Friday, 20 May 2016

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள் பகுதி(4)

ஒரு வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல் அலுவலரின் மலரும் நினைவுகள்
பகுதி(4)

இந்த வாக்குச் சாவடிகளில் சிலவற்றில் வீடியோ எடுப்பார்கள்.
சிலவற்றில் கேமிரா மூலம் லேப்டாப்பில் பதிவு செய்வது மற்றொரு வகை. மிகப் பதட்டமான வாக்குச் சாவடிகளில் மட்டுமே online கண்காணிப்பு.
நான் பணியாற்ற வந்த அந்த வாக்குச்சாவடி online கண்காணிப்பு வகை. அதாவது வாக்குச் சாவடியின் ஒவ்வொரு நிகழ்வும் தேரதல் ஆணைய கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படும்.
13.04.2011 காலை 6.30 க்கு வேட்பாளர்களின் முகவர்கள் வரவேண்டும். அவர்களுக்கு ஒரு மாதிரித் தேர்தல்(MOCK POLL)நடத்த வேண்டும்.
அதன் முடிவை அவர்களுக்குக் காட்டி, வாக்குப் பதிவு இயந்திரத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்புறம் அதை அழித்து விட்டு எல்லா வேட்பாளர் கணக்கிலும் தொடக்க வாக்கு எண்ணிக்கை சுழி(zero) என்பதைக் காட்டி அப்புறம் தான் வாக்குப் பதிவு இயந்திரத்தை முறைப்படி மூடி முத்திரை இட வேண்டும்.
இதற்கு தோராயமாக அரை மணி நேரம் பிடிக்கும். இதற்கிடையில் முகவர்களுக்கு அடையாள அட்டை தருதல்,கருவிகளின் எண்களை குறித்துக் கொள்ள அனுமதித்தல் பச்சைத் தாள் முத்திரையில்(Green paper seal) அவர்கள் கையொப்பம் பெறுதல், தேர்தல் ஆவணங்களில் முகவர்கள் கையொப்பம் வாங்குதலும் செய்ய வேண்டும்.
இந்த கையொப்பம் பெறுவதை இருக்கும் PO (polling officer) களில் ஒருவரிடம் ஒப்படைத்தால் நாம் வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகம் பதட்டமில்லாமல் எளிதாக தயார் செய்து முடிக்கலாம்.
ஆனால் முகவர்கள் காலை 6.50க்குத்தான் வருவார்கள். முகவர்கள் குறித்த காலத்தில் வராவிட்டாலும் 6.55க்குள் மாதிரி வாக்குப் பதிவு நடத்தி,இயந்திரத்தை வாக்களிக்கத் தயார் நிலையில் வைக்க தேர்தல் விதிகள் தலைமை அலுவலருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
நன்கு திட்டமிட்டால் முகவர்கள் 6.45க்கு வந்தால் கூட 7 மணிக்கு வாக்குப் பதிவைத் துவக்கி விட முடியும்.
இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்னவென்றால் ஒவ்வொரு செயலையும் மேலிருந்து ஆணையம் நேரடியாக பாரக்கிறது.
கட்டுப்பாட்டுக்கருவியில் மாதிரி வாக்குப் பதிவு மற்றும் மூடி முத்திரை இடுதல் போன்ற செயல்கள் காலத்துடன் பதிவாகின்றது.
தவறு நடக்க வாய்ப்பில்லை.
இல்லை, 100% வாய்ப்பே இல்லை என்பதே சரி. மேலும் இந்த நிகழ்வுகளை SMS மூலம் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
இந்த கண்காணிப்பு போதாது என்று நுண்பார்வையாளர் (Micro Observer) என்பவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் நிகழ்வுகளில் பங்கு கொள்ளாமல் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பார்.
தேர்தல் நடத்தப்பட்ட விதம் பற்றிய விவர அறிக்கையை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு(பொதுவாக மாவட்ட ஆட்சியர்) அளிப்பார்.
வாக்குச் சாவடிகளில் மூன்று வகை உண்டு. அவை M (ஆண் வாக்காளர்கள் மட்டும்), F(பெண் வாக்காளர் மட்டும்) மற்றும் AV(இருபாலருக்கும்) என இருக்கும். என்னுடைய சாவடி AV வகையை சாவடி.
காலை 7 மணிக்கு எந்த பிரச்சனையுமின்றி வாக்குப் பதிவு தொடங்கியது.
கிட்டத்தட்ட 1000 வாக்காளர்கள். கிராம மக்கள் அதிலும் பெரும்பாலோர் கூலித் தொழில் செய்பவர்கள் என்பதால் சுறுசுறுப்பாக காலையிலேயே வாக்களிக்க வந்து விட்டனர்.
அமைதியாகவும்,நல்ல விறுவிறுப்பாகவும் இருந்தது வாக்குப் பதிவு.
இடையிடையே சில சலசலப்புகள் வருவது சகஜமே. போதை தெளியாமல் வருபவர், பிரச்சனை செய்ய ஆவலோடு வருபவர் இத்யாதி ஆட்களை ஊர் மக்கள் சமாளித்து அனுப்பி விட்டனர்.
தொடரும் பகுதி (5)

No comments:

Post a Comment