Thursday, 23 March 2017

மகளிர் தினம்

“டார்லிங், இன்னிக்கு ஒரு முக்கியமான போர்ட் மீட்டிங் இருக்கு. கம்பெனி செகரட்டரி, செக்சன் ஹெட், லாயர் அப்புறம் சில போர்ட் மெம்பர்கள் கவர்ன்மெண்ட் நாமினி இப்படி பெரிய கும்பலை கூட்டிக்கிட்டுப் போகணும்  . நான் அதனாலஇன்னோவாவை எடுத்துக்கிறேன்.   நீ நல்லிக்கு போக நம்ம மாருதி ஆல்டோ வை எடுத்துக்க பிளீஸ்” என்று மனைவியிடம் கெஞ்சினார் சங்கரன். நான் மட்டும் என்னங்க லேடிஸ் கிளப் மெம்பர்கள் ஆறு பேர் போறோம். எப்படிங்க ஆல்டோவில போக முடியும். இதுல நம்ம கௌரவமும் இருக்கு புரிஞ்சிக்குங்க என்றாள்.

சங்கரன் ஒரு கணம் யோசித்தார். வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் தன்னால்  இப்போது முரண்படுதல் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க  முடியாது. வெளியில் சிரித்தபடி “ஓகே டார்லிங், நான் ஃபாஸ்ட் டிராக் புக் பண்ணிக்கிறேன். யூ கேரி ஆன்” என்று சொல்லியபடி கழுத்துப்பட்டியின் இறுக்கத்தை தளர்த்தியபடி கிளம்பினார்.

போன வாரம் அதிகம் விற்பனை இல்லாத தாய்மையின் குரல்  பத்திரிக்கையின் ஆசிரியர் இந்திர சாமியை ரவுண்டு கட்டிய உரிமையாளர் எப்படியும் இந்த மாதம் சர்க்குலேஷனை அதிகப்படுத்திக் காட்டாவிட்டால் பத்திரிக்கையை ஊத்தி மூட வேண்டியதுதான் என்று அபாய அறிவிப்பு செய்திருந்தார். இந்திர சாமிக்கு வாய்த்த துணை ஆசிரியர்களில் அதிகம் துடிப்பான ஆள் பால்துரை.  சும்மா அட்டகாசமான திறமைகள் கொண்ட ஆள். அவன்தான் அவருக்கு தேறுதல் சொல்லி “எல்லாம் பண்ணிடலாம் சார். கவலைபடாதீங்க. உங்க பத்திரிக்கை தர்மம் அது இது  எல்லாத்தையும் கொஞ்சம் ஒதுக்கி வையுங்க. நான் இரண்டு மாசத்தில் நம்ம பத்திரிக்கையை மார்க்கெட்டில் கும்முன்னு தூக்கிடறேன்” என்றான்.
“யப்பா, எல்லாம் செரிதான். நான் இருபது வருஷமா பத்திரிக்கை நடத்தியிருக்கேன். என் பேர் ரிப்பேர் ஆகாம பார்த்துக்க” என்றார் இந்திரசாமி.
“சரிங்க அய்யா” என்றவன் “ஒரு வாரத்தில் நல்ல செய்தியுடன் வருகிறேன் என்னைத் தேட வேண்டாம்” என்று காதலனுடன் ஓடிப்போக இருக்கும் காதலிகள் எழுதிவைக்கும் கடித வரிகளைச்  சொல்லிப் பறந்தான்.
போன வாரம் கன்னிமாரா நூலகத்தில் எதையோ தேட வந்த பால்துரைக்கு  “தொழில் அதிபர்களின் வளர்ச்சியில் மனைவியர் பங்கு” என்ற கட்டுரை கண்ணில் பட்டது. அதில் அதிகம் பிரபலமாகாத பத்து பெயர்களை முதலில் எடுத்துக் கொண்டு வரிசையாக தொலபேசியில் அழைத்தான். முதலில் மாட்டியது நம் மங்களம் சங்கரன் அவர்கள்தான்.  மங்களம் சங்கரன் பெரும் பணக்காரத் தந்தைக்கு ஒரே மகளாக பூமியில் ஜனித்ததுதான் அவரது சாதனை. மற்றபடி பணக்கார வீட்டுப் பெண்களுக்கே உரிய அலட்டல்கள் வெட்டி அரட்டைகள், ஸ்டேட்டஸை காட்ட என்று உள்ள கடைகளில் தினமும் போய் ஷாப்பிங் செய்தல் , வாட்ஸப், ஃபேஸ்புக் , ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்துகள், பணக்கார கிளப்புகள் போன்ற இத்தியாதி நித்திய கர்மானுஷ்டானங்கள் அவளுக்கும் உண்டு. வழக்கம் போல  ஒன்றும் ஐவேஜி இல்லாத நல்ல பழக்க வழக்கம் கொண்ட புத்திசாலியான கட்டின பசுவான அப்பா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை  கல்யாணம் பண்ணிக்கொண்டது . தந்தை கம்பெனியில் சேர்மன், மகள் வைஸ் சேர்மன், மாப்பிள்ளை நிர்வாக இயக்குனர். இப்போ சொல்லுங்கள் சங்கரன் அலுவலகத்திற்கு செல்ல ஃபாஸ்ட் டிராக் ஏற்பாடு செய்து கொண்டது சரியா இல்லையா என்று.
போனில் அம்மணியிடம் பேசிய பால்துரை முதலில் கட்டுரையைப் படித்து வியந்ததாக சொல்லி நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினான். சந்திப்பின் போது, நிறையவே முகஸ்துதி செய்தவன் “அம்மா, உங்க சாதனைகள் இப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்கக் கூடாது. உலக அளவில் பரிணமிக்க வேண்டும். நீங்க மட்டும் கொஞ்சம் ஒரு இரண்டு மூணு லட்சம்செலவு பண்ணினால் போதும். அந்தப் பணமெல்லாம் உங்களைப் போன்ற மகாலட்சுமிக்கு சில்லரைக் காசு.அது நீங்க வாங்கும் ஒரு சாதாரண சேலை விலைதான்.  உங்க திறமைகளை உலகறியச் செய்து விடலாம் என்று ஆசை காட்டினான்.



“அப்படியா ஆனால் நான் ஒன்றும் பெரிசா சேவை எதுவும் செய்யவில்லையே” என்றுஅப்புராணியாகக் கேட்ட மங்களத்தை
“அம்மா, அநுமனுக்கு அவன் பலம் தெரியாதாம். அத மாதிரி உங்க உயரம் உங்களுக்கு தெரியவில்லை. அதை தெரியவைப்பது என் கடமை” என்று சொல்லி இருபதாயிரம் தனது சேவைக் கட்டணமாக அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்தான்.
ஒரு வாரம் கழித்து வண்ண வழு வழு அழைப்பிதழை எடுத்துக் கொண்டு வந்தவன் மங்களம் கையில் கொடுத்தான். பிரித்துப் பார்த்த மங்களத்திற்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தங்க நிற எழுத்துக்களில் வரும் மகளிர் தினத்தன்று எழுச்சியுடன் சமூக வளர்ச்சிக்கு பாடுபட்ட திருமதி. மங்களம் சங்கரன் அவர்களை ‘பணிபுரியும் பாவையர் பேரவை’ என்ற உழைக்கும் மகளிர் அமைப்பு தாய்மையின் குரல் பத்திரிக்கையுடன் இணைந்து “ஒப்பிலா அன்னை” விருது வழங்கிக் கௌரவிக்கிறது. அன்னாரின் சேவைகளைப் பாராட்டி நகரின் நான்கு முக்கிய பிரமுகர்கள் பேசுவார்கள் என்றும் விழாவின் ஒரு அங்கமாக  பணிபுரியும் பாவையருக்கான நலத்திட்ட உதவிகளை செய்யவிருக்கிறார் என்று விளம்பியது. அழைப்பிதழைக் கண்டு மிரண்டு போன மங்களத்தை மேலும் மிரட்ட பத்துக்கு எட்டு வண்ணச் சுவரொட்டி, சிறு துண்டு பிரசுரங்கள் என்று கலங்கடித்தான். மொத்தமே அவன் அடித்தது எல்லாவற்றிலும் 100 தான். பத்திரிக்கை சாதாரண ஆட்களுக்கெல்லாம் வேண்டாம் . உங்க நட்பில் உள்ள பெரிய ஆட்களை மட்டும் அழையுங்கள், நிறைய கும்பல் இருந்தால் விழா கட்டுப்பாடாக இராது என்று அறிவுறுத்தினான். இப்போது செலவுக்கு மேலும் எண்பதாயிரம் வாங்கிக் கொண்டான்.
அடுத்தது காஜா மொகிதீனைப் பார்த்து நல உதவி வாங்க ஆள் ஏற்பாடு செய்ய வேண்டும். காஜா பிகு பண்ணிக் கொண்டான்.
“அப்பா பால்துரை, லேடிஸ் எல்லாம் கூட்டி வரது மகா தொந்திரவு. பத்திரமா கூட்டிப் போய் கொண்டு விடணும். பிரச்சினை வரக் கூடாது.”
“ என்னடா, உன்னய நம்பி கமிட்டாயிட்டேன். பார்த்து சொல்லுடா” என்றவனிடம்,
“ சரி. காலை எட்டுமணியிலிருந்து எட்டு மணி நேரம்தான் அதாவது மாலை நான்கு மணி வரை. இருட்டுக்கு முன்ன அவங்களை வூட்டில் விட்டிறணும் . இருபது பேரை கூட்டிப் போக திரும்ப கொண்டுவர டெப்போ டிராவலர் இரண்டு ஏற்பாடு பன்ணிடறேன். கூலி தனியா ஆளுக்கு ஐநூறு தரணும். அது தவிர இரண்டு வேளை டிபன், காபி ஒரு வேளை சாப்பாடு. எல்லாம் சேர்த்து மொத்தமா ஒரு ஐம்பதாயிரம் ஆகும் பரவாயில்லையா” என்றான். பால் துரை , மங்களத்திடம் விவரம் சொல்லி கூடுதாலாக ஒரு ஐம்பதாயிரம் கறந்தான்.
ஒரு நாள் கூலி இருநூறு ரூபாய் போயிடும், என்றவர்களைக் காஜா மொகிதீன்  போக வர ஏ.ஸி வேன் ,  மாலை ஐந்து மணிக்கெல்லாம் திரும்பிடலாம். காலை எட்டு மணிக்கு வீட்டில் வந்து ஏற்றிக் கொள்கிறேன் என்று உறுதி கொடுத்தும் சரிகைக் கரை போட்ட புடவை, நானூறு ரூபாய் பணம், டிபன், சாப்பாடு அப்படி, இப்படி ஒரு வாரமா  சொல்லிச் சொல்லி  வேப்பிலை அடித்து பரமு,முத்து, ரோசம்மா, மரியா, சக்தி என்று அப்படியும் இப்படியுமா இருபது பேரை தேத்திவிட்டான். ஊருக்கு வெளியே பெரிய கல்யான மண்டபத்தில் விழா. 

விழாவை ஒரு நாப்கின் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. பால்துரை  விளம்பரம் செய்து கொள்ள, போஸ்டர், அழைப்பிதழ், சிறு பிரசுரங்கள் செலவை அவர்களிடம் விட்டு விட்டான். விழாவில் வாழ்த்துரை வழங்கும் பெரிய மனிதர்கள் நால்வரும் அதிகாரமிக்க பதவியில் இருந்து ஓய்வு பெற்று தற்சமயம்  வீட்டில் அதிகம் பேச வாய்ப்பில்லாத,  பேச மைக் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கும் ரிட்டயர்ட் ஆசாமிகள். அவர்களைக் கிட்டத்தட்ட இலவசமாகவே பிடித்து விட்டான். 


அவர்களின் உரையை வீடியோ கவரேஜ் செய்து , பத்திரிக்கையில் எழுத ஏற்பாடு செய்தாகி விட்டது.  ஆசிரியரிடம் நூறு பிரதிகளிக்கான ஒராண்டுச் சந்தாவுக்கான தொகை ரூ. ஒரு லட்சம் மங்களத்தால் செலுத்தப்படும். எல்லாச் செலவும் போக அவனுக்கு எப்படியும் ஒரு இருபத்தையாயிரம் நிற்கும்.  மங்களத்திற்குப் புகழ், விருது, பெருமை, நாப்கின் கம்பெனிக்கு விளம்பரம், முதிய அறிஞர்களுக்கு மேடை, பத்திரிக்கைக்கு அனாமத்தாக  நூறு ஓராண்டுச் சந்தா, ஏழைகளுக்கு உதவி என்று பல் நோக்காக இப்படி கவனமாகத் திட்டமிட்டு அருமையாக வலை பால்துரை பின்னியிருந்தான்.


இன்னிக்கு மகளிர் தினம் கொண்டாட காரப் பாக்கத்தில் ஒரு கல்யாண சத்திரத்தில் விழாவை அந்த பன்னாட்டு நாப்கின் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு  ஏ. சி .வேனில்  விழாவுக்கு போனதுமே டிபன் பொங்கல், இட்லியுடன் வடை மற்றும் காபி எல்லாம் காஜா மொகித்தீன் ஏற்பாடு செய்திருந்தான். இருபது பேருக்கும் 200 ரூபாயில் நைலக்ஸ் புடவை, ஒரு நாப்கின் பாக்கெட்,  வாசனை சோப்பு முதலான பொருட்கள், நானூறு ரூபாய் பணம் என்று எல்லாம் ஐம்பதாயிரம் ரூபாயில் அவன் ஏற்பாடு. அடுத்தது எல்லாரையும் படம் எடுத்தாங்க. ஒரே சந்தோசம்தான். மேடையில் மட்டும் இல்லாம கண்ணில் படும் எல்லா இடத்திலும் நிறைய நாப்கின் விளம்பர பேனர்கள். மேடையில் எண்ணி ஏழு நாற்காலிகள். நடு நாயகமாக மங்களத்திற்கு சிவப்பு வெல்வெட் சிம்மாசனம்.
காலை பது மணிக்கு விழாஆரம்பித்தது. சாரி சாரியாக கார்களில் விதவிதமான நறுமண வாசனையுடன் நூற்றுக்கணக்கில் மேல்தட்டு வர்க்க பெண்மணிகள் வந்திறங்கினர். யார் யாரோ பேசினார்கள். கை தட்டினார்கள். இவங்களுக்கு ஒன்னும் புரியலை. ஆனா மகளிர் விடுதலை எனற வார்த்தை வந்தா கைதட்ட சொல்லிட்டதாலே பிரச்சனை இல்லை.


முக்கிய பிரமுகரான மங்களம் பட்டுப்புடவையில், வைர அட்டிகையுடன் மேடைக்கு வந்தாங்க. அவங்களைப் பார்த்த ரோசம்மாவுக்கு மயக்கம் வராத குறை.  சக்தியிடம் வா, போயிடலாம் என்றாள்.மற்றவர்கள் புடவை வாங்கிட்டுப் போகலாம் என்று அவளைஅடக்கி விட்டனர்.


மங்களம் பெண் விடுதலை பற்றி ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாங்க.
ஏகப்பட்ட பாராட்டு. வந்திருந்த நான்கு ரிட்டயர்ட் முன்னாள் அதிகாரிகளும் தங்கள் பதவிக்கால பிரதாபங்களை அள்ளி விட்டு அரை மணி நேரம் பேசிய பின்னர் மங்களத்தையும் தர்மதேவதை, கருணையின் பிறப்பிடம், தமிழ் நாட்டின் அன்னை தெரசா என்றெல்லாம் முன்பின் தெரியாத மங்களத்தை கூச்சநாச்சமின்றி என்று புகழ்ந்து தள்ளினர்.  ரோசம்மாவுக்கு மட்டும் தான் தெரியும் மேடையில் பேசும் தன் எசமானியம்மா புடவையில் லேசா துருக்கறை பட்டதுக்கு எகத்துக்குத் திட்டியதுமில்லாமல் நாலு நாள் சம்பளத்தை வேறு பிடிச்சது. இன்னிக்கு புடவை வாங்க விடுப்பு எடுத்தது தெரிந்தால் ருத்ர தாண்டவம் ஆடி, இந்த மாத சம்பளத்தை முழுசா பிடிச்சிடும்.


மங்களத்திற்கு ஆளுயர மாலை போட்டு பாராட்டுப்பத்திரம் பால் துரை யால் உருவாக்கப்பட்ட லெட்டர்பேட் அமைப்பான 'பணிபுரியும் பாவையர் பேரவை'த் தலைவி என்ற வேடத்தில் வந்த ரோசம்மா வீட்டின் அருகில் வசிக்கும் துணை நடிகையைக் கொண்டு தரச் செய்த போது கூட்டத்தின் கவனம் தன் மீது இல்லாததை கவனித்தாள் ரோசம்மா. நைசாக பாத்ரூம் போவது போல் மெல்ல நகர்ந்து பாத்ரூமில் ஒளிந்து கொண்டாள். 

புடவை மற்றும் நாப்கின் வாங்கிக்க ரோசம்மா பேரை மைக்கில் கூப்பிட்ட போது, ரோசம்மா தப்பித்து விட்ட மகிழ்ச்சியுடன் பாத் ரூமுக்குள் மகளிர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தாள்.

Tuesday, 21 March 2017

வாய்மையே வெல்லும்

                                   அலுவலகம் பரபரப்பாக இருந்தது. டெஸ்பாட்ச் ரங்கசாமி சாரை இன்னும் காணோம். தினத்தந்தியை விடவும் செய்திகளை முந்தித்தருவதற்கு அவரால்தான் முடியும். அழகு நெல்லைத்தமிழில் அவர் சொல்லும் செய்திகளைக்  கேட்கவே ஒரு ரசிகர் பட்டாளம் அலுவலகத்தில் உண்டு.   “ வேய் அக்கோண்ட்ஸ் அண்ணாச்சி,  இன்னும் இரண்டே மாசந்தான் பாத்துக்கிடுங்க. அப்புறம் நம்மாள கையில புடிக்க முடியாது. புள்ளிக்காரன் கெங்ககொண்டான் பக்கத்தில நூத்தம்பது ஏக்கர் வளைச்சிப் போட்டாச்சு. அதுல அம்பது அந்த விளாத்திகுளக்காரி இளைய குடியாளுக்காம். டிரான்ஸ்பரில போற ஊருக்கு ஊர் தொடுப்பு, எல்லாம் கலிகாலம். அந்த நெல்லையப்பந்தான் இந்த சவத்து மூதி கிட்டேந்து  நம்ம காப்பாத்தனும்”, என்று கேண்டீன் மரப்பெஞ்சில் உட்கார்ந்தபடி அரை கிளாஸ் டீயை லாவகமாக ஊதிக் குடித்தபடி அவர் கதை சொல்லும் அழகே தனி.


                                        ரங்கசாமி அந்த அரசு அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட ஆசாமி. அந்த காலத்தில் டெஸ்பாட்ச் கிளார்க் வேலை என்பதே கொஞ்சம் சின்ன  மதிப்புக் கட்டையான வேலைதான். அதிகம் காசு பார்க்க முடியாது. இல்லை, காசே பார்க்க முடியாது. எப்போதாவது அத்தி பூத்தாற்போல் நேரில்  தங்கள் அவசரம் கருதி தபால் வாங்க வரும் ஆட்கள் மனமுவந்து தருவதுதான். மற்றபடி அவராக யாரையும் காசு கேட்டு துன்புறுத்தியதாக சொல்ல முடியாது. பொதுவாக காசு வரும் பிரிவுகளுக்கு சரியான போட்டி இருக்கும். ஆனால் டெஸ்பாட்ச் மேசை என்பது தண்டனைப் பிரிவு. யாரும் மேற் சொன்ன காரணத்தால் அதை விரும்பிக் கேட்பதில்லை.


                                             நம்ம ரங்கசாமி சார் பிறந்து வளர்ந்து  சர்வீசில் முக்கால் பகுதி குப்பை கொட்டியது திருநெல்வேலியில்தான். பக்கத்தில் சேரன்மாதேவி தான் சொந்த ஊர். ஓரளவுக்கு வசதியானவர். இரண்டு மூன்று ஏக்கர் நன்செய் நிலம், மட்டப்பாவீடு என்று நிம்மதியான கிராமத்து வாழ்வு. பேட்டை M.D.T இந்துக் கல்லூரியில்  பட்டப்படிப்பு முடித்ததும் சர்வீஸ் கமிஷன் எழுதி பாஸானவர். முதல் போஸ்டிங் சேலத்தில். தரையில் விழுந்த மீனாக துடித்துப் போனவர் சேர்ந்த பத்தே நாளில் ஆளைப்பிடித்து  மாற்றல் ஆர்டர் நெல்லைக்கு வாங்கி விட்டார்.


                                                அப்போது கொக்கிரகுளத்தில் இருந்த அந்த மாவட்ட  அலுவலகத்தில் டெஸ்பாட்ச் இடம் தான் காலியாக இருந்தது. புதுப் பையனுக்கு , அதான் நம்ம ரங்கசாமிக்கு அதை பெரிய கிடைத்தற்கரிய போஸ்ட் மாதிரி பில்டப் கொடுத்து நம்ப வைத்து ஏமாற்றி உட்கார்த்தினார்கள். இருந்தாலும் என்னவோ ரங்கசாமிக்கு அதுவே மிகவும் பிடித்துப் போனது. சேர்மாதேவியில் சரியாக காலை எட்டு மணி ரயிலைப் பிடித்து ஒன்பதரைக்கெல்லாம் அலுவலகம் வந்து விடலாம். படிக்கிற காலத்து வழக்கம் அதுதான்.  அப்புறம் வெளி அனுப்ப வேண்டிய நேற்றைய தபால்களை பிரிவு வாரியாக எண் கொடுத்து பதிவேட்டில் பதிந்து அலுவலக உதவியாளர் நடேசனிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அஞ்சல் அலுவலகத்தில் சேர்ப்பிக்க பொறுப்பு ஒப்படைத்து விட்டால் மணி பதினொன்றாகிவிடும். அப்புறம் கேண்டீனில் காபி, டீ சாப்பிட போனால் அரட்டையுடன் அரை மணி நேரத்துப் பொழுது கழியும். மணி ஒன்றாகும் முன்னர்  முந்திய நாள் உள்ளே வந்த தபால்களை பதிவிட்டு அந்தத்த சூப்பிரண்டெண்ட் மேசைக்கு  அனுப்பி விட்டால் அன்றையபாடு கிட்டத்தட்ட முடிந்த மாதிரித்தான்.


                                          வேலைக்குச் சேர்ந்த புதிதில் முதல் ஒரு மாதத்தில் கன்னையன் சார் சொல்லிக் கொடுத்த நுணுக்கங்களை சட்டென பற்றிக்கொண்டார். தன் பதிவேட்டில் புள்ளி விவரங்களை சரியாக குறித்து வைத்து நல்ல திறமைசாலி ஆகிவிட்டார். மாலை ஐந்து முப்பது ரயிலைப் பிடித்தால்  ஆறரைக்கெல்லாம் வீட்டிற்குப் போய் விடலாம். அப்புறம் வயல், வரப்பு, வியாஜியம் என்று பால்ய நன்பர்களுடன் திண்ணை கச்சேரியில் பல செய்திகள் சேகரமாகும். மறு நாள் அவற்றை குமுதம் கிசு கிசு மாதிரி அத்தனை சுவையாக சொல்லி சிரிக்க வைப்பார்.
                                       பணிக்காலத்தின் இடையிடையே மாறுதல்கள் வரும். ஆனால் தலைமை அலுவலகத்திற்கு அரசியல் அழுத்தம் கொடுத்து காசு செலவு பண்ணி வரும் ஆட்கள் டெஸ்பாட்சில் உட்காருவார்களா என்ன? ஆகவே ரங்கசாமியின் சேவை உடன் உணரப்பட்டு டெபுட்டேஷனில் அந்த இடத்திற்கு அடுத்த 10 நாட்களில் மீண்டும் வந்து விடுவார். அப்படி அதிகம் போன ஊர் என்றால் பக்கத்து தூத்துக்குடிதான். ஆக வடக்கே கோவில்பட்டி கூட தாண்டியதில்லை. இருக்கும் இடமே பரம சுகம் என்பது நல்லதோர் சித்தாந்தம்தான். ஆனால் அது பலருக்கும் வாய்ப்பதில்லை. நம்ம ரங்கசாமிக்கு வாய்த்தது. அதை அனுபவிக்கும் மனசும் அவருக்கிருந்தது. அதிகம் ஆசைப்படாதவருக்கு வாய்த்த மகராசியும் அதே மாதிரி .



                                            கடவுள் எப்போதும் கருணையுடன் இருந்தாலும் , மனிதனின் கண்டுபிடிப்புகள் அப்படி இல்லை. தபால் துறை அழிந்து கொரியர் வளர்ந்தது. அப்புறம் ஈ மெயில் எல்லாம் வந்தபின்னர் டெஸ்பாட்ச் கிளார்க்குகள் நிலை கவலைக்கிடமானது. பல அலுவலகங்களில் அந்த பதவியில் இருந்தவர்களை வேறு பணிகளுக்கு மாற்றத் தொடங்கினர். அந்த நேரத்தில் நம்ம ரங்கசாமி சாருக்கும் புதிய பொறுப்பு தரப்பட்டது. கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் அவருக்கு ஆர்வமும் இல்லை. கேட்டால் ,”கழுதை இன்னும் நாலு வருஷத்தில் ரிட்டயர்ட் ஆகிப் போற எனக்கு எதுக்கு கம்பியூட்டர்?” என்று அலட்சியமாக வசனம் பேசிச் சிரிப்பார். ஆக அவர் டெஸ்பாட்சில் ஈ ஓட்டுவதால் கூடுதலாக கொடி நாள், காச நோய் தடுப்பு  இத்தியாதி வசூல் பள்ளிகளிலிருந்து பெற்று கணக்கில் செலுத்தும் பணி தரப்பட்டது.



                                                பள்ளிகளுக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கொடிகளைப் பங்கிடுதல்    அப்புறம் அனுப்பி வைத்தல் பின்னர் நினைவூட்டி பணத்தை வசூலிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இதற்கு முன்பெல்லாம் உடனுக்குடன் பணத்தை கருவூலத்தில் செலுத்தி ரசீதை செலான் ஒட்டு கோப்பில் ஒட்டி வைப்பது நடைமுறை.



                                         கொக்கிரகுளம் அலுவலகத்திற்கு மாறுதலில் ஆபீசராக வந்த சத்தியமூர்த்திக்கு சின்ன வயசு. மனிசன் வந்ததும் முந்தைய நடைமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டன. பெயருக்கும் ஆளுக்கும் சம்பந்தமில்லாதவர். எங்கியோ கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து வந்தவர். நிறைய நேர்மை பற்றி பேசுவார். வெளி மாவட்ட ஆள் என்பதால் அதிகம் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. காந்தியடிகளை விடவும் தான் நேர்மையானவன் என்ற தொனியில் அவர் ஊழியர்களிடமும் ஊள்ளூர் அரசியல்வாதிகளிடம் பேசுவார். ரங்கசாமி எந்த வேலைக்கும் லாயக்கில்லை என்று அடிக்கடி கடித்தபடி இருப்பார். ரங்கசாமிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பணத்தை கட்டும் போது சில்லறை ஐம்பது காசை விட்டு விட்டு கட்டுவது வழக்கம். அடுத்த முறையில் கட்டும் போது வரும் சில்லரையுடன் சேர்த்து கட்டுவார். அப்படி கட்டி செலான் கையெழுத்து வாங்கியவரை, “ என்ன ஏமாத்துறயா, இப்ப ஐம்பது பைசா குறைவா கட்டுவே, அப்புறம் நான் அசந்த நேரத்தில் ஆயிரக் கணக்கில் அமுக்கி ஆட்டயப் போட நூல் விட்டுப் பார்க்கிறாயா? சர்வீஸ் பூரா இங்கியே குப்பை கொட்டுறயாமே, தொலைச்சுப்புடுவேன் ஜாக்கிரதை.” என்று ஒருமையில் பேசியது ரங்கசாமியை சற்று மிரள வைத்தது. இது நாள் வரையில் ஒன்றாக இருந்த ஊழியர்களிடம் முதல் முதலில் சாதி வித்து விதைக்கப்பட்டது. அந்த விஷ விருட்சம் மடமடவென வளர்ந்து கிளைபரப்பி நின்றது. கொஞ்சி கொஞ்சிப் பேசும் இளநிலை உதவியாளர் ரூபா மேடத்திற்கு அவர் அருகில் இடம் தரப்பட்டது. பல முக்கிய முடிவுகளை ரூபாவே தன்னிச்சையாக எடுக்கும் அளவுக்கு செல்வாக்கு ஓங்கியது.


                                                     இந்த பேச்சிற்குப் பின்னர் ரங்கசாமியிடம் வரும் பணத்தை அவர் நேரடியாக ஆபீசர் சத்திய மூர்த்தியிடம் ஒப்படைத்து விட வேண்டும். சத்திய மூர்த்தி அதை முறையாக அரசாங்கக் கணக்கில் கட்டி விடுவது என்று ஏற்பாடானது. ரங்கசாமியும் ஒரு பதிவேடு போட்டு பணம் பெற்ற தினம், சத்திய மூர்த்தியிடம் வழங்கிய தினம் எல்லாம் குறித்து வைத்து அதில் அவ்வப்போது பக்கவாட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்.  
மாவட்ட ஆட்சியாளர் அலுவலக பேச்சிமுத்து ரயிலில் ரங்கசாமியை பேட்டை ரயில் நிலையத்தில் பார்த்து,


                                                 “ என்ன அண்ணாச்சி, கொடிக்காசு நாலு லகரம் நிக்காப்போல இருக்கு”. “நேத்திக்கி மீட்டிங்கில் கலைக்டர் உங்க தலைவரை எழப்பிக் கேட்டாப்பில”. “அந்தாக்கில அவரு நீங்க நேருங்கூறுமா வசூல் பண்ணலையாட்டு இருக்கு, ஜாரிச்சி அடுத்த இரண்டு நாளில் கட்ட ஏற்பாடு செய்யுதேன்” என்னாரு. “சீக்கிரம் கணக்கை நேர் பண்ணுங்க” .
 “கரைச்சல் புடிச்ச சமாசாரம் நமக்கெதுக்கு அண்ணாச்சி,  இல்லாட்டா போலிஸ் கேஸ் கொடுக்கச் சொல்லியிருக்காரு கலைக்டர். அதால வார பொதன் கிழமைக்குள்ள முடிச்சிடுங்க” என்று சொல்லி விட்டுச் சென்றார்.


                                                          ரங்கசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. எதுவானாலும் பதிவேட்டில் பணம் கொடுக்கல் வாங்கலை பதிவு செய்து கையெழுத்து வாங்கி வைசிருக்கோமே என்ற தைரியம் இருந்தது. யோசனயாய் அலுவலகத்தில் நுழைந்தவரை எல்லோரும் பரிதாபமாகப் பார்ப்பது தெரிந்தது. வருகைப் பதிவேடு தலைவர் அறையில் இருந்தது. கதவைத் தட்டி விட்டு,  உள்ளே சென்றவரிடம்,


“ வாயா, ரங்கசாமி, அந்த கொடிக்காசு நாலு லட்சம் பணத்தை  ஒடனெ கட்டிடுயா, கலைக்டர் வேற மீட்டிங்கில் எழுப்பி விட்டு என்னவொ கேள்வி மேல கேள்வி கேக்காரு”.
                                                “நீரு பொண்ணுக்கு கல்யாணம் அமக்களமா பண்ணிய போதே நினைச்சேன் . அது சரியாப் போச்சு”, இந்தியா நாசமா போறதுக்கே உன்னை மாதிரி ஆளுங்கதான் காரணம். இதெல்லாம் சங்கத்தில் உள்ள ரௌடிபசங்க கிட்ட சொல்லி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணாதே. நான் காண்டாறேனோ இல்லியோ கலைக்டர் செம காண்டாகிடுவார். ஆமா” என்றார் சத்திய மூர்த்தி.
 “போ, போயி சீக்கிரமா போலிசில் கையாடல் புகார் தருவதற்கு முன் பணத்தைக் கட்டிடு”.
                                             பல்லைக்கடித்தபடி வெளியில் வந்தவரை ஊழியர் சங்க செயலாளர் சசிதரன் மெல்ல கேண்டீனுக்கு கூட்டிப்போய் விவரம் தெரிந்து கொண்டார். ரங்கசாமியிடமிருந்து அவர் சத்திய மூர்த்தியின் கையொப்பம் பெற்றிருந்த பதிவேட்டை  வாங்கிக் கொண்டு அந்தப் பதிவேட்டின் பக்கங்களை அருகில் இருந்த கடையில்  கலர் ஜிராக்ஸ்  நான்கு பிரதிகள் எடுத்துக் கொண்டார். நடந்ததை எழுதி வாங்கி அதையும் பிரதியெடுத்து தான் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை பதிவுத்தபாலில் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றொன்றை முதலமைச்சரின் தனிப்பட்டபிரிவுக்கும் அனுப்பினார்.


                                         இவற்றை எல்லாம் முடித்துக்கொண்டு அலுவலகம் வந்த ரங்கசாமி சத்திய மூர்த்தியிடம் சென்றார். ரங்கசாமி பதிவேட்டை ஆதாரமாக அவரிடம் காட்டி, தான் அவ்வப்போது சத்திய மூர்த்தியிடம் பணம் கொடுத்ததை கூறினார். அதை கூர்ந்து நோக்கியவர், “அப்படியா” என்றபடி,


                                    “சரி, அதில் உள்ளது என் கையெழுத்துதானா என்பதை சரி பார்க்க வேண்டும். மாலையில் என் வீட்டிற்கு எடுத்து வந்து விடு. இப்போது அவசரமாக வெளியே போகிறேன்” என்று சொல்லி  வெளியே போனார்.
சத்திய மூர்த்தியின் மனதில் இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பது என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. மாலையில் தன்னுடன் ஜீப்பில் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து பதிவேட்டை வாங்கிக் கிழித்துப் போட்டு விடலாம். எதாவது பிரச்சனை செய்தால் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்ததைக் கண்டித்தேன். யாரும் அறியாமல் என் வீட்டில் புத்திமதி சொல்ல அழைத்து வந்தேன். அதனால் என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறான் என்று போலிசில் புகார் கொடுத்து உள்ளே தள்ளி விடலாம். மனதில் திட்டம் சரியாக இருந்தது.


                                                         மாலை ஐந்தரை மணிக்கு ரங்கசாமியை, “ சார் வாங்க, வீட்டில் போய் அக்கவுண்ட் சரிபார்த்து விடுவோம். உங்களை பஸ் ஏத்தி விட சொல்லிடறேன் என்று அன்பொழுக கூப்பிட்டார். அதற்குள் சசிதரன், “அய்யாவுக்கு ஏன் சிரமம்? நாங்க ஆட்டோவில்  வந்துடறோம் சார்”. “ரங்கசாமி சார், நாம் போய் சேர்வதற்குள் அய்யா செக் பண்ணி விடட்டும். அப்புறம் நாளைக்கு ஒட்டு மொத்தமா சலான் போட்டு கட்டிடலாம்” என்றார். “இந்தாங்க அய்யா” என்று பத்து அலுவலக ஊழியர்கள் பார்க்கும் படி பதிவேட்டை  சத்திய மூர்த்தியிடம் தந்தார்.


ஆகா, பழம் நழுவிப் பாலில் விழுகிறதே. இந்த ரங்கசாமி அப்பாவி அது தெரியும் இந்த சசிதரன் கூட இப்படி அடி முட்டாளாயிருப்பானா?. ஏப்படியோ இன்னிக்கி நமக்கு குருட்டு அதிருஷ்டம். “அதுவும் செரிதான். டிரைவர் வண்டியை எடு” என்று சொல்லியபடி  கிளம்பினார்.


                                                   வண்டி வரும் வழியில் செல் போனைத் தேட அலுவலகத்திலேயே விட்டு விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் அலுவலகத்தில் நுழைந்தவரை அழைத்தபடி இருந்தது செல்போன். “நொம்ப நேரமா அடிக்குது அய்யா”, என்றார் பணியிலிருந்த  இரவுக்காவல் பணியாளர்.

 “கொண்டாய்யா அதை” என்று சொல்லி வாங்கியவர் கையிலிருந்த பதிவேடு நோட்டை பக்கத்து மேசையில் வைத்து விட்டு , “அலோ, என்னம்மா” என்றார் சன்னமான குரலில்.  அழைப்பு வீட்டிலிருந்துதான். “ ஏங்க, இந்த அநியாயத்தை எப்படிங்க சொல்வேன். நம்ம நர்மதா கடிதாசி எழுதி வைச்சிட்டு யாரோ ஒரு பையனோட காலேஜில் இருந்து ஓடிப்போய்டாங்க. சீக்கிரமா வாங்க” என்றது மறுமுனை. மனது படபடக்க “இதோ உடனே வரேன்” என்று பதிலளித்தவர் அவசரத்தில் ரங்கசாமியின்  மேசையில் விட்டுச் சென்றது எதுவும் எழுதப்படாத சசிதரன் அவரிடம் கொடுத்த வெற்று கணக்கு நோட்டு. அதன் அட்டையில் வாய்மையே வெல்லும் என்று எழுதி காந்தியடிகள் படம் போட்டிருந்தது.

Thursday, 29 December 2016

காத்திருப்பு


கடற்கரையில் அலைந்து கொண்டிருந்தேன். எத்தனை காலமாகி விட்டது இப்படி ஏகாந்தமாக கடற்கரையில் அலைவது. எப்படி வந்தேன் இங்கே? எங்கே யார் அழைத்து வந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. இதுவரை எவ்வளவு நேரமாயிற்று? ஏன் பசிக்கவே இல்லை? எந்த கேள்விக்கும் விடை தர ஆளில்லை. அவரவர் கடல் அலைகளில் குழந்தைகுட்டிகளுடன் அலையில் கால் நனைத்து விளையாடுகிறார்கள். பார்த்து எத்தனை நாளாயிற்று. எனக்கும் அப்படி வாழத்தான் ஆசையாக இருந்தது. ஹூம் , எல்லாம் விதி. எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

திடீர் என்று காவல் துறை வாகனங்களின் ஒலி. சாலையே பரபரப்பாயிற்று. 
ஓ. நான் கடற்கரையில் இருப்பது தெரிந்து அழைத்துச் செல்ல வந்திருப்பார்கள். என்னைப் பார்த்தால் குனிந்துபோலியாக பவ்யம் காட்டிக் கும்பிடும் கூட்டத்தை விட்டு விலகி நிற்பது கூட மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதக் குருதி குடித்த புலி போல அதிகாரத்தைக் குடித்து விட்டதுதான் எல்லாவற்றிற்கும் காரணமாயிற்று. அந்த சுவைக்கு எத்தனை சதிகள், அலைச்சல், துன்பங்கள்.

 சரி அங்கே ஒரே கூட்டமாக இருக்கிறதே என்னவென்று பார்ப்போம் என்று நடக்கிறேன். ஏதோ மௌன ஊர்வலம். பெரிய பெரிய கருப்புக் கொடிகள். பலர் முகத்தில் சோகம். சிலர் முகத்தில் சோகத்தை மீறிய மகிழ்ச்சி. பெரிய எழுத்தில் எகப்பட்ட பதாகைகளில்  கருப்பு எழுத்துக்கள் கண்ணீர் அஞ்சலி செய்தன. எங்கும் மௌனம். பதாகையை பார்த்ததும் திடுக்கிட்டேன். என்ன இதுஅக்கிரமம்?   
நான் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளாம். என்ன வேடிக்கை இது, இங்கே நான் குத்துக் கல்லாக இருக்க. குரலெடுத்துக் கத்துகிறேன், “அட முட்டாள்களா நான் உயிரோடு இருக்கிறேன்”. என்ன இது, யாரும் என் குரலை கேட்டதாக காட்டிக் கொள்ளவில்லை.

அஞ்சலி நிகழ்வை நடத்துவது யார் என்று பார்த்தால், ஆச்சரியம். என் கூட இருந்தவர்கள்தான். அவர்கள் பேசுவதைக் கேட்க அவர்களுடனேயே நடக்க என்னைப் பற்றிய அவர்கள் எண்ணங்கள் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆகா என்னைச் சுற்றி நடப்பது உண்மையா அல்லது கனவா? கிள்ளிப் பார்த்துக் கொள்ள உடலைக் காணவில்லையே. இன்னம் அதிகமாக குழப்பம்.

வீட்டிற்குப் போனால்,தெரியும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரியும். எண்ணிய வேகத்தில் வீட்டிற்கு வந்தால், வீட்டில் நான் வளர்த்த நாய்கள் கூட குரைத்து துரத்தின. மனிதர்கள், நான் பணியாட்களை விளிக்க யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஏதோ மர்மமாக இருக்கிறது என்பது மட்டுமே புரிந்தது. என் தனியறையில் ஆளுயரக் கண்ணாடி ஒன்று இருக்கும் அதில்தான் என்னை தினமும் காண்பேன். அறைக்குள் நுழைந்து கண்ணாடியைப் பார்த்தால், யாரது? இது சத்தியமாக நானில்லை. ஏதோ நிறங்கள் வட்ட வட்டமாய் மாறி மாறித் தெரிகிறதே. கண்ணாடி கூட எனக்கு விசுவாசமாயில்லையா?

எதோ என்னைப் பற்றி யாரோ உரத்த குரலில் பேசுகிறார்கள். எனக்கு நினைவு மண்டபம் கட்ட ஏன் தாமதம் என்று. யாரோ சிலர் வாய் பொத்திச் சிரிக்கிறார்கள். என்ன ஆயிற்று எனக்கு? ஒன்றுமே விளங்கவில்லை.

மீண்டும் கடற்கரைக்கு வந்து காலாற சிந்தித்தபடி நடக்க, என்னது? என் பெயர் போட்டு நினைவிடம் என்று உள்ளதே. அருகே சென்றால் கட்டணம் வசூலித்து உள்ளே அனுப்புகிறார்களே . கையில் காசு வேறு இல்லை. ஆனால் யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அருகே வந்தால் எதோ இழுக்க என்னுடல் சவப் பெட்டிக்குள், புதைக்கப்பட்ட நிலையில். சரி. ஒன்று செய்யலாம் உடலுக்குள் நுழைந்து விடலாமா?
முயன்று பார்ப்போம் என்றால் முடியவில்லை. கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டி வழியடைத்து விட்டனரே. கண்ணீர் மல்க கடற்கரையில் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேனோ தெரியவில்லை. எல்லா ஆட்டபாட்டங்களும் அடங்கி இருள் சூழ ஆரம்பித்தது. இப்படி ஒரு தனிமை வாய்த்தது ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் பயமாயிருந்தது.

சுற்றி வைக்கப்பட்ட கயிற்றுக் குன்றில் சாய்ந்தபடி “ஓ” என்று கூச்சலிட்டபடி ஓடி வரும் அலைகளைப் பார்த்தவண்ணம் சிதறிக் கிடந்த  நினைவுகளை கோர்வைப் படுத்த ஆரம்பித்தேன். முடியவில்லை. துண்டு துண்டாக தொடர்பு படுத்த முயன்றதில் தோற்றுப் போனேன். அழுகை வந்தது. இடிச் சிரிப்பு, கந்தல் கந்தலாக அழுக்குப் பிடித்த உடை. எண்ணைய் காணாத சடைப்பிடித்த முடி இந்தக் கோலத்தில் வந்த மனிதனை பார்த்த எனக்கு பயமாக இல்லை. சட்டென அவர் மடியில் படுத்து அழ ஆரம்பித்தேன்.





“அழாதே. இப்போது என்ன நடந்து விட்டது, நீ அழுவதற்கு” என்றவரிடம் என் குழப்பத்தைக் கூற, மீண்டும் இடிச் சிரிப்பு.
“ப்பூ. இவ்வளவுதானா, நீ உன்னை அறிய என்னிடம் வந்தாய் குழந்தாய்”.
“உங்களை எப்படிக் கூப்பிட வேண்டும்”?
“நைனா என்று நான் அன்போடு எல்லோரையும் அழைப்பேன். நீ என்னை விரும்பினால் அப்படியே அழைகலாம் மகளே”
“ நைனா, நான் இறந்து விட்டேனா”?
“ இன்னும் இல்லை என்றுதான் சொல்லுவேன்”
“அப்படியானால், நான் அதிகாரத்தில் இருந்த போது கும்பிட்டுத் தொழுதவர்கள் இப்போது என் இருப்பை உணரவில்லையே”?
“ஓ. அப்படியா. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆன்மா என்ற பொருளில் சொன்னேன் நைனா”
“ நான் பெண்ணல்லவா”?
“ஆன்மாவிற்கு பால் பேதம் இல்லை மகளே”
“சரி. அப்போது என்னை எப்படி நைனா நீங்கள் மகளே என்று சொல்கிறீர்கள்”?
“நல்ல வினா, இதுவரை நம் உரையாடலில் நான் என்று தானே உன்னை சொல்லிக் கொண்டிருந்தாய். அதை விட்டு விட்டு வந்த பின் உன்னை அப்படிக் கூப்பிட மாட்டேன். முதலில் உன் பழைய நினைவுகளைக் களையலாம். ஆன்மா என்ற பாம்பு சட்டையை உரிப்பது போல்தான் பிறப்பு. புதிய பிறப்புக்கு முன் சில செய்திகளை நீ அறிய வேண்டியுள்ளது.என்னுடன் பயணிக்க தயாரா”?
“ சரி. வழிகாட்டுங்கள்”
“என் கையைப் பற்றிக் கொள். எனக்கு அந்த ஈசன் இட்ட பணி செய்யப் போக வேண்டும்”.
அந்த அழுக்கு மேனியிலிருந்தும்,சடைப்பிடித்த தலையிலிருந்தும் இதுவரை அறிந்திராத அபூர்வ நறுமணம் வீசுவதை அனுபவித்துக் கொண்டே வந்தேன்.
“ இந்த இடம் ஏதோ மீனவர் குடியிருப்பு போல இருக்கிறதே நைனா”
“ஆம். நீ பசியாக இருப்பாய். உனது இந்த உடலற்ற சூக்கும நிலையில் பிறர் உண்பதைப் பார்த்தாலே பசி நீங்கி விடும்”.
“ அந்த மண்டபத்தில் உட்கார். நடப்பதை கவனி”.
அந்த மண்சட்டியை தன் முன் வைத்து உட்கார்ந்தார். வந்த மீனவப் பெண்மணி, “சாமி, ராவையில் சாப்பிடாமக் கொள்ளாம எங்க பூட்ட. சூடா மீன் கொயம்பு வச்சிருந்தேன். இப்ப சாப்பிடறயா”?
“கொண்டு வா. அந்த சட்டியில் ஊத்திட்டுப் போ நைனா”
“ சாப்பிடாம இருக்கிறவங்களை வரிசையா உட்காரச் சொல்லு”.
“ அடுத்த சிறிது நேரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்கள் வந்து விட்டனர்.
“ மற்றொரு பெண்மணியை  பழைய சோற்றை மீன் குழம்பில் பிசைந்து அவர்கள் இலையில் பரிமாறச் சொன்னார். வரிசையில் அமர்ந்தவர்கள் இலைகளில் சூடான் மீன் குழம்புச்  சோறு. வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பிராமணர் மீன் குழம்பு என்பதை உணர்ந்து தயங்க, “நைனா, நீ எதை நினைக்கிறாயோ அதுதான் இலையில் வரும் , நல்லா சாப்பிடு” என்றார்.
அந்த பிராமணர் இலையில் கத்தரிகாய் சாம்பார் சாதம் சுடச்சுட.
என்ன அற்புதம். நம்ப முடியவில்லையே.

“ நைனா, இது புழல் காவாங்கரையில் உள்ள என் ஜீவ சமாதி.  என்னை சட்டிச் சித்தர் என்பார்கள். நான் எந்த அற்புதமும் செய்யவில்லை. அந்த ஈசன் இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான். இந்தப் பித்தனுக்கு இந்த அட்சய பாத்திரம் சப்த கன்னிகைகள் மூலம் கிடைத்தது. உன் முற் பிறவி ஒன்றில் மணிமேகலை என்ற பெயருடன்  காவிரிப் பூம் பட்டிணத்தில் பிறந்து பசிப்பிணி போக்கிய அருந்தவச் செல்வியாக இருந்தாய். கடந்த பிறவியில் அதன் பலனாக அரச வாழ்வு உனக்கு வாய்த்தது. உன் மறுமைக்கு வழிகாட்ட ஈசனின் கட்டளையின் பேரில் சமாதியிலிருந்து வெளிப்பட்டு வழிகாட்ட வந்தேன். இந்த சட்டி வெறும் மண் சட்டியில்லை. அட்சய பாத்திரம். இன்னும் சிறிது காலத்தில் நீ மறுபடி பிறப்பாய். அப்படி பிறக்கும் போது எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்க இந்தப் பாத்திரம் உன்னிடம் வந்து சேரும். அதுவரை காற்றைப் போல் அலைந்து கொண்டுதான் இருக்க வேண்டும். இந்த இடைக்காலம் முடியும் போது வடலூருக்கு சென்று விடு. வள்ளலார் உன் மாயப் பிறவிச் சுழலில் இருந்து மீட்டு உன்னைக் கரை சேர்ப்பார். ஈசனை மனதாற நினைக்கும் போது நான் தோன்றி வழிகாட்டுவேன். சிவாய நமக” என்று அவர் சொல்லி மறையவும், மீண்டும்  கடற்கரையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கிறேன். மறு பிறவிக்கான அழைப்பு இன்னும் வரவில்லை.  ஆனால் மனதில் அதிகார மமதையோ, ஆசையோ, குழப்பமோ எதுவும் இல்லை. 

கீழ் வானில் கதிரவன் வர ஏதோ நினைவு ஊர்வலம் வருகிறது. பதாகையில் என் முற்பிறவிப் படத்துடன்  25 ஆவது ஆண்டு நினைவு நாள் என்று எழுதியிருந்தது.  

Saturday, 24 December 2016

இன உணர்வு

இன்னும் சரியாகப் புலர்ந்திராத ஜனவரி மாத காலை. மணி நாலரை ஐந்துக்குள் இருக்கும். தினசரி காலை நடைப் பயிற்சி என்பது பொதுவாக மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் பகுதியில்தான். திரும்பத்திரும்ப ஒரே நேர்கோட்டில் கைத்தறியில் ஊடை நூலைப் போல  இயந்திரத்தனமாய் குறுக்காக போய் வருவது படு சலிப்பான ஒன்று . வழக்கமாக மார்கழி மாதம் முதலே சிலர் குளிருக்கும், பனிக்கும் பயந்து நடைப் பயிற்சிக்கு தற்காலிகமாக விடுப்பு எடுத்து விடுவர். சிலர் கோவில்களில் தெய்வ சேவைக்கு போய் விடுவார்கள். ஆகக் கூடி இன்று வழக்கமான நடை சினேகிதர்களில் யாரும் இல்லை.

 தன்னந்தனியாக மெட்ரோ ரயில் நிலையம் வந்தவனுக்கு எதிரே புதியதாக திறக்கப்பட்டுள்ள தானிய மொத்த அங்காடியைச் சுற்றிப் பார்க்க ஆவலாயிருந்தது. கடைகள் எதுவும் திறக்க வில்லை. ஆனால் முதன்மை வாயில் திறக்கவில்லை. வெளியில் இருந்த காவல்காரர்,
 “ சார், கடையெல்லாம் எட்டு மணிக்கப்பாலதான் திறப்பாய்ங்க” என்றார். “அதில்லைங்க சும்மா சுத்திப் பார்க்கலாம்ன்னு பார்த்தேன். எத்தனை கடை, எத்தனை வரிசை எல்லாம் பார்த்து பத்திரிக்கையில் எழுதப் போறேன். அது சம்பந்தமா உங்களுக்கு எதாவது விவரம் தெரியுமா”?
“ஆ, அதெல்லாம் தெரியாது சார். நான் நைட்டு டூட்டி. இப்பொ எட்டு மணிக்கு வேற ஆளு  டே டூட்டிக்கு வந்ததும்  கிளம்பிடுவேன். ஆபிஸ் ரூம் பத்து மணிக்கு தொறக்கும். அங்க விசாரிச்சிக்குங்க”. சின்னதாக அவருக்கு ஒரு நன்றியை ஆங்கிலத்தில் சொல்லி பதிலுக்கு “சரிதான் சாரை” வாங்கிக் கொண்டு நடையைக் கட்டினேன்.
தமிழ்நாட்டில் , அதுவும் சென்னையில் நன்றி என்றால் பதிலுக்கு யாரும் ஒன்றும் சொல்வதில்லை. ஆனால் அதையே ஆங்கிலத்தில் தேங்க்ஸ் என்றால் அப்படி ஒரு ரெசிப்ரொகேஷன்.
 
 அப்படியே காய்கனி மார்க்கெட் வந்தால் சரியான வாகன நெருக்கம். சில்லறை வியாபாரிகள் அவர்களின் சரக்கை ஊர்திகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். மெல்ல வாகனங்களின் இடையில் புகுந்து புகுந்து “யோவ் பெரிசு வூட்டில் சொல்லிட்டு வன்ட்டியா, பார்த்துப் போ” என்று ஆசிர்வாதங்களை ஏற்றுக்கொண்டு  நடைமுடித்து சுலைமானின் டீ கடையில் உட்கார்ந்தேன்.
சிநேகமாக சிரித்த சுலைமான், “சார் என்ன சீக்கிரமே வந்தாச்சு என்றார்”.
“ மூணு மணிக்கே தூக்கம் கலைஞ்சிடுத்து சுலைமான், அதான்”.
நான் பல வருட வாடிக்கையாளன். ஆகவே எப்போது போனாலும் தூள் மாற்றி ஸ்ட்ராங்கா சர்க்கரை தூக்கலா போட்டுத் தருவார். என்னிடம் மட்டுமில்லை கடைக்கு வரும் எல்லாரிடமும் சிரித்து பேசி வாடிக்கையாளராக ஆக்கிக் கொள்ளும் அந்த சாமர்த்தியம் அவருக்கே சொந்தம்.

சாலையில் போக்குவரத்து அதிகரிக்க ஆரம்பித்தது. கடைக்குப் பக்கத்தில் CMBT அதாவது புறநகர் பேருந்து நிலைய நுழைவு வாயில். கடை எப்போதும் படுசுத்தமாக இருக்கும். கரைபடிந்த மேசைகள்,  ஈ மொய்ப்பது, அழுக்கு கண்ணாடித் தம்ளர், ஒரே எவசில்வர் பேசினில் எல்லா கண்ணாடித் தம்ளர்களையும் கழுவுவது இப்படி எல்லாம் அங்கே கிடையாது. ஒவ்வொரு முறையும் பயன் படுத்திய டம்ளர்களை முதலில் ஓடும் தண்ணீரிலும் அப்புறம்  மறுபடி  வென்னீரில் கழுவித்தான் அடுத்த முறை பயன்படுத்துவார்.  அதிகாலையிலேயே கடை திறந்தால் தினமும் சுமாராக இருபது இருபத்தைந்து லிட்டர் பால் ஓடும் என்பார்.


டீ மாஸ்டர் ஆறரை மணிக்குக் கடைக்கு வரும் வரை அவர் தான் மாஸ்டர்.
மாலை பஜ்ஜி, போண்டோ என்று போடுவார். அந்த பஜ்ஜி எண்ணெய் கூட ஒரு தரம் பயன் படுத்தியதை மறுதரம் பயன்படுத்த மாட்டார். எப்படியோ காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை வரை மாடா உழைச்சா எல்லா செலவும் போக மாதம் பத்தாயிரம் ரூபாய் மலப்புரத்தில் உள்ள குடும்பத்திற்கு பணம் அனுப்ப முடிகிறது என்று சொல்லுவார்.

கடை அருகே அரசு விரைவுப் பேருந்தொன்று நின்றது.
பேருந்துகள் உள்ளே நுழையும் முன்பே நிறுத்தப்பட, நுழைவாயிலில் மொய்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள். உற்றுக் கேட்க அவர்களுக்கும், பயணிகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் படு சுவாரசியமாக இருக்கும்.
“இன்னா சார் எங்க போகணும்”?
“சின்மயா நகர் பா”
“ இருநூறு ரூபா கொடு சார்”
“ரொம்ப ஜாஸ்தி பா. ஷேர் ஆட்டோவில் பத்து ரூபாதான்”
“நடந்து போனா அது கூட ஆவாது சார். எம்மாம் லக்கேஜ் இருக்கு பாத்தியா? சரி. எவ்ளோ தருவே”?
“ மீட்டர் போடு மேல பத்து ரூவா தரேன்”
“ தோ டா, சாருக்கு மீட்டர் போடணுமாம்”
பார்ட்டி உசாரான ஆளு என்றால் அடுத்த ஆளை தேடிப் போவார்கள். சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் இருநூறு என்பார்கள். 
“ஏன்பா, நூறு ரூபாதான் ஆவும்பா. நூத்தம்பது தரேன்”.
“சரி சார். மேல பத்து ருவா போட்டுக்கொடு. போணியே நீதான் சார்”.
“நூத்தம்பதுதான்”.
 “பத்து ரூவா பாக்காதே சார்”.
“இல்லை நூத்தம்பதுதான்”
“அப்பால உங்க இஸ்டம். உக்காரு. சின்மயாநகர் எத்தினியாவது ஸ்டேஜ்”? ஆட்டோ கிளம்பியது.

கொஞ்சம் விடிந்து விட்டது. கடையை நோக்கி ஏழெட்டுப் பேர்கள் வந்தனர்.
அவர்களின் கட்சிக் கரை போட்ட வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை சீருடை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கட்சித் தலைவர் படம் எல்லாம் அவர்களை அடையாளப்படுத்தின.

வந்தவர்களில் ஓருவர்,”சேட்டா டீ போடு” என்றதும்
சுலைமான் மனசுக்குள்  தலையை எண்ணியபடி டீ போட ஆரம்பித்தார்.
வந்தவர்களில் ஒருவர் “அண்ணே இந்த முறை நமக்குத்தாண்ணே” என்று பேசியதெல்லாம் நமக்கு அனாவசியம். அவர்கள் வெளியில்  பிளாஸ்டிக் குடத்தில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து முகம் கழுவி பின் தேனீர் பருக ஆரம்பித்தனர். “ஏம்பா தண்ணி டேஸ்டு கடுப்பா இருக்கு? நல்ல தண்ணி வைக்கக் கூடாதா”? என்றார் கொஞ்சம் பார்க்க தலைவர் மாதிரி இருந்த ஆசாமி. கடையில் எடுபிடி வேலைகளுக்கு சுலைமான் ஒரு சிறுவனை வைத்திருந்தார்.
“என்ன சுலைமான், படிக்கிற வயசு சின்ன பையனை கடையில் வேலைக்கு வைக்கலாமா” என்றேன் ஒரு நாள்.
“ அதுவா சார், அந்த பையன் அப்பா நாலு வருஷத்து முன்னே வேற ஒரு பொண்ணோட ஓடிப் போயிட்டான். அவன் அம்மா எனக்குத் தெரிஞ்சவங்க. அவங்க வயித்துப் பாட்டுக்கு எதாவது உதவி செய்யணும் என்றால் யாராவது தப்பா பேசலாம். அதனாலெ, ஸ்கூல் போற மட்டும் இங்க இருப்பான். டீ மாஸ்டர் வந்ததும் நானும் அவரும் கடையப் பார்த்துப்போம். இவன் பள்ளிக்கூடம் போயிடுவான். சாயங்காலம் ஒரு எட்டு மணிவரை இருப்பான். அவங்களுக்கும் வேலை செய்து சம்பாதித்த எண்ணம் இருக்கும். நான் எதாவது எதிர்பார்ப்பேனோ என்ற பயம் அவங்களுக்கும் இருக்காது. எனக்கும் பெரிசா தர்மம் பண்ணிய எண்ணம் வராது”. என்றார்.
 மனசுக்குள் சுலைமான் ஒருபடி உயர்ந்து நின்றார்.

கடையை விட்டு சற்று விலகி அவர்கள் உரையாடியபடி தேநீர் பருகி காலி காகித கப்புகளை கீழே போட்டு விட்டு நடையைக் கட்டவும் தொடங்கினர். கடைக்கு  மற்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய பயணிகள் வர ஆரம்பித்திருந்தனர்.
சுலைமான் எடுபிடிக்கு வைத்திருந்த சிறு பையன் அவர்களைத் தொடர்ந்து போய்” சார் காசு தரலை” என்றான். அதில் தலைவர் போலிருந்தவர் நூறு ரூபாய் நோட்டை சட்டை உள்பாக்கெட்டிலிருந்து எடுத்து,” சிங்காரம், நீ போய் கடையில கொடுத்திட்டு லாடஜுக்கு வந்திடு”, என்றவாறு நடக்க ஆரம்பித்தார்.

கடைப் பையனுடன் வந்த தொண்டர் சுலைமானிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, “இந்தா எடுத்துக்க உன்காச. காலங்காத்தால தலைவரை அசிங்கப்படுத்திட்டயே. ஓடியா போயிட்டோம். கடைப்பையன் வந்து கேட்கற அளவுக்கு ஆயிடுச்சி” என்றார்.

சுலைமான்,” கடை திறந்து இப்பத்தான் அரை அவர் ஆவுது. சில்லறை இல்லை. கொஞ்சம் மாத்திக் கொடுங்க”. “யோவ் காசு வேணுமினு பயலை அனுப்பி அசிங்கப்படுத்தத் தெரியிது.சில்லறை மாத்தித் தரத் தெரியலையா? ஜூன் மாசம் கடை இருக்காது”.

சுலைமான் கடை இருக்கும் கட்டிடத்தின் சொந்தக்காரர் பெரிய புள்ளி. நல்ல செல்வாக்கானவர். அந்த ஏரியாவில் அவர் பெரிய தாதா. சுலைமானுக்கு மிகவும் நெருக்கமானவர். இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பையனை அனுப்பி சில்லறை வாங்கி எட்டு டீ க்கு உரிய காசை எடுத்துக் கொண்டு மிச்சம் தந்தார். 

காசை வாங்கி எண்ணியவன்,” என்ன கணக்கு”
“எட்டு டீ. ஒரு சிங்கல் டீ ஏழு ரூபாய் ஆக ஐம்பத்தாறு” சுலைமான்.
“ஏய் நானும் பார்க்கறேன் ரொம்ப ராங்காவே பேசற. வந்தேறி மலையாளத்தானுங்க இப்படி எங்கூரில வந்து சுரண்டி சாப்பிடறீங்கடா. ஐந்து டீ தந்திட்டு எட்டு டீ ன்னு சொல்லி ஏமாத்தி *** தின்னற **** பசங்க”. 
"நாங்க தமிழங்கடா, எங்க பூமிடா இது” என்று ஆரம்பிக்கவும்.
“ஏய் எட்டு டீ சாப்பிட்டு விட்டு அஞ்சுன்னு பொய் சொல்லாதே”
“யாருடா பொய் சொன்னது? மரியாதையா காச எண்ணி கொடுத்திடு. எலெக்சன் முடியட்டும் பாரு அப்புறம். எச்சக்கலை நாயுங்க”
“மூன்று டீ காசு தர முடியாது. டீ குடிச்சதானே” என்றபடி பக்கத்து கடைக்காரர்களை அழைக்க மலையாளத்தான்களை விரட்டணும் என்றபடி வீர வசனம் பேசி பம்மிப் பம்மி  காணாமல் போனான்.

குடிச்ச டீ க்கு காசு தர விரும்பாத இன உணர்வுப் போராளியை நினைத்து “சுலைமான் இவனுங்களை எப்படி சமாளிக்கிற” என்றேன்.
 “தினமும் எப்படியும் ஒரு ஆளு இப்படி வந்து சேருவான். அதெல்லாம் பார்த்தா தொழில் செய்ய முடியுமா சார். இவனுங்க ஆட்சிக்கு வந்தா அராஜகம் பண்ணுவாங்க அதை நினைச்சாத்தான் பயமாயிருக்கு.
யாரும் சாப்பிட இல்லாட்டா பால் காய லேட்டாகும் என்று தள்ளி விட்டிருப்பேன். நீங்கள் டீ சாப்பிடறத பாத்துட்டதால அப்படி சொல்ல முடியல. சாரி சார் இந்த கலாட்டா எல்லாம் பார்த்துட்டு நாளைக்கு வராம போயிடாதீங்க. இந்த அல்லக்கைகள் ஆடற ஆட்டம் தான் சார் தாங்க முடியாதென்றார்”. 
இன உணர்வின் மறுபக்கம் திகிலூட்ட வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

Tuesday, 20 December 2016

மாநகர பேருந்துப் பயணம்

கோயம்பேடு சத்திரம் பேருந்து நிறுத்தம் எப்போதும் போல் அன்றும் பரபரப்பாக இருந்தது. அங்கே எதிரே கட்சி அலுவலகத்தில் யாரோ ஐந்தாறு ஆட்கள் வெய்யிலில் வண்ணக் குடை பிடித்தபடி வீடியோ படம் பிடிக்க ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தனர். விதவிதமான வண்ணக் கொடிகள் கட்டிய கார்களில் அரசியல் பிரமுகர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். எதிர் வாடையில் நின்று இவற்றை வேடிக்கை பார்த்தபடி 46 எண் மாநகரப் பேருந்திற்காக காத்திருப்பது அந்த வெய்யில் நேரத்தில் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

டீக்கடை நிழலில் ஒதுங்க நினைத்தால் அரசியல் பேசும் கட்சிக்காரர்கள், “அண்ணே எம்புட்டு ஆனாலும் ஒரு கை பார்த்திடலாம்ணே. எப்படியும்
நிச்சயமா செயிச்சிடுவீங்க. தலைவரண்ட தெகிரியமா பேசுங்க”.
எனக்கு அரசியல் பேச்சில் அதிக சுவாரசியம் கிடையாது.

மேலும் என் ராசியான மிதுனத்திற்கு சந்திராஷ்டமம் என்று காலையில் தொலைகாட்சியில் பார்த்த ஜோசியர்கள் எல்லாம் ஒருத்தர் பாக்கியில்லாமல் சொல்லி எச்சரிக்கை செய்திருந்தனர். முடிந்தவரை மௌனம் காத்து, அன்றாட அலுவல்களை மட்டும் கவனிக்க வேண்டும். பொதுப் பிரச்சனைகளில், விவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று தினமலரும் உறுதிப்படுத்தியது.  இப்போ இதை இவன் ஏன் சொல்கிறான் என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு இதற்குள் வந்திருக்க வேண்டும். இந்த கதை முடியும் தருணத்தில் என் மௌனத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

சத்திரம் பஸ் ஸ்டாப் என்ற நாமம் கொண்ட அந்த பஸ் ஸ்டாப் அருகில் நின்ற ஒரே ஒரு ஆலமரமும் டிசம்பர் மாதம் பனியில் குளித்த தலையைக் காற்றில் துவட்டியதில் இருந்த இலைகளை கிட்டத்தட்ட முழுவதுமாக இழந்து குறைந்த இலைகளை வைத்துக் கொண்டு  கஞ்சத்தனமாக நிழல் தந்தது. அந்த சுடும் வெயிலிலும் பிளாட்பாரத்தில் உட்கார்ந்தபடி பூக்கட்டியபடி கருமமே கண்ணாயிருந்த பெண்கள். அருகில் பிளாஸ்டிக் பை நிறைய சாமந்திப் பூக்கள் மடித்துக் கட்டிய வாழை நார்கட்டு. சுற்றிலும் இரைந்து கிடக்கும் தொடுக்க இயலாத உதிரிப்பூக்கள்.

நம் கதாநாயகி யை அறிமுகம் செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது.
பக்கத்தில் ஒரு மூதாட்டி, சுருக்கம் விழுந்த முகம் வயது எப்படியும் எழுபது சொச்சம் என்று காட்டியது. என்னிடம் “தம்பி, 46 வண்டி வந்தா சொல்லுப்பா ராசா” என்றார். முதல் பார்வையில் அவரை அடையாளம் அறிய முயற்சி செய்தேன். எங்கோ பார்த்த ஞாபகம். சரியாகப் பிடிபடவில்லை.
“சரிம்மா”, என்ற எனக்கு அவர் எங்கே போகப் போகிறார் என்றறிய வேண்டி,” எங்க போகணும்” ஐ.சி.எப் ஆ” என்று கேட்ட என்னிடம்                          “ பட்டாளம் போகணும். பேரப்புள்ளைய பாக்கப் போறேன்” என்றார்.

என்னவெல்லாமோ பேருந்துகள் வந்தன. ஆனால் 46 வரவில்லை.
அந்த இருபது நிமிட நேரத்தில் என்னிடம் தன் குடும்பக்கதை பேச ஆரம்பித்து விட்டார். “எப்பா, உனக்கு எத்தினி பசங்க? கோவிச்சிக்காதே. உன்னைய பார்த்தால் என் உடன் பொறந்தவனைப் போல தோணுது, அதான் கேட்டேன்”.
“ஒரு பையன், ஒரு பொண்ணு, ஆயா”
“ஆமா. யாரு பெரிசு பையனா? பொண்ணா”?
“பையன் தான் பெரியவன்”.
“ இன்னா வயசாச்சு அவனுக்கு”?
பஸ் ஸ்டாப்பில் முன்னப்பின்ன தெரியாத வயதான பெண்மணியிடம் குடும்ப கதை எல்லாம் சொல்லும் தருணம் உங்களுக்கு வாய்க்காவிட்டால் நீங்கள் சத்தியமாகப் பாவிதான்.
“25 வயசாச்சு ஆயா”
“ தம்பி படிச்சி முடிச்சிருச்சா, வேலைக்குப் போவுதா”?
“ஆமா ஆயா, இஞ்சினியர் படிப்பு படிச்சிட்டு ஒரகடத்தில் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்யிறான். கல்யாணத்திற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.
“ ஆங். ஒரகடம் கார் கம்பெனியா? ஹுண்டாய் கம்பெனியா? நல்ல சம்பளம் கிடைக்குமே” என்றவர்
“பொண்ணு பார்க்கும் போது நல்ல பொண்ணா பார்க்கணும் ராசா, பையனுக்கு எடுத்துச் சொல்லு அழகை விட கொணம் முக்கியம். என் புள்ளை அழகை பார்த்து மயக்கத்தில ஒரு ராங்கிக்காரியை கட்டிக்கிட்டு படாதபாடு படறான்”. “அவ பேச்சு கேட்டு என்னை மகன் துரத்தி விட்டான்” என்ற எல்லா மாமியார்களும் சொல்லும் கதையுடன் ஆரம்பித்தவர் மகளும், மருமகனும் தன்னை தாயைப் போல பார்த்துக் கொள்வது வரை சொன்னார்.
ஆனாலும் திருவள்ளூர் இந்துஸ்தான் மோட்டார் கம்பெனியில வேலை செய்த அவரது கணவர் இறக்கும் போது,” யாரையும் அண்டியிராதே கமலம்” என்ற அவரது வார்த்தைக்கு மரியாதை கொடுத்து தனிக்கட்டையாக வாழ்வது பற்றி சொன்னார். குறுங்காலீஸ்வரர் கோவில் சரபேஸ்வரர் கோவில் மண்டபத்தில் ஜாகை. கொஞ்சமா பூ கட்டி வியாபாரம். மதியம் கோவில் அன்னதானத் திட்டத்தில் சாப்பாடு இப்படியாக காலம் ஓடுகிறதை சொல்லிப் பெருமூச்சு விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஓடிவிட்டது.
கதை ஓடிவிட்டது.

அவரு விட்டுப்போன கிராஜுட்டி பணத்தை ஏமாந்து மருமகளிடம் கொடுத்து விட்டதில் அதிகம் வருத்தப்படவில்லை. “எப்படியும் எனக்கு பிற்காலம் அவதான் எடுத்துக்கப் போறா. சரி இப்போவே கொடுத்திட்டதா நினைச்சிக்கிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வரிசைகட்டி நாலைந்து பேருந்துகள் வர அதில் ஒன்று 46 ஆக இருந்தது.

பேருந்தில் நல்ல கூட்டம். பொதுவாக சென்ன மாநகர பேருந்துகள் நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் இருந்தாலும் அல்லது ஓரிருவர் கை காட்டினாலோ நிறுத்துவதற்கு அதிகம் வாய்ப்பில்லை என்பது என் அனுபவ ஞானம். அப்படி நிறுத்தத்தில் பேருந்து அதிருஷ்டவசமாக வந்து நின்றால் அது உங்கள் பாக்கியம். நம் நிறுத்தம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு அடுத்த நிறுத்தம். ஆகவே ஒரே சமயத்தில் நிறைய பேருந்துகள்வந்து நிற்பதால் எப்போதும் நெரிசல் அதிகம். பேருந்து வந்து நின்றது. அவரை வண்டி வந்ததைச் சொல்லி முன் வாயில் வழியாக ஏறச் சொன்னவன் அடித்துப்பிடித்து பின் வாயில் வழியாக ஏறி நூர் ஹோட்டல் நிறுத்தம் டிக்கெட் கேட்டு 20 ரூபாய் கொடுத்தேன். நடத்துனர் மூன்று ரூபாய் கேட்க இல்லை என்றேன். 

“படிச்சவன் படிக்காதவன் எல்லாரும் இப்படிக் கழத்தறுக்கிறாங்க” என்று சலித்துக் கொண்டவர் 13 ரூபாய் டிக்கெட் எச்சில் தொட்டு  தந்துவிட்டு, ”இறங்கும் போது 3 ரூபாய் தந்திட்டு 10 ரூபாய் வாங்கிக்க” என்று அதீத மரியாதையாகச் சொல்லி விட்டுக் கூட்டத்தில் காணாமல் போனார்.

என்.எஸ்.கே நகர் நிறுத்தத்தில்,” ஏய் கிழவி இறங்கிடு. வெள்ள போர்ட்டு பஸ்சில தான் 7 ரூபாய் டிக்கெட். இது டீலக்ஸ், நீல போர்ட் 13 ரூபாய். எத்தனைவாட்டி சொன்னாலும் புரியாதா” என்ற குரல் வந்த திசையில் கஷ்டப்பட்டு பார்த்தால் நம்ம கமலம் பாட்டிதான். 
“ ஏய் கெய்வி இந்த வயசில என்ன சுற்றுலா கேக்குது உனக்கு”?
 “கண்டக்டர், ஆயாவை காந்தி நகர் ஸ்டாப்பில் எறக்கி விடுப்பா.வேலங்காடு பக்கத்தில்தான். போய் படுத்துகிட்டா செலவு மிச்சம்” என்று ஒரு வழுக்கைத் தலை பெரிய தமாசு சொன்னார். அதற்கு  பஸ்ஸில் ஒரே சிரிப்பு. 

“ஏம்பா,எல்லா வண்டியும் ஒரே மாதிரித்தானே ஒரே வழிதானே போவுது. போற இடத்துக்குத்தானே காசு? கலர் போர்ட்டுக்கா காசு?” என்ற கமலம் பாட்டியின் நியாயமான கேள்வியை இதுவரை ஏன் யாருமே கேட்கவில்லை என்று நினைத்தேன். டீலக்ஸ் பஸ்சில் மட்டும் ஒழுகாமலா இருக்கிறது அல்லது சீட் உடையாமல் இருக்கிறதா என்ன? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அமைச்சர்களுக்கே பதில் சொல்லத் தெரியாதே, நடத்துனர் என்ன செய்வார், பாவம். கோபம் தலைக்கேற கமலம் பாட்டி கையைப் பிடித்து இறங்கு இறங்கு என்றபடி விசில் அடித்து நிறுத்தினார்.

நான் கூட்டத்தில் தடுமாறி கண்டக்டர் அருகில் வந்து “சார், எனக்கு நீங்க தர வேண்டிய பாக்கி 7 ரூபாயிலிருந்து எடுத்துக் கொள்ளுங்க” என்றேன்.
அதற்கு அவர் உன் சீட்ட காமி பின்னாடி எழுதிருக்கனா பாரு” என்றார்.
“ எழுதவில்லை, இறங்கும் போது மூணு ரூபா தந்திட்டு பத்து ரூவா வாங்கிக்க சொன்னீங்க”
 “சரி,சரி, இப்படி எழுதாம இருக்கவே மாட்டேன். நீ தான் சொல்லற. நம்பறேன்”, என்றபடி டிக்கெட் தருவதற்குள் பஸ்சிலிருந்த மக்கள்,
 “ பாரேன் இந்த வயசு காலத்திலும் ஆயா என்னமா சட்டம் பேசுது”. “இறக்கிவிட்டாத்தான் புத்தி வரும்”.
“இன்னிக்கி இதால லேட்”.
“ லேடீஸ் ஸ்பெஷல்” மாதிரி ஆயா ஸ்பெஷல் விட வேண்டும்”
என்றும் கமலம் பாட்டியை இறக்கி விட்டுப் பயணம் தொடர்வதிலேயே ஆர்வம் காட்டியது. கமலம்மாவின் பக்க நியாயமோ, பயணம் செய்யும் உரிமையோ, தைரியமோ எதுவும் அவர்களுக்கு பொருட்டாகத் தெரியவில்லை.

அடுத்த ரவுண்டாணா நிறுத்தத்தில் நிறைய கல்லூரி மாணவர்கள் ஏறினர். கண்டக்டர், பொதுமக்கள் யாரையும் சட்டை பண்ணவில்லை. ஒரே பாட்டும், கூத்தும். கிழவியை இறக்கிவிட அத்தனை ஆர்வம் காட்டிய பொது ஜனம் யாரும் வாயைத் திறக்கவில்லை. வழுக்கைத்தலை ஆசாமி பக்கத்தில் ஒரு சீட் காலியானது அவர் உட்காரப் போகவும், அந்த மாணவர்களில் ஒருவன் தன் பையை அதில் போட சண்டை வரும் சந்தர்ப்பம் உருவானது. ஒரு மாணவன் “தாத்தா உக்கார்ந்துகோ, டேய் பையை எடுடா” என்றான். வழுக்கைத்தலை ஆசாமி உட்கார்ந்ததும், சீட்டின் பின்புறப்பலகையில் தாளம் போட ஆரம்பித்தான் மற்றொருவன். இரட்டை அர்த்தப் பாடல்கள். கூச்சல் . நிற்பதே பரவாயில்லை என்ற எண்ணத்தில் வழுக்கைத் தலையர் இருக்கையிலிருந்து எழுந்து நிற்க ஒருவன்,
“பெரிசு இறங்கப் போறியா? இது பதினாலு கடை அடுத்ததுதான் வேலங்காடு” என்று சொல்லவும் பேய்ச் சிரிப்பு.
“டேய், துலுக்காணம் மவனே, என்னாடா ரொம்ப ஆட்டம் போடற, ஜாண்டாபீஸ் ஷ்டாப்புல டேசன்ல கம்ளேண்ட் சொல்லணுமா இல்லை உங்கப்பன் கிட்ட சொல்லணுமா ” என்றதும் சுவிட்ச் போட்டது  போல்  படு நிசப்தம். கடுவன் பூனையாக இருந்த கண்டக்டர் முதல் எல்லாரும் கமலம் பாட்டியை மரியாதையாகப் பார்த்தனர். பேருந்தின் வலது பக்க இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண்கள் பலருக்கு அப்போதுதான் பொய்த் தூக்கத்திருந்து விழிப்பு வந்தது.

 காந்திநகர் ஸ்டாப்பிங்கில் வழுக்கைத்தலையர் ஐ சி எப் பில் இறங்க தயாராக படிக்கட்டு பக்கத்தில் வந்து நின்றார். வண்டி ஐ சி எப் பிற்கு வலதுபுறம் திரும்ப சிக்னலில் நின்றது. அவமான உணர்வா அல்லது அந்த காட்டுக் கூச்சலா என்று தெரியவில்லை, அவர் முகம் சரியாகவே இல்லை. சதசதவென்று சட்டை வியர்வையில் நனைந்திருந்தது. யாரும் எதிர்பாராவிதமாக பொத்தென மயக்கமுற்று படிக்குப் பக்கத்தில் உள்ள பெண்கள் இருக்கைக்கு அருகில்  கீழே விழுந்தார். அந்த பெண்கள் இருக்கையில் உட்கார்ந்திருந்த கமலம் பாட்டிதான் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து கொண்டிருந்தாள்.


பேருந்து எப்பவோ வேலங்காடு நிறுத்ததைக் கடந்து விட்டிருந்தது .