Wednesday, 29 June 2016

நடைபாதை வாழ்வு

அது நகரத்தின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். பார்க்கவே நல்ல பணக்காரக் களையுடன் புதிதாக வண்ணம் அடிக்கப்பட்டு விளங்கியது. வாசலில் சிவப்பு வண்ண கூண்டுக்குள் வட இந்திய வாயிற்காவலர், பச்சை நிறச் சீருடையில் ஜாவ், ஜாவ் என்றபடி பிளாட்பாரத்தில் நிற்பவர்களைக் கூட அதிகாரமாகத் துரத்திக்கொண்டிருந்தார். அடிக்கடி பல வகையான கார்களில் அலங்காரமாக நடுவயது பணக்கார பெண்மணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எதிரே பிளாட்பாரத்தில் பக்கத்து மதில் சுவற்றில் ஒரு புறமும், சாலையில் மறுபுறமும் ஆக சாய்வாக கட்டப்பட்ட பழைய நடந்து முடிந்த திருமணத்தில் வைக்கப்பட்டிருந்த ஃப்ளெக்ஸ் பதாகையை கூரையாக வைத்துக் கட்டப்பட்ட குடியிருப்பு. எதிரே வந்து போகும் கார்களையும் , அதிலிருந்து இறங்கி நடந்து கம்பீரமாக ஆங்கிலத்தில் பேசியபடி செல்லும் பெண்மணிகளையும் வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் ரோசம்மா.
சின்ன வயதில் இந்த கட்டிடத்திற்கு வரும் பெண்களைப் போல மதிய வேளைகளில் கற்பனை செய்து கொண்டு தனக்குத்தானே தஸ், புஸ் என்று ஆங்கிலத்தில் பேசுவதாக கற்பனை செய்து விளையாடுவாள். அப்பன் மாரி அம்மா செல்வி இருவரும் வேலைக்கு போய்விட்டால் அவளுக்கு பொழுது போக்கே இதுதான்.
மாரிக்கு சால்ட் குவார்ட்டஸ்சில் மூட்டை தூக்கும் கூலி வேலை. அம்மா செல்விக்கு மார்க்கெட்டில் பூக்கட்டி தரும் வேலை. பெரிய பூக்கடையில் அவளைப்போல் இருபது இருபத்தைந்து பேர் பூக்கட்டுகிறார்கள். சின்ன வயதில் வால்டாக்ஸ் ரோடு கொண்டித்தோப்பில் வீடு. வீடு இதே போல பிளாஸ்டிக் ஷீட் மறைப்புத்தான்.
அங்கே மாரி சைக்கிள் ரிக்சா இழுத்துக்கிட்டிருந்தான். இப்பொவெல்லாம் யார் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்கிறார்கள். கறிகடையிலிருந்து கறி ஏற்றி வரக் கூட மீன்பாடி வண்டிதான். தொழிலை மாற்ற ரிக்சாவை விற்று கிடைத்த பணத்தை வைத்து கூட கொஞ்சம் காசு கடன் வாங்கி சால்ட் குவார்ட்டஸ் சுமைதூக்குவோர் சங்கத்தில் உறுப்பினர் ஆகி விட்டான். ரோசம்மா பிறந்தபின் அவளை கரையேற்ற காசு வேண்டும் என்பதால் செல்வியும் பூக்கடை வேலைக்கு வந்து விட்டாள். அப்படி இப்படி போலீசுக்கு, ரவுடிகளுக்கு இப்படி பயந்து பயந்து ஜீவனம். திடீர் திடீரென்று பிளாட்பாரத்தை விட்டு துரத்துவார்கள். கையில் கிடத்தவற்றை எடுத்துக்கொண்டு தொலைவாகப் போய் இருந்து விட்டு மீண்டும் பழையபடி வர வேண்டும். எல்லாம் பத்திரிக்கைகள் போட்டோ எடுக்கிறவரைதான்.
ரோசம்மாவை பக்கத்து கார்போரேசன் பள்ளியில் சேர்க்கப் போனால் அது என்னவோ சாதி சான்றாமே அதுவும் வருமானச் சான்றும் கேட்டார்கள். மாரிக்கு சாதி எல்லாம் தெரியவில்லை. அதை தெரியவைக்கும் முன்பே 1962 இல் அவனது பெற்றோர் காரனமின்றி குடிசைகள் எரிந்தன அல்லவா, அப்போது தீவிபத்தில் இறந்து போய் விட்டனர். அப்போது அவனுக்கு வயது ஆறு. அப்புறம் காட்டுச் செடியாக எப்படி எப்படியோ தானே வளர்ந்தான். அதெல்லாம் பெரிய கதை. 2000 வாக்கில் கட்டிட காண்டிராக்டரிடம் எடுபிடியாக வேலை பார்த்தபோது அங்கு சித்தாளாக தன்னைப்போல ஆதரவற்ற செல்வியை பாடிகார்ட் முனீஸ்வரன் கோவிலில் வைத்து தாலிகட்டி கல்யாணம் செய்து கொண்டான். இருவருக்குமே சாதியில்லாம் கிடையாது, தெரியாது. அப்படிப்பட்டவனிடம் சாதியைச் சொல் அல்லது முழுக் கட்டணம்தான் என்றது பள்ளி நிர்வாகம்.
வெறுத்துப் போன அவன் ரோசம்மாவை பள்ளிக்கு அனுப்பவில்லை. இப்பொழுது ரோசம்மாவுக்கு வயது பதினான்கு. காலையில் வேலைக்குப் போனால் பொழுதுபோன பின்புதான் முதலில் செல்வியும் அப்புறம் மாரியும் வருவார்கள். மாரி குடிகாரன் இல்லை. ஆனாலும் உடம்பு வலிக்காக கொஞ்சம் சாராயமோ, மதுவோ சாப்பிட்டு வருவது வழக்கம். செல்வி வரும் போதே அரிசியும் கொஞ்சம் காயும் வாங்கிவந்தால் அன்று அரிசிச் சோறும் சாம்பாரும். இல்லாவிட்டால் ஆளுக்கு இரண்டு பன்னும் டீயும் தான்.
இப்படி வாயைக்கட்டி வயத்தைக்கட்டி இருபதாயிரம் ரூபாய் சேர்த்துவிட்டாள்.  அந்த மறப்புக் குடிசையின் சுவற்றில் மாட்டியுள்ள மஞ்சள் பையில்தான் அதை பத்திரப் படுத்தியிருந்தாள். இன்னும் ஒரிரு வருசத்தில் ரோசம்மாவை நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுக்கணும்.ரோசம்மாவும் கஷ்டம் தெரிந்த புள்ளைதான். தனக்கு வேண்டியதை வாங்க, புரசைவாக்கம் பக்கத்தில் ஒரு பணக்காரங்க வீட்டில் வீட்டு வேலை செய்து சம்பாதித்துக் கொள்ளுகிறாள்.
ரோசம்மாவின் மறைப்புக்கு எதிரே இருந்த முன்னால் சொன்ன கட்டிடத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது ஒரு மகளிர் சங்கம். கோடீஸ்வர்களின் பொழுது போகாத மனைவிமார்கள் சேர்ந்து நடத்தும் சங்கம். இன்று அங்கே மகளிர் தினம் கொண்டாடுவது பற்றிய விவாதக் கூட்டம். உழைக்கும் மகளிரை எப்படி கவுரவிப்பது என்பதை ஆராய கூட்டம் தலைவி திருமதி. அகிலா தலைமையில் கூடியது.
தொழிலதிபர் சிவாவின் மனைவிதான் அகிலா.மகளிர் தினம் கொண்டாட இந்தமுறை மகளிர் நல அமைச்சரை அழைக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் உடன்பாடுதான். அகிலாவின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணம் பற்றிய புராணங்களை வெளியில் தெரியாமல் கொட்டாவி விட்டபடி கேட்ட உறுப்பினர்கள் வாய் மட்டும் நைஸ் ஜீ, இண்ரெஸ்டிங்க் ஜீ என்றபடி இருந்தது.
அகிலாவை மட்டம் தட்ட முயலும் கும்பல் ஒன்றும் அதில் உண்டு. அது தொழிலதிபர் ஆனந்தனின் மனைவி திவ்யா. எதாவது குறை சொல்ல வேண்டியதன் கட்டாயம். ஆகவே சங்க கட்டிடத்திற்கு எதிர் வாடையில் இருக்கும் அந்த அசிங்கம் பிடித்த மறைப்பு குடியிருப்பு பற்றி புகார் சொல்ல அதை அவர் ஆதரவாளர்கள் பிடித்துக் கொண்டனர். இந்த குடிசைகளை அப்புறப் படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் விவாதப் பொருளானது. அகிலா எந்த முயற்சியும் இவ் விஷயத்தில் எடுக்கவில்ல என்று குற்றம் சாட்டப்பட்டது. அகிலா தான் வெளிநாடு சென்றிருந்ததால் இந்த சுணக்கம் என்றதும், அப்போது வெளிநாடு அடிக்கடி செல்லாத தலைவரை தேர்ந்தெடுப்போம் என்றதும் நிலைமை சிக்கலானது.
சிக்கலை தீர்க்க உடனே மாநகர கமிஷ்னர், அமைச்சர், காவல் துறை என்று தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டனர். விழாவிற்கு முன் எல்லாம் சரி செய்யப்படுமென்று  உறுதிமொழி தரப்பட்டது. அகிலா அம்மையாருக்கு மூச்சு வந்தது. அடுத்தது விழாவிற்கு கூட்டம் சேர்ப்பது சம்பந்தமாக ஏஜென்சி தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்களின் முகவர் உடனே வந்தார். 500 நபர்களுடன் கூட்டம் ஏற்பாடு செய்ய 5 லட்சம் செலவழிப்பது என்று முடிவானது. இதற்கான ஸ்பான்சர்களை அமைச்சரின் கடைக்கண் பார்வையை எதிர் நோக்கியுள்ள தொழிலதிபர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் அகிலா பெற்றுவிட்டார். உடனே ஆனாலும் நம்ம பிரிசிடெண்ட் மாதிரி சாமர்த்தியம் யாருக்கும் வராது என்று திவ்யா கோஷ்டியின் மூக்கை அகிலா கோஷ்டியினர் உடைத்தனர்.
கூட்டம் இனிதே முடிந்தது. மறுநாள் காலையில் ஐந்து மணிக்கே வழக்கம் போல மாரியும், செல்வியும் வேலைக்குப் போய் விட்டனர். ஏழு மணிக்கு ரோசம்மா வீட்டு வேலைக்கு கிளம்பும் முன் அதிரடியாக ஏதோ கலவரத்தை அடக்க வருவது போல இருபது காவலர்களுடன் ஒரு காவல்துறை வாகனம் வந்தது. கையில் வாக்கி டாக்கியுடன் ஜீப்பில் இருந்தபடி அதிகாரி யாரிடமோ எஸ் சார், எஸ் சார் ஓகே சார் என்று பேசிக்கொண்டிருந்தார்.
ரோசம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அங்கே வந்த காவலர்களில் ஒருவரைக் கேட்டபோது எங்கிரோச்மென்ட் எவிக்சன் என்றார். அது எதுவும் புரியவில்லை. அவள் காதில் எவிக்சன் என்பது எலக்சன் என்று கேட்டதில் மனது சமாதானம் ஆனது. அந்த பகுதியில் ஒரே மறைப்புக் குடிசை மாரியின் குடிசை ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. பக்கத்து கார்பொரேஷன் கழிவறைக்கு நடந்து போய் எல்லாம் முடித்துக் கொண்டு திரும்ப தன் மறைப்புக் குடிசைக்கு வந்தாள்.
அந்த சுவற்றில் ஆணியில் மாடியிருந்த பையில் கை விட்டு ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டு பல் போன சீப்பால் தலையை சீர் செய்து கொண்டு சுமாரான ஒரு பழைய  சுடிதாரை மாற்றிக்கொண்டு புரசைவாக்கம் கிளம்ப தயாரானபோது, மற்றொரு ஜீப் வந்தது. இதில் வந்தவர்கள் காக்கி சட்டை அணிந்திருக்கவில்லை. வந்தவர்கள் போலீஸ் ஜீப்பை நோக்கிச் சென்றனர். எதோ பேசினார்கள்.
அடுத்த சில நிமிடங்களில் ஆறு, ஏழு பெண் போலீசார் ரோசம்மாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தனர். ஆண் போலீசார் அந்த மறைப்பை அகற்றினர். சுவற்றில் மாட்டியிருந்த பையை எடுத்து தூக்கி எறிந்தனர். பையில் செல்வி, ரோசம்மா திருமணத்திற்கு சேர்த்திருந்த இருபதாயிரம் பணம் இருந்தது. அது சில்லறையும் நோட்டுகளுமாக கீழே சிதறி விழுந்தது.பத்திரிக்கை நிருபர்கள் படம் எடுத்துக் கொண்டனர். ரோசம்மாவை கதறக் கதற போலீஸ், வண்டியில் ஏற்றியது. சைதாப்பேட்டை சிறு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் செய்தது. ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாத சிறை என்ற தீர்ப்புப்படி பணம் கட்ட முடியாமல் சிறைக்குப் போனாள் ரோசம்மா.

மாலை வந்த செய்தித்தாளில் சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம். அகற்றும் பணி நடக்கும் போது கிடைத்த பையில் கேட்பார் அற்றுக் கிடந்த ரூபாய் ஐந்தாயிரம் அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டது என்று வந்த செய்தியை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தனர்.    

Wednesday, 22 June 2016

மிருகக் காட்சி சாலை

து பெருநகரத்தின் மிகப்  பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் கூட்டமும் அவர்களை "ஏய், வரிசையாய் போ", என்ற வாத்திமார்கள் பிள்ளைகளை அதட்டும் சப்தமும் அடிக்கடி கேட்டபடி இருக்கும். 
அன்று அந்த மிருகக் காட்சி சாலையில் எக்கச்சக்க கூட்டம். கூட்டத்தை விலக்க ஹார்ன் அடித்தபடி மூடிய அந்த மாமிச வேன் வந்து நின்றது. கதவு திறக்கும் முன்பே ஓடியும் பறந்தும் வந்தன தெரு நாய்களும், காகங்களும். உலோக முத்திரையுடன் பூட்டியிருந்த கதவை திறக்கும் முன் சுகாதார ஆய்வாளர் மற்றும் சூப்பரின்டெண்டெண்ட் வருவார்கள். இன்று அவர்கள் இருவருமே இல்லை. 
"நாளைக்கி நீயே பார்த்து வண்டிய அனுப்பிடு", "என்னைய எதிர்பார்க்காதே" என்று சூப்பரிண்ட் நேற்றே சொல்லிவிட்டார். எல்லாம் அவனுக்குத் தெரியும்.
கதவைத் திறந்து குதித்த வேன் டிரைவர், "தொள்ளாயிரம் கிலோ", என்றான். 
வவுச்சரில் ஆயிரம் கிலோ என்று பதிவு செய்தவன் டிரைவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். "என்ன இன்னிக்கி 50 கிலோ கூடப் போட்டிருக்கு" என்றவனிடம், 
"மதுரையிலிருந்து அய்யா வீட்டிற்கு  விருந்தாளிக வந்து இருக்காக". "நாளை சரிபண்ணிக்கலாமாம், அய்யா சொன்னாவ" என்றவனிடம் சிரித்தபடி எனக்கு ஒரு 5 கிலோ நாளைக்கி தனியா எடுத்து வை, போசொல்ல வந்து எடுத்துக்கறேன்" என்றான்.
தினமும் வரும் கறி எடையில் ஐம்பது கிலோ சேர்த்து வவுச்சரில் எழுத வேண்டும் என்று சூப்ரண்ட் வேலை கத்துக் கொள்ளும் போதே சொல்லியிருந்தார். இன்றைக்கு 100 கிலோ.
வேனில் வந்த உதவி ஆள் குத்து மதிப்பாக ஒரு நூறு கிலோ கறியை எடுத்து வைத்து விட்டு மீதத்தை பட்டியல் பார்த்துப் பகிர்ந்து பிளாஸ்டிக் வாளிகளில் போட்டான். மொத்தம் கிட்டத்தட்ட 80 கூண்டுகள். பட்டியலில் ஒவ்வொரு கூண்டில் உள்ள விலங்கிற்கும் எத்தனை கிலோ மாமிசம் என்ற அளவு இருக்கும்.

தினமும் சூப்ரண்ட் அய்யா வீட்டிற்கு பதுவா இரண்டு கிலோ. இன்றைக்கு அவருக்கு மட்டும் 15 கிலோ. சானிட்டரி ஆசாமி சுத்த சைவம். கறி சாப்பிடாவிட்டாலும் கறியை காசா மாற்றி சாப்பிடுவார். அவரது தினசரி கோட்டா 2 கிலோவை அமீர் வந்து வாங்கிக் கொள்ளுவான். சானிட்டரி ஆசாமி அதை தர்மம் கொடுத்ததாக சொல்லிக் கொள்வார். ஆனால் அமீர் கிலோவிற்கு மார்கெட் விலையை விட 50 ரூபாய் குறைவாகத் தருவதாகச் சொல்லியிருக்கிறான். அவனுக்கு சிரிப்பு வரும். உத்திராட்சப் பூனைகள். நாளைக்கு அமிர் பாய் வாங்காட்டா இல்லை வாங்க ஆளில்லாட்டா சானிட்டரி சார் கறி சாப்பிட ஆரம்பித்து விடும். 

ஒவ்வொரு மூடியுள்ள பிளாஸ்டிக் வாளியிலும் அந்தத்த கூண்டின் எண் மற்றும் விலங்கின் படம் வரையப்பட்டிருந்தது. வாளியின் மூடியில் எடுத்துப்போக வேண்டிய பணியாளரின் பெயர் பெயிண்டில் எழுதியிருந்தது.
அப்புறம் மத்தவங்களுக்கு ஆளுக்கு அரைக் கிலோவும் கால் கிலோவுமா எவர்சில்வர் டப்பாகளில் போட்டாச்சு. கூட்டற லட்சுமி வீட்டுக்காரன் தான் தினமும் தனக்கு எலும்பு தான் கிடைக்கிறது. கறியே இல்லை என்று தகராறு செய்வான். இன்னிக்கு அவனுக்கு கொஞ்சம் கறியா போட்டாச்சு. 
மணி ஒன்று ஆனதும் பிளாஸ்டிக் வாளிகளை காத்திருந்த அந்தந்த பகுதி பணியாட்களிடம் மிருகங்களுக்கு உணவு தர கொடுக்க வேண்டும். காத்திருந்த பணியாளர்களை அழைத்து அவரவர் வாளிகளையும், அவர்கள் எவர்சில்வர் டப்பாகளையும் கொடுத்தாகி விட்டது. 
உணவு எல்லாக் கூண்டுகளுக்கும் போயாகி விட்டதற்கு பணியாட்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். அய்யா வீட்டு ராங்கி புடிச்ச சமையல்காரி அதிகாரமாக வந்து " இன்னா லேட்டு" அய்யாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா ஒன் சீட்டு கிழிஞ்சிடும்" என்று தினமும் சொல்லுவாள். அய்யா அவளிடம் அலமேலு, அலமேலு என்று வழிவதைப் பலமுறை கண்டிருக்கிறான். எதுக்கு பெரிய இடத்துப் பொல்லாப்பு. பரம சிவன் கழுத்துப் பாம்பு. 
"தோ. ரெடியா இருக்கு அக்கா", என்று அவன் சொன்னதும்
"இம்மாம் வெயிட்டு எல்லாம் தூக்க முடியாது. கோட்ரஸுக்கு எங்கூட வந்து கொண்டு வச்சிட்டுப் போடா தம்பி" என்றாள்.
மறுக்க முடியாது. மறுத்தால் ஒன்றுக்குப் பத்தாக அய்யாகிட்ட வத்தி வைக்கும். அய்யாவிடம் பாட்டு வாங்க வேண்டும். திரும்பிப் பார்த்தால் இன்னும் புலி படம் போட்ட ஒரே ஒரு பக்கெட் தான் எடுத்துப் போகப்படாமல் இருந்தது. வருகைப் பதிவேட்டில் சரிபார்த்தான். வருகைப் பதிவேட்டில் புலிக் கூண்டுக்கு உணவு தரும் தோமா அன்று விடுப்பு என்று குறிக்கப்பட்டிருந்தது.
"அக்கா புலிக் கூண்டிற்கு ஆளு இல்ல. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோக்கா", "புலி பசி தாங்காது" என்றவனிடம்

"அப்போ அய்யா பசி தாங்குவார்னு சொல்றியா" உன்னைய அவரு வைக்கற இடத்தில வைக்கலை. அதான் நீ ஆடுற" 



உண்மையிலேயே புலி பசி தாங்காது. வேற ஆட்களிடம் கொடுக்கலாம். ஆனால் மூன்று மணிக்குத்தான்  மற்ற டிரைனர்கள் வருவார்கள்.
சரி என்ன செய்வது. பேய்க்கு முன் புலி என்ன செய்யும். விதியே என்று அவள் பின்னால் இரண்டு பக்கெட்களையும் எடுத்துக் கொண்டான். புலி பக்கெட்டை திறந்து பார்த்த அலமேலு, அதிலிருந்து இன்னும் ஒரு கால்கிலோ கறியை தன் டப்பாவில் அடைத்துக் கொண்டது. வழியேற எசமானி போல் வசவு சொல்லியபடியே வந்தது. இருக்கட்டும். அம்மாவிடம் இதைப் பற்றி கொஞ்சம் காதில் போட வேண்டியதுதான். இல்லாட்டா இதுவே எசமானியாக மாறிவிடும் என்று நினைத்துக் கொண்டான். 
லக்கி பிரியாணி கடை பையன் வந்து மீதமுள்ள இருபத்தைந்து கிலோ கறியை வாங்கிட்டு போயிட்டா அப்புறம் வேற வேலை இல்லை. தோட்டக்கார மாரியை ஆபிஸில் விட்டு விட்டு பக்கெட்டை தூக்கியபடி புலிக் கூண்டை நோக்கி நடந்தான். லக்கி பிரியாணி கடையிலிருந்து கிலோவுக்கு 5 ரூபாய் இவனுக்கு கமிஷன் டாண் என்று ஒவ்வொரு மாதமும் முதல் தேதி வந்துவிடும். மற்றபடி அது யாரால் விற்கப்படுகிறது எவ்வளவுக்கு விற்கப்படுகிறது என்பதெல்லாம் தெரியாது. பெரிய இடத்து சமாச்சாரம் என்பதால் அதில் அவனுக்குப் பெரிய அளவில் ஈடுபாடில்லை. 
கூண்டுப்புலிக்கு தினம் வேண்டிய அளவு உணவை விட குறைவாகவே கிடப்பதால் மிகவும் பசித்துக் கிடந்தது. போதாத குறைக்கு இன்று மணி வேறு அரை மணி நேரம் அதிகம். கடும் பசியுடன் சரியான வேட்டைக்கு காத்திருந்தது.
அவனுக்கு காலையிலிருந்தே மனசு சரியில்லை. தங்கச்சியின் மாமியார் இன்னும் போடாத அந்த மைனர் செயின் பற்றி பேசுகிற மாதிரி ஏசியது பற்றியே நினைத்தபடி இருந்தான். போதாத குறைக்கு இங்கே இந்த அலமேலுவின் அட்டகாசம். அழுகை வந்தது. ஆண்பிள்ளை அழக்கூடாது. அடக்கிக் கொண்டான்.இந்த சிந்தனையில் புலிக்கூண்டின் நடு கம்பித் தடுப்பை போட மறந்து முன் கதவைத் திறந்தான். தான் உள்ளே நுழைந்ததும் கதவை சாத்தி தாளிட்டான்.
பக்கெட்டின் பச்சை மாமிச இரத்த வாடைக்கு புலி உறுமியபடி வந்த போது வேடிக்கை பார்த்த மக்கள் கூட்டம் "ஓ" எனக் கத்தி ஆர்ப்பரித்துக் கூச்சல் போட்டது.பக்கெட்டை வைத்து வெளியே வர கதவை பார்த்து வரும் போது அவன் பின் மண்டையில் புலி ஓங்கி அடித்து கவ்வியபடி உட்புறம் கம்பீரமாய் நடந்தது. 
வெளியே ஆபீசில் லக்கி பிரியாணி கடைப் பையன் அவன் வருகைக்காக காத்திருந்தான்.


Monday, 20 June 2016

அண்னாமலையாருக்கு ஒரு மடல்

                                                                                                                               சென்னை,
                                                                                                                                20.06.2016.

அன்புள்ள அண்ணாமலையாருக்கு,
அன்பன் சுப்ரமணியன்  எழுதுவது. உன்னிடம் செல் போன் இல்லாததாலும், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லை என்பதாலும் இப்படிக் கடிதம் எழுத வேண்டியுள்ளது. நான் கடிதம் எல்லாம் எழுதி பல காலமாகிவிட்டது. இப்போதெல்லாம் e - mail, message, Whats app, Facebook இப்படித்தான் தொடர்பு கொள்கிறேன். என்னமோ நான் ஜம்பமாகச் சொல்வதாக நினைக்காதே.  என் ஜம்பம் உன்னிடம் சாயாது என்பது நம் இருவருக்கும் தெரியும். நிற்க. நாங்கள் பத்திரமாக நேற்றிரவு  சென்னை வந்து சேர்ந்தோம்.
தினமும் காலையில் உன்னை வந்து அடைய வேண்டும் என்று நினப்பது வாடிக்கைதான்.

அதுக்காக திடீரென்று, "சனிக்கிழமை என்னை வந்து பார்" என்று கனவில் வந்து சொன்னால் என்ன அர்த்தம்? மாதக் கடைசியில் ஒரு பென்சன் வாங்கும் குடும்பஸ்தன் கஷ்டங்கள் நீ அறியாததா? எப்படியோ உருட்டிப்பிரட்டி சனிக்கிழமை வர முடிவு செய்து விட்டேன்.

ஒரு டவேரா வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடும்ப சகிதம் சனிக்கிழமை கார்த்தால  7 மணிக்கு கிளம்பினோம். போருர் டோல் ஆரம்பிச்சா உன்னை வந்து சேர்வதற்குள் 75, 75 ரூபாயா சொத்து பூராவும் காலியாகி விடும் போல. அச்சிறுப்பாக்கத்தில் ரமணா ஹோட்டல் அருகே கையில் கொண்டு வந்திருந்த இட்லி, சட்னி, சாம்பாருடன் சாப்பிட்டாயிற்று. பாவம் என் மனைவி, ரகுராம் ராஜன் மாதிரி நம்ம நிதி நிலையைப் புரிஞ்சிண்டு காலை 4 மனிக்கே எழுந்து டிபன் தயார் செய்து இருந்தாள். இல்லாவிட்டால் இன்னும் ஒரு 1000 ரூபாய் துண்டு விழுந்திருக்கும்.

டிரைவர் பாலா நல்ல மனிதர். அதிகம் சிரமம் இல்லாமல் அருமையாக காரை இயக்கினார். வழக்கமா சாஸ்தாக் குட்டி சார்தான் வருவார். இந்த முறை அவர் குற்றாலத்திற்குச் சென்று விட்டதால் பாலா வந்தார். 1970 - 1980 கால கட்ட இளைய ராஜா பாட்டாகப் போட்டார். நன்றாக அனுபவித்தோம். "ஆமாம் பக்திப் பாடல்கள் கிடைக்கவில்லையா" என்ற உன் முணுமுணுப்பு கேட்கிறது.
S.P.B யின் நமச்சிவாயா பாட்டும் கேட்டோம். இப்பொ திருப்தியா?
10.30 க்கு உன் ஊருக்குள் வந்து விட்டோம். நல்ல நேரம் பார்த்து வரச் சொன்னாய். அன்று மாலை  முதல் பௌர்ணமி. உன்னைச் சுற்ற வரும் அடியவர் கூட்டத்தைக்  கட்டுப்படுத்த வாகனங்களை  3 கிலோமீட்டர் தூரம் உன் வீட்டிலிருந்து தள்ளி நிறுத்தச் சொல்லுவார்களாமே. நல்ல வேளை நாங்கள் உன் இல்லம் வரும் வரை அப்படி நெரிசல் இல்லை.

வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கினால் உன் வீட்டை மராமத்து அதாவது திருப்பணி செய்கிறார்கள். அதை நீ சொல்லவே இல்லையே. சரி என்னைப் போல எத்தனை பேர் கனவில் வர வேண்டியுள்ளது. உனக்கும் அலைச்சல்தான். சரி மராமத்து நடக்கும் வீட்டில் எப்படி நீயும் உண்ணாமலை தாயாரும் இருக்கமுடியும்? ஒரே தூசும் தும்புமாக இருக்குமே. அலர்ஜி ஆகிவிடும். ஜாக்கிரதை.



உன் இல்லத்திற்கு வருவதற்கு முன் காலணிகளை விட காலணி பாதுகாப்பு மையத்திற்கு வந்தால் பெரிய எழுத்தில் இலவசம் என்று போட்டிருந்தார்கள். ஆனால் அங்கு எட்டு சோடிகளுக்கு 16 ரூபாய்  கேட்டனர். கொஞ்சம் கோபம் வந்தது. ஆனால் கேட்ட மனிதர் சிவப்பழமாக இருக்கவே என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். எனக்கு அடுத்து வந்த மனிதர் வாய் விட்டே கேட்டு விட்டார். அவருக்கு நல்ல அர்ச்சனை கிடைத்தது.
காசு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. 5 ரூபாய் கூட வாங்கிக் கொள்ளட்டும்.  சட்டப்படி காலணி பாதுகாப்புக்கு 5 ரூபாய் என்று போர்ட் போட்டு வசூலிக்கட்டும். அதை விடுத்து இலவசம், காசு கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று பெரிய அறிவிப்புப் பலகை எல்லாம் வைப்பது யாரை ஏமாற்ற? எதுக்கு எல்லாம் யோக்கியமாக நடப்பதாக ஒரு பில்டப்? உன்னை ஏமாற்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பாவம். அறியாமல் செய்கிறார்கள் மன்னித்து விடு. அந்த பொய்கள் உன் கண்ணெதிரவே நடப்பது கொஞ்சம் மனதுக்கு நெருடலாயிருந்தது.

உள்ளே சுமாரான கூட்டம். அதிலும் புதிது புதிதாக ஆட்கள் உன்னைப் பார்க்க குறுக்கு வழியில் சேர்கிறார்கள். எல்லாம் உன் மைத்துனர் மனைவி லட்சுமியின் கடாட்சம்தான் காரணம். கொடுக்க வேண்டியதை கொடுத்து உன்னை சீக்கிரம் பார்த்துவிட வேண்டுமாம். அந்த கூட்டத்தில் நீ யாரைப் பார்த்தாய் ?  உன்னையே நினைத்த பூசலாருக்கு முதல் இடம் தந்து ராஜராஜனை பின்னுக்குத் தள்ளியவன் ஆயிற்றே நீ. கட்டாயம் உனக்கு தரிசனம் தந்த செல்வந்தர்களைவிட ஏழை பக்தன் தான் உனக்கு முக்கியம் என்பது கூட அறியாத மனிதர்கள். உன்னை விற்பனை செய்பவர்களையும் பொறுத்தருள்வாய். காரணம் அன்பே சிவம் என்பாய். சரி.

நீ  ஏமாந்த சோணகிரிதான். பஸ்மாசுரன் முதல் இன்றைய பல திருத்தல நிர்வாகங்கள் வரை எல்லாரும் உன்னை நல்லா ஏமாற்றுகிரார்கள். உனக்கு நல்லா அபிசேகம் பண்ணினால் உச்சி குளிர்ந்து போய் எல்லாவற்றயும் மன்னித்து விடுவாய்.

அம்மை உண்ணாமுலையின் சன்னதியில் கூட்டம் இல்லை. யாரோ  நல்ல உள்ளம் கொண்ட  சிவனடியார்கள்  இரண்டு பேர் தந்த சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சாப்பிட்டு கை கழுவினோம். நல்லவேளை கை கழுவும் தண்ணீருக்கு நிர்வாகம் காசு வாங்கவில்லை.

உன் சொத்துக்களை ஊரெங்கும் சாப்பிடுகிறார்கள். நீயோ இமைய மலையில் இயற்கை  AC யில் புலித்தோலை கட்டிக் கொண்டும் இடுகாட்டுச் சாம்பலை பூசிக்கொண்டும் கவலையின்றி இருக்கிறாய். என்னால் அவ்வளவு தூரம் வர முடியாது. அந்த அளவு உடல் வலிமை நீ அருளவில்லையே. பரவாயில்லை, இந்த உலக மேடையில் ஆடி முடிந்ததும் அங்கு வந்து உன் திருப்பாதம் தானே அடையப் போகிறேன்.

முதலில் ரமணாசிரமம். நாங்கள் சென்ற நேரம் அதிஷ்டானம் திறக்கவில்லை.எனவே வெளியில் சுற்றிவிட்டு அதிஷ்டான சன்னதியை வணங்கி வெளியே வந்தோம்.அடுத்தது உன் வீட்டைச் சுற்றி வந்தோம். காரில்தான் வலம்  வந்தோம். 14 கிலோமீட்டர் வலம் வர உடம்பில் தெம்பு இல்லை. ஈசானலிங்க சன்னதியில் தரிசனம்  செய்துவிட்டு வரும் வழியில் ஒரு சிவனடியார் காசு கேட்டார். பார்க்கும்  சிவனடியார்களுக்கு கொடுக்க 1 மற்றும் 2  ரூபாய் நாணயங்கள் வைத்திருந்தேன். அதில் ஒன்றைத் தந்ததும் கோபமாக இதையெல்லாம் வாங்க மாட்டேன்.



கோவில் கட்டிக் கொண்டிருக்கிறேன். வந்து என் ஊரில் பார் என்றார்.   அவரது சிவபக்தியைப் பார்த்து 10 ரூபாய் வாங்கிய பின் பெரிய கும்பிடு போட்டார். சிவனடியார் இந்த அற்ப மானிடனை 10 ருபாய் காசுக்கு கும்பிட்டதை சகிக்க முடியவில்லை.



அடுத்து அடையார் ஆனந்த பவனில் நல்ல சாப்பாடு. இரண்டு விஷயங்கள் குறிப்பிட வேண்டும். முதலில் இருக்கைகளுக்கு இடையில் நல்ல இடைவெளி. மற்றது சென்னையைப் போல் சாப்பிடும் போதே பின்புறம் நின்றபடி நாம் சாப்பிடுவதை இமைக்காமல் எப்போ எழுந்திடுவோமென்ற எதிர்பார்ப்புடன் ரசம் சாப்பிட்டாச்சு, இப்போ மோர் என்று நேர்முக வர்ணனை சொல்லியபடி   பார்க்கும் கூட்டம் இல்லை. சென்னையில் கல்யாண சத்திரங்களிலும் இதே கதைதான். உன் கல்யாணத்தில் பொதிகை மலையில் எப்படி சமாளித்தாய்? 33 கோடி தேவர்கள் , கோபக்கார ரிஷிகள் , பாவம் நீ .

மணி இதற்கே பிற்பகல் 3.00 இன்னும் 1மணி நேரத்தில் கிரிவலம் தொடங்கும் சமயம் என்பதால் திருக்கோவிலூரில் உன் மைத்துனர் மாலவனை காணப் புறப்பட்டோம்.
கோவிலும் அதிலுறைந்த உலகளந்தவனும் அத்தனை அழகு. கூட்டம் அவ்வளவு இல்லை. அந்த பச்சை வண்ணன் தரிசனம் மனம் நிறைத்தது.
அங்கிருந்து அப்படியே ரகோத்தமர் மடம் வந்து அவரது ஜீவ சமாதியை வணங்கினோம். குரங்குகளுக்குப் பஞ்சமில்லை. நாங்கள் சென்ற பொழுது அங்கு மாலை வேளை பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.

நீ வழி நடத்தியபடி அடுத்து ஞானந்த தபோவனம். ஞானாந்தரின் அதிஷ்டானத்தில் எளிய வழிபாட்டு முறைகள், மாலை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு எளிய உணவு வழங்கப்படுகிறது. உணவு  உண்டபின், நீ வழிகாட்டியபடி என் அன்னை, தந்தை, சகோதரர் நினவு நாட்களில் அன்னதானம் செய்ய ஏற்பாடுகள் செய்தபின் சென்னை நோக்கி பயணம் . அரகண்ட நல்லூர் வரும் போது சிறிய மழை. அப்புறம் 10 கிலோமீட்டருக்குப் பின் ஒன்றுமில்லை. நள்ளிரவு 12.30 க்கு பத்திரமாக இல்லம் வந்து சேர்ந்தோம்.
எங்களை வரவழைத்து மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்க வைத்த உனக்கு எப்படி நன்றி சொல்வேன்.
உன்னிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். என்னை பிற மனிதர்களுக்கு உபயோகமாக வாழவை. எவரோடும் பகைமை கொள்ளாத மனதைக் கொடு.

அடுத்தமுறை பயணமும் உனக்கான பயணமாக அமையட்டும், தினமும் இங்கு என் இல்லம்  அருகில் உள்ள உன் இல்லத்திற்கு  வந்தால் கண்டிப்பாக நீ தூசி தும்பு பிரச்சனை இன்றி  இருப்பாய் என்று நினைக்கிறேன். உனக்கும் வீட்டு ரிப்பேர் வேலைகள் முடியும் வரை சௌகரியமாக இருக்கும்.

உன்னுடைய எதையும் மன்னிக்கும் குணம் எனக்கும் கைவர வேண்டும். உன் திருக் கோயில்களில் எல்லாம் உன் மைத்துனர் க்கு இடம் தருவாய். ஆனால் உன்  மைத்துனர் திருக் கோவில்களில் உனக்கு இடம் கிடையாது. இனிமேலாவது  இப்படி ஏமாளியாக இருக்காதே.

நான் ராஜா மகள் எழுதிய இப்படிக்குக் கோதை யின் பிரதியெடுத்த பதிப்பு என்று நீ உண்ணாமுலைத்தாயிடம் சொல்லிச் சிரிப்பது கேட்கிறது.  புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது. பூனை என்றதும் ஷாஜகான் சார் பூனைக் குட்டிகளுடன் படும் பாடு நினைவுக்கு வந்தது.  அடுத்தமுறை வரும் வழியில் இளைஞர் சுந்தரபாண்டியனையும் அவர் இல்லத்தில் தினம் வரும் காக்கைகளையும்  விழுப்புரத்தில் காண ஆவல்.அதற்கும் அருள் செய் ஈசனே.

சிவார்ப்பணம்.ஓம் நமச்சிவாயா.

உன் நினைவை மறவாத,
வெ.சுப்ரமணியன்.





எழுத்தாளர்


                                    கூட்டிச் சென்றவனை பின் தொடர்ந்தேன்.ஒரே இருட்டும் சிறுநீர் நாற்றமும் திருவல்லிக்கேணி சந்துகளை அந்த வழி நினைவூட்டியது. ஒரு தெருவில் நுழைந்து ஒரு கட்டடத்தின் உள்ளே கூட்டிப்போன்வன் திரும்பி, “இப்போ ஒரு அறைதான் இருக்கு, பாருங்க புடிச்சா மேற்கொண்டு பேசலாம் என்றவன் விசித்திரமான அறை ஒன்றை காட்டினான்.


அறை என்னவோ பெரிசுதான் ஆனால் நாலு வாசல்
அதில் மூன்று திறந்திருக்க ஒன்று மட்டும் பூட்டியிருந்தது.உள்ளே பார்த்தால் ஒரு தாடிக்காரக் கிழவன் திருவள்ளுவர் சாயலில் எங்கள் வருகையை பேச்சைக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் அறையில் அவர் பாட்டுக்கு ஏதோ எழுதுவதும் கசக்கி எறிவதும்
அருகே வைத்திருந்த கருவியிலிருந்து மானாவாரியாக பேப்பரை கிழிப்பதும்
எழுதுவதும் கசக்கிப் போடுவதும் திரும்ப எழுதுவதும் என்று 
கடமையே கண்ணாயிருந்தார். மரியாதைக்கு நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
கொஞ்சம் என்னவோ மாதிரித்தான் இருந்தது.


இந்த அறையை வேறு நல்ல அறை கிடைக்கும் வரை
இவருடன் பகிர்ந்து கொள்ளச் சொன்னாங்க முடியுமா? என்றான் கூட வந்தவன்.
அறையில் கிட்டத்தட்ட பாதிக்கு இந்த கிழவன் எழுதி எழுதி கசக்கிப்போட்ட பேப்பர் குப்பைதான்.சரி என்றேன். வேற வழியில்லை.
வேலையில்லாதவனுக்கு கூடப் பேசக் கொள்ள ஒரு துணை.


கொஞ்சம் நம்ம ரூம் மேட் தாத்தா பற்றி கேட்டேன்.
அதற்கு அவன், “அதெல்லாம் தெரியாது சார். ஓனருக்கு சொந்தக்காரராம். ரொம்ப நாளா இருக்காராம்.கொஞ்சம் அகராதி புடிச்சவராம். படைப்பாளியோ என்னவோ சொன்னாங்க
ஓனரயே ஒரு தரம் மட்டம் தட்டிப் பேசினானாம். அவரு அந்த கோவத்தில
நாலு வாசலில் ஒண்ணை அடைச்சிட்டதா சொல்லுவாங்க. 
குடும்பம் இருக்காம். அந்தம்மா பெரிய படிப்பாளியாம். 
அவங்க இவரைத் தேடி வந்ததில்லை. இவரும் இந்த இடத்தை விட்டு அடியெடுத்து வெச்சதில்லைஎன்றான். அதற்கு மேல் அவன் வாயை கிண்டி எந்த தகவலும் வராது என்பது தேர்ந்த நிருபனான எனக்குத் தெரிந்து விட்டது.


நான், “ரூம் கிளீன் பண்ணணும்என்றதும் ஆள் வரும் என்று சொல்லி 
காணாமல் போனான்.
வந்த ரூம் பாய் நல்ல வயசாளி. நம்ம ரூம் மேட்டை விடவும் பழசாகத் தெரிந்தார்.என்னை பார்த்து சினேகமாகநீதானா இங்கே இருக்கப்போறாய்என்றார். தலையசைத்த என்னைப் பார்த்து, ஜாக்கிரதை. அவர தொந்தரவு செய்யக் கூடாது. அதிகமா குப்பை ஆனா கதவை தட்டு. நான் வந்து அள்ளிகிட்டு போறேன். அவரா விரும்பினா ஒரிரு வார்த்தை பேசுவார். மற்றபடி உனக்கு எந்த பிரச்சனையும் இராது”. என்றபடி பேப்பர் பந்துகளை எடுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டார்.


அப்புறம் வரேன், இதுல இன்னும் நிறைய வேலை இருக்கு”. என்றபடி கிளம்பியவருக்கு டிப்ஸ் கொடுக்க நினைத்து பர்ஸை எடுப்பதற்குள் காணாமல் போனார். சகஜ நிலைக்கு வந்து நம்ம திருவள்ளுவரைப் பார்த்தேன். இப்போ கொஞ்சம் கசக்காமல் ஐந்தாறு பக்கங்கள் எழுதியிருந்தார் . ஒரு ஆவலில் உந்தப்பட்டு அதை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். அருமையான கதை. அது வளர்ந்து வர வர படித்துக் கொண்டிக்கும் போதே திடீரென கசக்கி எறிந்தார். எனக்கோ சரியான கோபம். இது போல் கிட்டத்தட்ட ஒரு ஐம்பது முறை ஆகி விட்டது. அறையும் நிறைய ஆரம்பித்து விட்டது. ரூம் சர்வீஸ் தாத்தாவை கதவைத் தட்டிக் கூப்பிட்டேன்.


வந்தவரிடம் ,” என்ன இந்த ஆள் மகா கிறுக்கனாக இருப்பான் போல் இருக்கேஎன்றபடி வந்தலிருந்து நான் பார்த்ததை சொன்னேன்.
தாத்தா சிரித்தார். “கண்ணு பொயுது போகாங்காட்டியும் நூலக ரூம்புக்கு வா அங்க இந்த பேப்பர் அல்லாம் பிரிச்சி, சரி பண்ணி, தனித்தனியா பிரிச்சி பைண்டு பண்ணி வச்சிருக்கேன். அங்க வந்து படி” , என்றவருடன் சென்றேன்.


நூலகர் நல்ல திறமையான ஆளாக இருக்க வேண்டும். அது அடுக்கிவைக்கப்பட்ட அந்த ஒழுங்கு, நேர்த்தியில் பளிச்சிட்டது. வருடம் நாள், என்று அழகாக அடுக்கப்பட்ட புத்தகங்களை எடுத்துப் படித்ததில் நேரம் போனது தெரியவில்லை. ஒவ்வொன்றும் அப்படி அழகான கதைகள், காவியங்கள், கவிதைகள். சோகம், மகிழ்ச்சி இப்படி நவரசமும் எல்லாவற்றிலும் கலந்திருந்தது. சில எழுதப்படாமல் வெற்றாக, சில ஓரிரு வரிகள், சில நூறு பக்கங்கள். திகைத்துப் போனவன் அறைக்குத் திரும்பினேன்.


மனது அடித்துக் கொண்டது. கண்டிப்பாக இன்று என்னுடைய இந்த அறைக் கிறுக்கனை இது பற்றி கேட்க வேண்டும். அலுப்பாக இருந்தது. கண்னயர்ந்து எழுந்தால் என் மீது அத்தனை காகிதங்கள். அவற்றை தள்ளி விட்டு எழும் போது சில நம்ம திருவள்ளுவ ரூம் மேட் மீது பட்டதும், திரும்பினார். இது தான் சமயம் என்று என்னை அறிமுகம் செய்து கொள்ள ஆரம்பித்ததும் வேண்டாம் என்று கையசைத்தார்

உடனே சந்தேகத்தை வினவ, 
என் பெயர் பிரம்மாஇதுவரை எழுதிய எதுவும் எனக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் தலை குனிந்தபடி எழுத ஆரம்பித்தார் என் தாடிக்கார அறை நண்பன்.