Wednesday, 25 May 2016

ஒரு ஆம்னி பஸ் பயணம்

ஆம்னி பஸ்ஸில் திருச்சி பயணம்.
பஸ் புறப்படும் போது மூச்சிரைக்க ஓடி வந்தவர் சிநேகமாய் சிரித்து வாங்க லேட் ஆயிடுச்சு என்றார். மைய்யமாக சிரித்து வைத்தேன். டிக்கெட் செக் முடிந்து விளக்குகள் அணைத்ததும் அஜீத் ஆலுமா டோலுமா என்றார்.
படத்தில் கவனமாயிருந்தேன். பக்கத்து சீட் , சாப்பிடாம வந்திட்டேன். நீங்கள் சாப்பிட்டீஙகளா என்றார். ஆம் என்றதும் வெறும் வயிருல பிரட்டும் என்றார்.
அப்ப நான் சாப்பிடப் போறேன் சரிங்களா என்றார். ஓகே ஓகே என்றதும் பையிலிருந்து ஒரு குவாட்டர எடுத்து ,இத வாங்கத்தான் லேட் ஆயிடுச்சு என்றபடி சர்வசாதாரணமா சாப்பிட ஆரம்பிச்சார்.நீங்க சாப்டதால தரல , சாரி என்றார்.



அப்புறம் ஆவ் ஆவ் ன்னு ஏப்பம். இந்த மாதிரி ஆட்களை சமாளிப்பது படு கஷ்டம். ஓரே விஷயத்த திரும்பத் திரும்ப பேசி என்ன நான் சொல்றது என்பவர் ஒருவகை.

ஒத்த பொம்பள எப்படி இவனுங்கள கண்ணுல விரல விட்டு ஆட்டுது அல்லது தமிழின தலைவன் சார்,என்று அரசியல் பேசறது ஒருவகை. இத கையாள திறமை தேவை.இந்த வகை திடீரென, என்ன தலை மட்டும் ஆட்டற, பெரிய அப்பா டக்கரா நீ என்று பேச ஆரம்பித்து விடும்.

அடுத்த வகை அழுகை பார்ட்டிகள்.பாஸு போய்ட்டா பாஸு. மறக்க முடியல பாஸ் தேவதாஸ்கள். இறங்கறதுக்குள் கண்ணீர் விட்டே டீ ஹைட்ரேட் ஆகிடும்
அடுத்தது மட்டயாகற கேஸ்கள். பிரச்சனையே கிடையாது

இதெல்லாம் சமாளிக்கலாம் ஆனா உவ்வே பார்ட்டிகள் தான் பிரச்சனை.நம் ஆளு விட்ட ஏப்பம் இது உவ்வே ன்னு உறுதியாடுச்சு. பார்ட்டி என்னை சார் எங்க போறீங்க என்றதும் திருச்சி என்றதும், நல்லதா போச்சு. என்னய கூட்டேரிபட்டுல எழுப்பிட சொல்ல, சரி என்றேன். மனசுல கவலையுடன்

வெளியே செங்கல்பட்டு பைபாஸில் பஸ் விரைந்து கொண்டிருந்தது. மதுராந்தகம் வரும் போது பாட்டில் கீழே விழுந்து உடைய பக்கத்து சீட் நல்லா மட்டையாகி இருந்தார்.

மாமண்டூரில் பஸ் நிறுத்தப்படுவதை அறிவித்து விளக்கை போட்ட கண்டக்டர்,பாட்டில பார்த்து டென்ஷனானவர், பஸ் மதுராந்தகம் வந்ததும் நம்ம ஆள கூட்டேரிப்பட்டு என்று பொய் சொல்லி இரக்கமே இல்லாம பாதி தூக்கத்தில் இறக்கி விட்டார்.

ஒரு குடிமகனை சமூகம் எப்படி எல்லாம் ஏமாற்றுது. மனசில உவ்வே பயம் இல்லை என்ற சந்தோசத்தையும் மீறி அந்த மனிதன்மீதான பரிதாப உணர்வே அதிகமாயிருந்தது.

Monday, 23 May 2016

வெற்றிவேல் (திரைப்படம்)

இன்று (01.05.2016) நண்பர் திரு. ஜெ.அப்பாவு அவர்கள் மகளின் மஞ்சள் நீராட்டு விழா மாலை ஏழு மணிக்கு. நண்பர்கள் மதியம் மூன்று மணி காட்சி எதாவது படம் போய்விட்டு அப்புறம் நிகழ்ச்சிக்குப் போகலாம் என்று யோசனை வழங்க அப்படியே செய்ய முடிவானது.

பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள பழைய வீனஸ் தியேட்டர் இப்போது Spectrum Mall ஆக மறுபிறவி எடுத்துள்ளது. அதில் S2 Cinemas இல் "வெற்றிவேல்" படம் முன்பதிவு நண்பர் திரு. பாலாஜி செய்திருந்தார்.

படம் பிற்பகல் 3.30 மணிக்கு. வீட்டிலிருந்து 2.30 க்கு OLA mini அழைத்தால் 1.6 x கட்டணம் என்றது. பரவாயில்லை என்று வரச் சொன்னேன். இன்று மதியம் என்ன Peak hour என்று புரியவில்லை. ஆட்டோவில் பேரம் பேசி மூச்சைத் தொலைத்தால் எப்படியும் 200 ரூபாய் கிட்டத்தான் பேரம் படியும்.

சரியாக 2.50க்கெல்லாம் தியேட்டர் வந்து விட்டேன். டிரைவர் திரு. அப்பாஸ் நிறைய பேசினார். அவர் போல நல்ல ஓட்டுநர்கள் கிடைத்தால் பயணங்கள் இனிமையாக இருக்கும். மகிழ்ச்சியான பயணம். நண்பர் திரு. பாலாஜியை அழைத்தால் இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும் என்றார்.

பொழுது போகாமல் Mall இல் இருந்த ஒரு புத்தகக் கடையை மேய்ந்தேன். நிறைய சிறுவர் புத்தகங்கள் மற்றும் வெகு சன புத்தகங்கள். பெரிய collection எதுவுமில்லை. அதிசயமாக திரு. பா.ராகவன் அவர்களின்" கொலம்பிய போதை மாfiயா" புத்தகம் ரூ155க்கு வாங்கி வெளியே வரவும் நண்பர்கள் வந்து சேரவும் சரியாக இருந்தது.





எல்லோரும் SCREEN 3 க்கு செனறோம். அங்கு C 1 முதல் C 10 வரை இருக்கைகள். நல்ல வசதியாக இருந்தது. கொடுமை கொடுமை ன்னு கோவிலுக்குப் போனால் அங்கே இரண்டு கொடுமைகள் தலைவிரிச்சாடியதாம் என்பார்களே அதுமாதிரி இந்த எலக்சன் லொல்ளுகளை மறக்க படத்துக்கு வந்தால் அங்கே ஆரம்பமே தேர்தல் சீன்.

பரவாயில்லை. சீக்கிரமே முடித்து விட்டார் திரு. சமுத்திரக்கனி.
படம் பற்றி விமர்சனம் செய்யப் போவதில்லை. ஆனால் சிலவற்றை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

சில புதிய சொலவடைகள் - நாட்டுக் கோழி முட்டைக்கு நல்ல பாம்பை காவல் வைச்ச மாதிரி இதம்.

கதாநாயகன் சசிக்குமாரின் அறிமுகக் காட்சியில் கதையோடு ஒட்டாத ஒரு குத்துப் பாட்டு தேவையில்லாதது.

அடிக்கடி வரும் ஒத்தாசை (தம்பி ராமையா) தொடர்பான "சும்மாத்தானே இருக்கப் போறீங்க" என்பது போன்ற இரட்டை அர்த்த காமெடி பெண்களைச் சற்று தலை குனிய வைக்கிறது.

"அலைபாயுதே" யில் மாதவன் ஷாலினி விலாசம் கண்டுபிடிக்கப் பேசும் உரையாடலை எண் மட்டும் மாற்றி திரு. சமுத்திரக்கனி பேசுவது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. காப்பியில் இது புதிசு.

படம் மனத்தை நிறைத்ததோ இல்லையோ சில இடங்கள் அருமை.

முன்பின் தெரியாத வீட்டில் மருமகளான பெண் என்பதை கொரியர் பையன் மூலம் வெளிப்படுத்தியது நன்றாயிருந்தது.

வாத்தியாரை நேரடியாக மிரட்டாமல் காபி கொண்டுத்தரும் பணியாளை பிரபு அடிப்பது தவிர்த்து வேறு வகையில் காட்டியிருக்கலாம்.

இடைவேளையில் வழக்கமான சாங்கியங்கள் பாப் கார்ன் சாப்பிடுதல், போன்றவை நடந்தேறின.

படம் ஓருமுறை மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் மட்டும் பாரக்கலாம்.
அங்கிருந்து GRT நகைக்கடையில் பரிசு வாங்கிக் கொண்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு அயன்புரம் வந்து சேரந்தோம்.

திரு. அப்பாவு அவரது குடும்பத்தினரின் அன்பான உபசரிப்பு, மணலி திரு. முருகன் அவர்களின் அறுசுவை உணவு எல்லாம் படு சிறப்பு.

செல்வி.ஆர்ஷிதாவிற்கு பரிசு வழங்கி எல்லோருடனும் படமும் வீடியோவும் எடுத்து வருகையை உறுதி செய்து புறப்பட்டோம்.

 முகப்பேர் வரும் நண்பர் திரு. நாராயணன் அவர்கள் தனது ஹோண்டா ஆக்டிவாவில் என்னை ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் விட இன்றைய நாள் அட்டகாசமாகக் கழிந்தது.

இறைவனுக்கு நன்றி.