சிப் போட்டாச்சு. அதுல அம்பது அந்த விளாத்திகுளக்காரி இளைய குடியாளுக்காம். டிரான்ஸ்பரில போற ஊருக்கு ஊர் தொடுப்பு, எல்லாம் கலிகாலம். அந்த நெல்லையப்பந்தான் இந்த சவத்து மூதி கிட்டேந்து  நம்ம காப்பாத்தனும்”, என்று கேண்டீன் மரப்பெஞ்சில் உட்கார்ந்தபடி அரை கிளாஸ் டீயை லாவகமாக ஊதிக் குடித்தபடி அவர் கதை சொல்லும் அழகே தனி.


                                        ரங்கசாமி அந்த அரசு அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. அந்த காலத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் வேலை என்பதே கொஞ்சம் சின்ன  மதிப்புக் கட்டையான வேலைதான். அதிகம் காசு பார்க்க முடியாது. இல்லை, காசே பார்க்க முடியாது. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நேரில்  தங்கள் அவசரம் கருதி தபால் வாங்க வரும் ஆட்கள் மனமுவந்து தருவதுதான். மற்றபடி அவராக யாரையும் காசு கேட்டு துன்புறுத்தியதாக சொல்ல முடியாது. பொதுவாக காசு வரும் பிரிவுகளுக்கு சரியான போட்டி இருக்கும். ஆனால் டெஸ்பாட்ச் மேசை என்பது தண்டனைப் பிரிவு. யாரும் மேற் சொன்ன காரணத்தால் அதை விரும்பிக் கேட்பதில்லை.


                                             நம்ம ரங்கசாமி சார் பிறந்து வளர்ந்து  சர்வீசில் முக்கால் பகுதி குப்பை கொட்டியது திருநெல்வேலியில்தான். பக்கத்தில் சேரன்மாதேவி தான் சொந்த ஊர். ஓரளவுக்கு வசதியானவர். இரண்டு மூன்று ஏக்கர் நன்செய் நிலம், மட்டப்பாவீடு என்று நிம்மதியான கிராமத்து வாழ்வு. பேட்டை M.D.T இந்துக் கல்லூரியில்  பட்டப்படிப்பு முடித்ததும் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸானவர். முதல் போஸ்டிங் சேலத்தில். தரையில் விழுந்த மீனாக துடித்துப் போனவர் சேர்ந்த பத்தே நாளில் ஆளைப்பிடித்து  மாற்றல் ஆர்டர் நெல்லைக்கு வாங்கி விட்டார்.


                                                அப்போது கொக்கிரகுளத்தில் இருந்த அந்த மாவட்ட  அலுவலகத்தில் டெஸ்பாட்ச் இடம் தான் காலியாக இருந்தது. புதுப் பையனுக்கு , அதான் நம்ம ரங்கசாமிக்கு அதை பெரிய கிடைத்தற்கரிய போஸ்ட் மாதிரி பில்டப் கொடுத்து நம்ப வைத்து ஏமாற்றி உட்கார்த்தினார்கள். இருந்தாலும் என்னவோ ரங்கசாமிக்கு அதுவே மிகவும் பிடித்துப் போனது. சேர்மாதேவியில் சரியாக காலை எட்டு மணி ரயிலைப் பிடித்து ஒன்பதரைக்கெல்லாம் அலுவலகம் வந்து விடலாம். படிக்கிற காலத்து வழக்கம் அதுதான்.  அப்புறம் வெளி அனுப்ப வேண்டிய நேற்றைய தபால்களை பிரிவு வாரியாக எண் கொடுத்து பதிவேட்டில் பதிந்து அலுவலக உதவியாளர் நடேசனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அஞ்சல் அலுவலகத்தில் சேர்ப்பிக்க பொறுப்பு ஒப்படைத்து விட்டால் மணி பதினொன்றாகிவிடும். அப்புறம் கேண்டீனில் காபி, டீ சாப்பிட போனால் அரட்டையுடன் அரை மணி நேரத்துப் பொழுது கழியும். மணி ஒன்றாகும் முன்னர்  முந்திய நாள் உள்ளே வந்த தபால்களை பதிவிட்டு அந்தத்த சூப்பிரண்டெண்ட் மேசைக்கு  அனுப்பி விட்டால் அன்றையபாடு கிட்டத்தட்ட முடிந்த மாதிரித்தான்.


                                          வேலைக்குச் சேர்ந்த புதிதில் முதல் ஒரு மாதத்தில் கன்னையன் சார் சொல்லிக் கொடுத்த நுணுக்கங்களை சட்டென பற்றிக்கொண்டார். தன் பதிவேட்டில் புள்ளி விவரங்களை சரியாக குறித்து வைத்து நல்ல திறமைசாலி ஆகிவிட்டார். மாலை ஐந்து முப்பது ரயிலைப் பிடித்தால்  ஆறரைக்கெல்லாம் வீட்டிற்குப் போய் விடலாம். அப்புறம் வயல், வரப்பு, வியாஜியம் என்று பால்ய நன்பர்களுடன் திண்ணை கச்சேரியில் பல செய்திகள் சேகரமாகும். மறு நாள் அவற்றை குமுதம் கிசு கிசு மாதிரி அத்தனை சுவையாக சொல்லி சிரிக்க வைப்பார்.
                                       பணிக்காலத்தின் இடையிடையே மாறுதல்கள் வரும். ஆனால் தலைமை அலுவலகத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காசு செலவு பண்ணி வரும் ஆட்கள் டெஸ்பாட்சில் உட்காருவார்களா என்ன? ஆகவே ரங்கசாமியின் சேவை உடன் உணரப்பட்டு டெபுட்டேஷனில் அந்த இடத்திற்கு அடுத்த 10 நாட்களில் மீண்டும் வந்து விடுவார். அப்படி அதிகம் போன ஊர் என்றால் பக்கத்து தூத்துக்குடிதான். ஆக வடக்கே கோவில்பட்டி கூட தாண்டியதில்லை. இருக்கும் இடமே பரம சுகம் என்பது நல்லதோர் சித்தாந்தம்தான். ஆனால் அது பலருக்கும் வாய்ப்பதில்லை. நம்ம ரங்கசாமிக்கு வாய்த்தது. அதை அனுபவிக்கும் மனசும் அவருக்கிருந்தது. அதிகம் ஆசைப்படாதவருக்கு வாய்த்த மகராசியும் அதே மாதிரி .



                                            கடவுள் எப்போதும் கருணையுடன் இருந்தாலும் , மனிதனின் கண்டுபிடிப்புகள் அப்படி இல்லை. தபால் துறை அழிந்து கொரியர் வளர்ந்தது. அப்புறம் ஈ மெயில் எல்லாம் வந்தபின்னர் டெஸ்பாட்ச் கிளார்க்குகள் நிலை கவலைக்கிடமானது. பல அலுவலகங்களில் அந்த பதவியில் இருந்தவர்களை வேறு பணிகளுக்கு மாற்றத் தொடங்கினர். அந்த நேரத்தில் நம்ம ரங்கசாமி சாருக்கும் புதிய பொறுப்பு தரப்பட்டது. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. கேட்டால் ,”கழுதை இன்னும் நாலு வருஷத்தில் ரிட்டயர்ட் ஆகிப் போற எனக்கு எதுக்கு கம்பியூட்டர்?” என்று அலட்சியமாக வசனம் பேசிச் சிரிப்பார். ஆக அவர் டெஸ்பாட்சில் ஈ ஓட்டுவதால் கூடுதலாக கொடி நாள், காச நோய் தடுப்பு  இத்தியாதி வசூல் பள்ளிகளிலிருந்து பெற்று கணக்கில் செலுத்தும் பணி தரப்பட்டது.



                                                பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடிகளைப் பங்கிடுதல்    அப்புறம் அனுப்பி வைத்தல் பின்னர் நினைவூட்டி பணத்தை வசூலிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கு முன்பெல்லாம் உடனுக்குடன் பணத்தை கருவூலத்தில் செலுத்தி ரசீதை செலான் ஒட்டு கோப்பில் ஒட்டி வைப்பது நடைமுறை.



                                         கொக்கிரகுளம் அலுவலகத்திற்கு மாறுதலில் ஆபீசராக வந்த சத்தியமூர்த்திக்கு சின்ன வயசு. மனிசன் வந்ததும் முந்தைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டன. பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லாதவர். எங்கியோ கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து வந்தவர். நிறைய நேர்மை பற்றி பேசுவார். வெளி மாவட்ட ஆள் என்பதால் அதிகம் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. காந்தியடிகளை விடவும் தான் நேர்மையானவன் என்ற தொனியில் அவர் ஊழியர்களிடமும் ஊள்ளூர் அரசியல்வாதிகளிடம் பேசுவார். ரங்கசாமி எந்த வேலைக்கும் லாயக்கில்லை என்று அடிக்கடி கடித்தபடி இருப்பார். ரங்கசாமிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பணத்தை கட்டும் போது சில்லறை ஐம்பது காசை விட்டு விட்டு கட்டுவது வழக்கம். அடுத்த முறையில் கட்டும் போது வரும் சில்லரையுடன் சேர்த்து கட்டுவார். அப்படி கட்டி செலான் கையெழுத்து வாங்கியவரை, “ என்ன ஏமாத்துறயா, இப்ப ஐம்பது பைசா குறைவா கட்டுவே, அப்புறம் நான் அசந்த நேரத்தில் ஆயிரக் கணக்கில் அமுக்கி ஆட்டயப் போட நூல் விட்டுப் பார்க்கிறாயா? சர்வீஸ் பூரா இங்கியே குப்பை கொட்டுறயாமே, தொலைச்சுப்புடுவேன் ஜாக்கிரதை.” என்று ஒருமையில் பேசியது ரங்கசாமியை சற்று மிரள வைத்தது. இது நாள் வரையில் ஒன்றாக இருந்த ஊழியர்களிடம் முதல் முதலில் சாதி வித்து விதைக்கப்பட்டது. அந்த விஷ விருட்சம் மடமடவென வளர்ந்து கிளைபரப்பி நின்றது. கொஞ்சி கொஞ்சிப் பேசும் இளநிலை உதவியாளர் ரூபா மேடத்திற்கு அவர் அருகில் இடம் தரப்பட்டது. பல முக்கிய முடிவுகளை ரூபாவே தன்னிச்சையாக எடுக்கும் அளவுக்கு செல்வாக்கு ஓங்கியது.


                                                     இந்த பேச்சிற்குப் பின்னர் ரங்கசாமியிடம் வரும் பணத்தை அவர் நேரடியாக ஆபீசர் சத்திய மூர்த்தியிடம் ஒப்படைத்து விட வேண்டும். சத்திய மூர்த்தி அதை முறையாக அரசாங்கக் கணக்கில் கட்டி விடுவது என்று ஏற்பாடானது. ரங்கசாமியும் ஒரு பதிவேடு போட்டு பணம் பெற்ற தினம், சத்திய மூர்த்தியிடம் வழங்கிய தினம் எல்லாம் குறித்து வைத்து அதில் அவ்வப்போது பக்கவாட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்.  
மாவட்ட ஆட்சியாளர் அலுவலக பேச்சிமுத்து ரயிலில் ரங்கசாமியை பேட்டை ரயில் நிலையத்தில் பார்த்து,


                                                 “ என்ன அண்ணாச்சி, கொடிக்காசு நாலு லகரம் நிக்காப்போல இருக்கு”. “நேத்திக்கி மீட்டிங்கில் கலைக்டர் உங்க தலைவரை எழப்பிக் கேட்டாப்பில”. “அந்தாக்கில அவரு நீங்க நேருங்கூறுமா வசூல் பண்ணலையாட்டு இருக்கு, ஜாரிச்சி அடுத்த இரண்டு நாளில் கட்ட ஏற்பாடு செய்யுதேன்” என்னாரு. “சீக்கிரம் கணக்கை நேர் பண்ணுங்க” .
 “கரைச்சல் புடிச்ச சமாசாரம் நமக்கெதுக்கு அண்ணாச்சி,  இல்லாட்டா போலிஸ் கேஸ் கொடுக்கச் சொல்லியிருக்காரு கலைக்டர். அதால வார பொதன் கிழமைக்குள்ள முடிச்சிடுங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.


                                                          ரங்கசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எதுவானாலும் பதிவேட்டில் பணம் கொடுக்கல் வாங்கலை பதிவு செய்து கையெழுத்து வாங்கி வைசிருக்கோமே என்ற தைரியம் இருந்தது. யோசனயாய் அலுவலகத்தில் நுழைந்தவரை எல்லோரும் பரிதாபமாகப் பார்ப்பது தெரிந்தது. வருகைப் பதிவேடு தலைவர் அறையில் இருந்தது. கதவைத் தட்டி விட்டு,  உள்ளே சென்றவரிடம்,


“ வாயா, ரங்கசாமி, அந்த கொடிக்காசு நாலு லட்சம் பணத்தை  ஒடனெ கட்டிடுயா, கலைக்டர் வேற மீட்டிங்கில் எழுப்பி விட்டு என்னவொ கேள்வி மேல கேள்வி கேக்காரு”.
                                                “நீரு பொண்ணுக்கு கல்யாணம் அமக்களமா பண்ணிய போதே நினைச்சேன் . அது சரியாப் போச்சு”, இந்தியா நாசமா போறதுக்கே உன்னை மாதிரி ஆளுங்கதான் காரணம். இதெல்லாம் சங்கத்தில் உள்ள ரௌடிபசங்க கிட்ட சொல்லி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாதே. நான் காண்டாறேனோ இல்லியோ கலைக்டர் செம காண்டாகிடுவார். ஆமா” என்றார் சத்திய மூர்த்தி.
 “போ, போயி சீக்கிரமா போலிசில் கையாடல் புகார் தருவதற்கு முன் பணத்தைக் கட்டிடு”.
                                             பல்லைக்கடித்தபடி வெளியில் வந்தவரை ஊழியர் சங்க செயலாளர் சசிதரன் மெல்ல கேண்டீனுக்கு கூட்டிப்போய் விவரம் தெரிந்து கொண்டார். ரங்கசாமியிடமிருந்து அவர் சத்திய மூர்த்தியின் கையொப்பம் பெற்றிருந்த பதிவேட்டை  வாங்கிக் கொண்டு அந்தப் பதிவேட்டின் பக்கங்களை அருகில் இருந்த கடையில்  கலர் ஜிராக்ஸ்  நான்கு பிரதிகள் எடுத்துக் கொண்டார். நடந்ததை எழுதி வாங்கி அதையும் பிரதியெடுத்து தான் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை பதிவுத்தபாலில் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றொன்றை முதலமைச்சரின் தனிப்பட்டபிரிவுக்கும் அனுப்பினார்.


                                         இவற்றை எல்லாம் முடித்துக்கொண்டு அலுவலகம் வந்த ரங்கசாமி சத்திய மூர்த்தியிடம் சென்றார். ரங்கசாமி பதிவேட்டை ஆதாரமாக அவரிடம் காட்டி, தான் அவ்வப்போது சத்திய மூர்த்தியிடம் பணம் கொடுத்ததை கூறினார். அதை கூர்ந்து நோக்கியவர், “அப்படியா” என்றபடி,


                                    “சரி, அதில் உள்ளது என் கையெழுத்துதானா என்பதை சரி பார்க்க வேண்டும். மாலையில் என் வீட்டிற்கு எடுத்து வந்து விடு. இப்போது அவசரமாக வெளியே போகிறேன்” என்று சொல்லி  வெளியே போனார்.
சத்திய மூர்த்தியின் மனதில் இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மாலையில் தன்னுடன் ஜீப்பில் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து பதிவேட்டை வாங்கிக் கிழித்துப் போட்டு விடலாம். எதாவது பிரச்சனை செய்தால் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததைக் கண்டித்தேன். யாரும் அறியாமல் என் வீட்டில் புத்திமதி சொல்ல அழைத்து வந்தேன். அதனால் என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறான் என்று போலிசில் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடலாம். மனதில் திட்டம் சரியாக இருந்தது.


                                                         மாலை ஐந்தரை மணிக்கு ரங்கசாமியை, “ சார் வாங்க, வீட்டில் போய் அக்கவுண்ட் சரிபார்த்து விடுவோம். உங்களை பஸ் ஏத்தி விட சொல்லிடறேன் என்று அன்பொழுக கூப்பிட்டார். அதற்குள் சசிதரன், “அய்யாவுக்கு ஏன் சிரமம்? நாங்க ஆட்டோவில்  வந்துடறோம் சார்”. “ரங்கசாமி சார், நாம் போய் சேர்வதற்குள் அய்யா செக் பண்ணி விடட்டும். அப்புறம் நாளைக்கு ஒட்டு மொத்தமா சலான் போட்டு கட்டிடலாம்” என்றார். “இந்தாங்க அய்யா” என்று பத்து அலுவலக ஊழியர்கள் பார்க்கும் படி பதிவேட்டை  சத்திய மூர்த்தியிடம் தந்தார்.


ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுகிறதே. இந்த ரங்கசாமி அப்பாவி அது தெரியும் இந்த சசிதரன் கூட இப்படி அடி முட்டாளாயிருப்பானா?. ஏப்படியோ இன்னிக்கி நமக்கு குருட்டு அதிருஷ்டம். “அதுவும் செரிதான். டிரைவர் வண்டியை எடு” என்று சொல்லியபடி  கிளம்பினார்.


                                                   வண்டி வரும் வழியில் செல் போனைத் தேட அலுவலகத்திலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் அலுவலகத்தில் நுழைந்தவரை அழைத்தபடி இருந்தது செல்போன். “நொம்ப நேரமா அடிக்குது அய்யா”, என்றார் பணியிலிருந்த  இரவுக்காவல் பணியாளர்.

 “கொண்டாய்யா அதை” என்று சொல்லி வாங்கியவர் கையிலிருந்த பதிவேடு நோட்டை பக்கத்து மேசையில் வைத்து விட்டு , “அலோ, என்னம்மா” என்றார் சன்னமான குரலில்.  அழைப்பு வீட்டிலிருந்துதான். “ ஏங்க, இந்த அநியாயத்தை எப்படிங்க சொல்வேன். நம்ம நர்மதா கடிதாசி எழுதி வைச்சிட்டு யாரோ ஒரு பையனோட காலேஜில் இருந்து ஓடிப்போய்டாங்க. சீக்கிரமா வாங்க” என்றது மறுமுனை. மனது படபடக்க “இதோ உடனே வரேன்” என்று பதிலளித்தவர் அவசரத்தில் ரங்கசாமியின்  மேசையில் விட்டுச் சென்றது எதுவும் எழுதப்படாத சசிதரன் அவரிடம் கொடுத்த வெற்று கணக்கு நோட்டு. அதன் அட்டையில் வாய்மையே வெல்லும் என்று எழுதி காந்தியடிகள் படம் போட்டிருந்தது.